திங்கள், 17 ஜனவரி, 2011

ஜல்லிக்கட்டு எதன் அடையாளம் ஆதிக்கசாதியா பாரம்பரியமா





நொரண்டு :அலங்கா நல்லூருல ஜல்லிக்கட்டுப்பா

நண்டு :கோ.புதூருல  இருந்தவரை போயிக்கிட்டிருந்தேன் .ஒரு குத்து கூட வாங்கிருக்கேன் .

நொரண்டு :ஏய் ,என்ன சொல்ர ! .அதான் இப்ப எவ்வளவு கண்டிசன்  தெரியுதா ?.

நண்டு : இது தமிழர்களின் மான விளையாட்டுப்பா .உயிரப்பத்தி கவலைப்படரவுங்க மானத்தப்பத்தியும் கவலைப்படவேண்டும் தானே ?.

நொரண்டு :என்ன நீ என்னவோ பேசிக்கிட்டு போர ?

நண்டு :நான் ஏறுதழுவுதல் என்னும் மஞ்சி விரட்டு,சல்லி கட்டு,மாடுபிடினு இப்ப நடக்குற நமது இன உரிமை பத்தித்தாம்பா சொல்ரேன் .

நொரண்டு :இத ஆரியர்களின் அஸ்வமேத யாகத்திற்கு எதிரான  ஒரு நிகழ்வாக கொள்ளலாமா ?

நண்டு :ம் .இது பற்றி இன்னும் சற்று சிந்திக்கவேண்டியிருப்பதால் அது பற்றி யோசித்து சொல்கிறேன்.

நொரண்டு :அவர்கள் குதிரையை முன்னிருத்த தமிழர்கள் காளையை முன்னிருத்தியுள்ளனர் .சரியா .

நண்டு :சற்றேறக்குறைய சரி .

நொரண்டு :இது ஆதிக்கசாதிகளின் அடையாளமா ? 

நண்டு :இது தமிழ் இன அடையாளம் .அப்படியிருக்க எப்படி ஆதிக்க சக்திகளின் அடையாளம் என முட்டாள்தனமாக கூறுகின்றாய்.

நொரண்டு :வந்து ...

நண்டு :என்ன வந்து .உன் அறிவுக்கு தமிழனின் அடையாளம் எது ,எதுவென இனங்கான முடியவில்லையெனில் பேசாமல் இரு .புரியுதா .சும்மா உதார் விட்டுக்கிட்டு தமிழின காவலன் ஆகாத .

நொரண்டு :இல்ல ...

நண்டு :இது நமது  பாரம்பரியம் .ஒவ்வொரு தமிழனின் இரத்தத்திலும் கலந்தது.இதில் போய்  ஆதிக்கசாதியா அப்படி இப்படினு ஏப்பா தமிழினத்தை ஜாதியாக பிரிக்க பாக்கர .இப்படி பிரிப்பதால் உனக்கு ஆதாரம் ஏதாவது ... 

நொரண்டு :இல்லப்பா ...

நண்டு :தமிழனா ஒன்னுசேருவோமையா .இப்படியோ பிரிச்சு பேசி,பிரிச்சு பேசியே ,ஏயா இனத்தை செதக்கிறீங்க உங்க சுயநலத்துக்காக.கண்டத சொல்லி .ஏற்கனவே ஒரு பகுதியில தமிழன் ...

நொரண்டு :அப்படியில்ல ...

நண்டு :அது எப்படியில்லையோ பரவாயில்லை .இனி பாரம்பரியமான விசயங்கள காப்பாத்த பாருங்க .இனத்த சாதியால் பிரிச்சு பிரிச்சு பிச்சராதிங்க உங்க ஈன பொழப்புக்கு ரக்குரக்கா தமிழனின் அடையாளங்கள .

நொரண்டு :முடிவா என்ன சொல்லவர்ர .

நண்டு :இது நமது தொன்மை .இதனை தமிழர்களாக நாம் ஒற்றுமையா அடுத்த நமது சந்ததியினரிடம் பத்திரமாக சேர்க்கவேண்டும் .இது ஒவ்வொரு தமிழரின் கடமையும் ஆகும் என்பதை நினைவில் வையுங்கள். 



. Download As PDF

22 கருத்துகள் :

ம.தி.சுதா சொன்னது…

/////இது ஒவ்வொரு தமிழரின் கடமையும் ஆகும் என்பதை நினைவில் வையுங்கள்////

வச்சுக்கறேன்..


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.

ceekee சொன்னது…

Some safeguards could be introduced to save both the human being and animal from getting hurt seriously. Paramedics, volunteers, medical services and doctors could be stationed nearby.
Almost all the distinct and unique cultural identities of the Thamizhs have either been demolished, destroyed and effaced or cleverly and adroitly suppressed, merged or distorted by other alien and dominating cultures thus rendering him/her a dunce and stooge unaware of his own language, people, history. culture and civilization.
He is branded and paraded as "Hindu" , "Christian" " Muslim " etc on religious lines and "Indian" on nationality. The various political parties in accepting all these artificial and contrived categorizations and also meekly submitting to the linguistic State's lack of sovereignty have thus willingly colluded.
Will Thamizhs ever wake up ?

புருனோ Bruno சொன்னது…

//நண்டு :அது எப்படியில்லையோ பரவாயில்லை .இனி பாரம்பரியமான விசயங்கள காப்பாத்த பாருங்க .இனத்த சாதியால் பிரிச்சு பிரிச்சு பிச்சராதிங்க உங்க ஈன பொழப்புக்கு ரக்குரக்கா தமிழனின் அடையாளங்கள .

நொரண்டு :முடிவா என்ன சொல்லவர்ர .

நண்டு :இது நமது தொன்மை .இதனை தமிழர்களாக நாம் ஒற்றுமையா அடுத்த நமது சந்ததியினரிடம் பத்திரமாக சேர்க்கவேண்டும் .இது ஒவ்வொரு தமிழரின் கடமையும் ஆகும் என்பதை நினைவில் வையுங்கள். //

நச்

goma சொன்னது…

என்னதான் வீர விளையாட்டானாலும் ....எனக்கென்னவோ சரியா படலை...

பொன் மாலை பொழுது சொன்னது…

இப்படி கூடி நின்று ஒரு மாட்டை பிடித்து , பின்னர் அது குத்தி,குதறி குடல் சரிய செத்து வீழ்ந்து.....என்ன வீரமோ விளையாட்டோ. ..? ஏதோ எப்போதோ ஆரம்பித்தார்கள் என்பதற்காக இன்னமும் அவைகளை அதே முறையில் கை கொள்ள என்ன அவசியம்.? அவைகளில் மாற்றங்கள் வருவதில் தவறு ஒன்றும் இல்லை. இதில் வீரம் அல்ல வெறும் வீராப்புதான் தலை தூக்கி நிற்பதாக படுகிறது.

Unknown சொன்னது…

அருமை!

தினேஷ்குமார் சொன்னது…

தமிழனா ஒன்னுசேருவோமையா .இப்படியோ பிரிச்சு பேசி,பிரிச்சு பேசியே ,ஏயா இனத்தை செதக்கிறீங்க உங்க சுயநலத்துக்காக.கண்டத சொல்லி .ஏற்கனவே ஒரு பகுதியில தமிழன் ...

சரியா கேட்டிங்க சார் தமிழன் ஓர் இனம் என்று எண்ணம் கொள்வோம் நம்மில் பிரிவென்பதில்லை என்று உறுதிகொள்வோம் சுயம் வெல்வோம் சூழ்ச்சிகள் கொல்வோம் இனியேனும் உருதிகொள்வோம் ..........

ஆனந்தி.. சொன்னது…

பத்த வச்ச பரட்டை மாதிரி தெரியுதே...:)))))

ஆனந்தி.. சொன்னது…

கக்கு சார் இன் கருத்திலும் சிறிது உடன்படுகிறேன்..என் தோழியின் தந்தை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இறந்து அதுக்கு பிறகு அவர்கள் வறுமையை சந்தித்த பிறகு..இது என்ன புடலங்கா வீரம்னு தான் தோணியது...மதுரைக்காரியா இருந்தாலும்...இந்த எதுக்கும் உதவாத வீர(?!) விளையாட்டுகள் அவளவாய் மனசு ஏற்பதில்லை...கொம்பு சீவிய மாடுகளுக்கு சாராயம் ஊத்தி அனுப்பும் கருமங்களும் அதிகமாய் இந்த விளையாட்டில் நடக்கும் ஒரு பக்க கூத்துக்கள் கூட..பகுத்தறிவுள்ள மனிதன் ஐந்தறிவு மிருகத்துடன் மோதி தன்னை வீரம் என்று நிருபிபதில் என்ன பெரிய சுவாரஸ்யம் னு எனக்கு தெரிய வில்லை...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை...

Chitra சொன்னது…

இரு புற வாதத்தையும் எடுத்து வைத்தாலும் இன்னும் குழப்பமாகத்தான் இருக்குது, எனக்கு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மதனின் வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தில் அழகான நறுக்கென ஒரு வரி சொல்வார் அது : வந்தவர்களை மதம் இணைத்திருந்தது, நம்மை ஜாதிகள் பிரித்து வைத்திருந்தன என, எவளவு உண்மை....!!!

sivakumar சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sivakumar சொன்னது…

மஞ்சுவிரட்டு முன்பு இருந்ததற்கும் தற்போதுள்ளதற்கும் வேறுபாடு உள்ளது. அதாவது 500 ஆண்டுகளுகு முன்பு நாயக்கர் ஆட்சியில் மாறியது. அதற்கு முன்பு இது போல் வெறியேற்றப்பட்ட காளைகளை கூட்டத்திற்கு நடுவில ஓடவிட்டுத் துரத்துவது எல்லாம் இல்லை. சாலைகளில் காளைகளை ஓடவிட்டும் அதைத்துரத்திப் பிடிக்கும் வகையில் இருந்தது. தற்போது ஸ்பெயினில் அது போன்று நடக்கிறது என நினைவு. இது போன்ற மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் துன்பமும் உயிர்சேதமும் விளையும் போதையை ஏற்றி வெறியூட்டி அடக்கும் பண்பாடு தமிழர்களிடம் இருந்திருக்காது என நம்புகிறேன். இருந்திருந்தாலும் அது தமிழனுக்குப் பெருமையல்ல, வீரமும் அல்ல சிறுமைதான்.

ஹேமா சொன்னது…

எங்கள் தொன்மைகளை அடுத்த சந்ததிக்குச் சேர்க்கிறது சரியான விஷயமே.ஆனாலும் இரத்தம் பார்க்க இனியும் தென்பில்லை !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை...

கல்வெட்டு சொன்னது…

.

1.விவசாயம் சார்ந்த மக்கள்.
2.விவசாயத்திற்கு பெரிதும் மாடுகளை (காளைகள்) நம்பியிருந்த சனக்கூட்டம்.
3.பருவம் சரியாக இருந்த காலங்களில் இரண்டாம் போகம் விளைந்து முடிந்து எல்லா அறுவடையும் முடியும் காலம்.
4.விவசாயத்திற்கும் , விலங்குகளுக்கும் நன்றித் திருவிழாவாக ஆரம்பித்த பொங்கல் விழா.
5.இருப்பதை வைத்துத்தான் கொண்டாட முடியும் என்ற அளவில் எருது கட்டு, மஞ்சு விரட்டி,ஜல்லிகட்டு, வண்டிப் பந்தயம், தட்டு வண்டிப் பந்தயம் ...என்று மாடுகளும் மனிதனும் சேர்ந்து கலந்த விளையாட்டுகள்.

6.அதையும் தாண்டி மதுரை (பழைய மதுரை மாவட்டம்) வட்டாரத்தில் ஒவ்வொரு கிராமத்தலும் சில அடிப்படை தெய்வ நம்பிக்கைகள் (சனாதனக் கடவுள் அல்ல. கிராம தெய்வங்கள்) இந்த ஜல்லிகட்டை முன்னிருத்துகின்றன.

7. மாமிசம் ,இரத்தம் , பலி குறித்த நமது இன்றைய கருத்துகளையும் தொன்மங்களில் நிலவிய கருத்தையும் ஒரே அளவுகோலில் அளக்க முயற்சித்தால் குழப்பமே மிஞ்சும்.

8.சேவல் சண்டை முதல் , ஜல்லிகட்டுவரை கிராம தெய்வத்திற்கு இரத்தப்பலியை மறைமுகமாக செலுத்துவதாகவே இருந்து வந்துள்ளது.

****

அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் விவசாயம், மாடு,மனிதன் தாண்டி அந்த ஊர் கிராம காவல் தெய்வமான "முனியாண்டிசாமி" க்கான வருடாந்திரப் பலியும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் இப்படி கிளைக்கதைகள் உண்டு.

வரலாறு அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அந்த வரலாறு நமது குழந்தைகளுக்கு கடத்தப்பட வேண்டும் எந்த இடைச் செருகளும் இல்லாமல். அவர்கள் அவர்களுக்கானதை தீர்மானித்துக் கொள்ளலாம்.

அமெரிக்க வகுப்புகளில் வெள்ளையர்கள் கறுப்பின மக்களையும் , செவ்விந்தியர்களையும் கொடுமைபடுத்தின வரலாறு அப்படியே வெள்ளை ஆசிரியரால் சொல்லித் தரப்படுகிறது. வரலாற்றைத் தெரிந்து இருப்பது அவசியம்.

*

நிச்சயம் ஆண்டான் அடிமைத் தனமும் உட்கார்ந்து பார்க்கும் பண்ணைத் தனமும் பழைய காலத்தில் இருந்திருக்கும். அது போல விலங்குகள் பற்றிய புரிதலும் , அது சார்ந்த மனித வாழ்வும் ஏகத்திற்கும் மாறியிருக்கும் மனித வாழ்வில் இன்றைய ஜல்லிகட்டு என்பது மாட்டுடன் இணைந்து வாழாத , ட்ராக்டர் கூட்டத்தால் சம்பிரதாயமாக பின்பற்றப்படும் ஒன்று. மாட்டிற்குச் சாரயம் என்பது முதல் பல செயற்கை வெறியூட்டும் சமாச்சாரங்கள் உண்டு. இது பண்டைய காலத்தில் இருந்ததா என்று கேட்டால் நிச்சயம் பதில் தெரியவில்லை.

மேலும், கிராமம் என்பது பாரதிராஜாவால் காட்டப்படும் ஒன்று அல்ல. அலங்காநல்லூர் மத்தியத்திடல் இன்று ஜன சமுத்திரம் நிறைந்த ஒன்று. அந்தஊரைச் சுற்றி ஓடும் ஆற்றில் பாசான வசிதியை மேம்படுத்த போடப்பட்ட ஆற்று கான்கீரீட்களால், வழுக்கி விழுந்து காயம்பட்ட மாடுகள் ஏராளாம். ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சுலபமாக கடந்து சென்று தானாக தனது ஊரை அடையும் மாடுகளளுக்கு இப்படியான மனிதத் தடைகள் உயிர்க்கொல்லி.

தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றையும் மாற்றி குட்டிச்சுவாராக்கிவிட்டு, எல்லாவிதிகளையும் தனது சுயநலனுக்காக மாற்றிவிட்டு, விவசாயத்திற்கு மாட்டைப்பயன்படுத்தாத ஒரு கூட்டம் தொன்மை என்ற பெயரில் இதை மட்டும் செய்வதை பண்பாடு என்று எப்படிச் சொல்லலாம்?

கிராமங்கள் சுய சார்ப்பாக இயங்கினால், மாடும் மாடு சார்ந்த வாழ்க்கையாக, ஆறு குளங்களை பாதுகாத்து, இயங்கினால் இந்த மாடு மனிதன் விளையாட்டை இன்றும் பண்பாடாகக் கருதலாம். பொங்கல் அன்ருகூட கேப்பி பொங்கல் என்று சொல்லும் வெண்ணை வெட்டிகள், பண்பாடு என்ன என்றே தெரியாமல் வாழ்வதுதான் பண்பாட்டின் பிரச்சனையே.

வருத்தத்துடன்.....

கல்வெட்டு சொன்னது…

//தமிழனா ஒன்னுசேருவோமையா .இப்படியோ பிரிச்சு பேசி,பிரிச்சு பேசியே ,ஏயா இனத்தை செதக்கிறீங்க உங்க சுயநலத்துக்காக.கண்டத சொல்லி .ஏற்கனவே ஒரு பகுதியில தமிழன் ..//

பூணூலை அறுத்துவிட்டு
சிலுவையை எறிந்துவிட்டு
தொப்பியை கழட்டிவிட்டு
பட்டையையும், நாமத்தையும் அழித்துவிட்டு
எல்லாச் சாதியையும் ஒழித்துவிட்டு
தமிழன் என்ற இன அடையாளத்தில் மட்டும் சேர எத்தனைபேர் தயார்?

உங்கள் குழந்தைகளையாவது நீங்கள் பின்பற்றும் சாதிக்கும் மதத்திற்கும் நேர்ந்துவிடாமல் தமிழனாய் மட்டும் இருக்கச் சொல்ல துணிவில்லாதவர்கள் பேசவேண்டாம்.

THOPPITHOPPI சொன்னது…

//இப்படி கூடி நின்று ஒரு மாட்டை பிடித்து , பின்னர் அது குத்தி,குதறி குடல் சரிய செத்து வீழ்ந்து.....என்ன வீரமோ விளையாட்டோ. ..? //

இப்படி கேட்டுட்டிங்க?

ஏதாவது முட்டாள்தனமா செய்து செத்தால் தான நம்மள வீரன்னு சொல்லுவானுங்க.

Unknown சொன்னது…

பழந்தமிழரின் வீரத்தை வெளிப்படுத்துவதாக இருந்த மஞ்சு விரட்டு, தற்போது அதன் உண்மை வடிவத்தை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. தமிழ் மரபு காக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது என்றாலும் கூட, அவை வெறும் அர்த்தமில்லா உயிர் இழப்புக்களை உருவாக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு சரி என்று பதிவை படிக்கும் போது தோன்றும் எண்ணம், பின்னூட்டங்களை படிக்கும் போது அலைவுறுவதை தவிர்க்க இயலவில்லை.

ரோஸ்விக் சொன்னது…

//பூணூலை அறுத்துவிட்டு
சிலுவையை எறிந்துவிட்டு
தொப்பியை கழட்டிவிட்டு
பட்டையையும், நாமத்தையும் அழித்துவிட்டு
எல்லாச் சாதியையும் ஒழித்துவிட்டு
தமிழன் என்ற இன அடையாளத்தில் மட்டும் சேர எத்தனைபேர் தயார்?

உங்கள் குழந்தைகளையாவது நீங்கள் பின்பற்றும் சாதிக்கும் மதத்திற்கும் நேர்ந்துவிடாமல் தமிழனாய் மட்டும் இருக்கச் சொல்ல துணிவில்லாதவர்கள் பேசவேண்டாம்.

//

இதுக்கு நம்மில் எத்தனை பேரிடம் பதில் இருக்கு?

மதுரை சரவணன் சொன்னது…

சல்லிக் கட்டுதுங்க உங்க இடுகை...பகிர்வுக்கு நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "