வியாழன், 11 டிசம்பர், 2014

சில பாரதி தீ கவிதைகள்


சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.

@ .@ .@. @ .@ .@

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்

@ .@ .@. @ .@ .@


கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

@ .@ .@. @ .@ .@


தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;

@ .@ .@. @ .@ .@

மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?

@ .@ .@. @ .@ .@

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

@ .@ .@. @ .@ .@

பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.



@ .@ .@. @ .@ .@


நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,


@ .@ .@. @ .@ .@



இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.








....


பாரதியின் பாடல்கள்  .

பாரதியின் நினைவாக .


இன்று பாரதியின் பிறந்த தினம் .




Download As PDF

புதன், 10 டிசம்பர், 2014

கூத்தாடிகளின் தமிழ்ஆட்சிஅரசுகள் தமிழுக்கு செய்த துரோகங்களும், நந்தவனத்து ஆண்டியும், தமிழன் போண்டியும்.


நந்தவனத்தில் ஓர் ஆண்டி ...தமிழன் போண்டி ....
தமிழன் போண்டி ....நீ ஆடு பாண்டி ...

ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிக்கா
ஜிங்...
ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜாக்கா....
ஜிக்கா
ஜிண்ஜக்கா...ஜிண்ஜக்கா ..ஜிக்கா


நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி  .....
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி ....
ம்.....
கொண்டுவந் தானொரு தோண்டி...
அதை ...
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...
ம்... ம்...ம் ... ம்:  நொரண்டு   

நண்டு :  என்ன நொரண்டு ஒரே பாட்டா இருக்கு.

நொரண்டு :  ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜா.
ஜிங்...
ஜிண்க்கா...ஜிண்க்கா ..ஜிண்ஜாக்கா....ஜிண்க்கா

நண்டு : என்னப்பா ? .என்னாச்சு ?.

நொரண்டு : அட இந்தப்பாட்டு தெரியாதா உனக்கு.
இது காடு வழியோ,கடுவெளியோ ,என்னமோ ஒரு சித்தர் பாடல் .
எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நண்டு : ஓ.

நொரண்டு :  இதுக்கு அர்த்தம் தெரியுமா ?.

நண்டு :  செல்லுப்பா ,என்ன ?.

நொரண்டு நந்தவனத்தில இருந்த ஆண்டி  ஒருத்தன்  ,பிச்சை எடுக்க , குயவனை நச்சு நச்சுனு நச்சி , பிச்சை பாத்திரத்த ( தோண்டி ) ஒன்னு , வாங்கிவந்தத்தனாம் .புது தோண்டி கிடைச்ச சந்தோசத்தில ,கூத்தாடி கூத்தாடி,போட்டு உடைச்சுட்டானாம்.அதிகம் ஆடுன அம்புட்டுத்தான் , இதன் தத்துவம் .

நண்டு : நீ  ஜிண்க்கா  இப்ப போட்ட மாதிரி.

நொரண்டு : ஏய் என்னப்பா ,எனக்கே வா ? .

நண்டு : இது சித்து .

நொரண்டு : அப்படினா ?.

நண்டு : சித்து  ,நேரடியாக தரும் பொருளை விட மறைமுகமாக தரும் பொருள் மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.அது தான் சரியானது.

நொரண்டு :அப்படினா சித்து சுத்துனு சொல்ர.

நண்டு : ஆம். அப்படித்தான்.

நொரண்டு : சித்து தெரியுது ,சுத்து என்ன ?.

நண்டு :  பல உண்டு.

நொரண்டு என்ன பலதா.

நண்டு :  ஆமாம்.

நொரண்டு :சரி சிலத சொல்லு.

நண்டு :  முதல ,எனக்கு  தெரிஞ்சத சொல்ரேன்.

நொரண்டு :ம்...

நண்டு : நந்தவனத்தில் ஓர் ஆண்டி- நந்தவனத்தில் இருக்கும்  ஆண்டியை ஏன் பாடனுங்கரது என் முதல் கேள்வி ?.

நொரண்டு :சரிதான் .ஆமாம்,ஏன் சுடுகாடு,கோயில் இப்படியான இடத்தில இருக்கிற ஆண்டிகளை பாடாம, ஏன்  நந்தவனத்தில் உள்ள ஆண்டிய வைத்து பாடினார் ?.

நண்டு :பாடல் படி ,குயவனை வேண்டினால் ,தோண்டி கிடைக்கும் ,ஒரு தோண்டி போனால் என்ன ?.அடுத்து வேண்டவேண்டியது தானே அடுத்த நாலாறு மாதம்?.

நொரண்டு :ம்.

நண்டு :  தோண்டி கிடைத்ததற்கு கூத்தாடியதும் ,உடைந்ததற்கு வருத்தப்பட்டதும் ஆண்டிகளின் இயல்பில்லையே ?.

நொரண்டு : ஆமாம்,ஆண்டிகளில் இயல்பில்லை தான் .

நண்டு : ஆண்டிகள்  மகிழ்ச்சி,துக்கம் எதுவும் இல்லாதவர்கள்.

நொரண்டு :ஆமா இல்ல ! ?.

நண்டு :   ''பிச்சையென் றொன்றுங்கே ளாதே '' என பாடி தோண்டி மேல் பற்று வைக்க காரணம்.

நொரண்டு :ஓ

நண்டு : இது தமிழின் நிலையையும்,மக்களின் நடவடிக்கையையும் நகைப்பதோடு ,தமிழ் அரசுகளை ஏளனம் செய்தும் ,தமிழ் அரசுகள் தமிழுக்கு செய்யும்  துரோகத்தை ,தமிழக மக்களின் கூத்தாடிகளின் மீதான பேதை நிலையை சுட்டிக்காட்டியும் செல்வதை உணர்ந்தேன்.

நொரண்டு :எப்படி சொல்ர.

நண்டு :  ஒரு சின்ன சோதனை.

நொரண்டு : சொல்லு செஞ்சரலாம்.

நண்டு :  எந்த காலத்துக்கு இந்த பாடலை பொருத்திப்பார்க்களாம்.

நொரண்டு :எப்படி பொருந்தும்.

நண்டு :  ம்.ஒரு  சிறு விளக்கம் மட்டும் தரேன்.நீ பொருத்தி பார்.அப்புறம் தெரியும் ,சித்தர்களின் சித்துக்கள்.

நொரண்டு :சரி சொல்லு ...முயற்...சிக்..கிறேன்.

நண்டு :நன்று.

இப்பாடலில்,

நந்தவனம் என்பது  அனைத்து விதத்திலும் செழுமையாக இருந்த தமிழ் தேசத்தை  குறிக்கிறது.

 நொரண்டு : சரி .

நண்டு : ஆண்டி என்பவர் தமிழ் ஆதையை குறிக்கிறது .

 நொரண்டு : சரி . 

நண்டு: குயவன் என்பவர் இங்கு வாழ்ந்த திருவள்ளுவர், தொல்காப்பியர்,சித்தர்கள் போன்ற தமிழ் மூதாதைகளை குறிக்கிறது.   

நொரண்டு : சரி .

நண்டு : தோண்டி என்பது இங்கு அள்ள அள்ள குறையாது ,புதுப்புது கருத்துக்களை உற்பத்தி செய்து வரும் மெருகேற்றப்பட்ட இலக்கியமும் , அதன்பால் வளமான இலக்கணத்தையும் கொண்ட  தமிழ் மொழியை குறிக்கிறது .

நொரண்டு சரியாக சொல்லப்போனால்.

நண்டு : வழக்கு மொழியினின்று  மேன்மையாக்கப்பட்ட தமிழ் மொழியை குறிக்கிறது .

நொரண்டு : சரி .

நண்டு : மெத்த கூத்தாடி மற்றும்  கூத்தாடி  என்பது ஆண்ட மற்றும் ஆளத்தெரியாத கூத்தாடி நபர்களையும் மற்றும் கூத்தாடி நபர்களையும் , அவர்கள் மக்களிடம் எப்படி நடிப்பது என்பதனை சரியாக தெரிந்து நடிப்பதையும்,கூத்தாடிகளிடம் நாட்டை ஒப்படைத்து தமிழர்கள் வேடிக்கை பார்ப்பதையும்.கூத்தாடிகள் அவர்களின் கூத்தை மட்டுமே ஆடு ஆடு என ஆடி  .... ம் ...என்ன சொல்ல ....சமீப காலத்திற்கு பொருத்திப்பார்.  

நொரண்டு : சரி .

நண்டு :சரி சொல்லிக்கிட்டு இருக்காத .பொருத்திப்பார்.

நொரண்டு :நீயே சொல்லப்ப,எனக்கு புரியல.

நண்டு :செழுமைப்படுத்தி  நமக்கு நமது முன்னோர்கள்  விட்டுச்சென்ற நமது தமிழ் மொழியை தமிழகத்தை ஆண்ட,ஆளும் கூத்தாடி அரசுகள் மேலும் செழுமைப்படுத்தாமல் தமிழுக்கு துரோகம் செய்து தமிழையும், தமிழர்களையும் நடுக்காட்டில் விட்டுவிட்டனர் .

நொரண்டு   ஆமாம் சரி தான் சொன்ன . நீ எப்படி இந்த முடிவுக்கு வந்த?.

நண்டு : திருவள்ளுவர்,தொல்காப்பியர்,சித்தர்கள் இவர்கள் போன்றவர்கள்  எல்லாம் அரசர்கள் அல்ல.

நொரண்டு : அரசர்களால் போற்றப்பட்டவர்களும் அல்ல.

நண்டு :அது ஒரு பார்வை.ஆனால்,தூரத்து பார்வை.

நொரண்டு :ம்...

நண்டு :தனிப்பட்ட தமிழர்களால் தான் தமிழ் என்றும்  வளர்ந்து வந்துள்ளது என்பது வரலாறு.

நொரண்டு : இப்ப கூடவா.

நண்டு :  எப்பவும் ,
இப்ப கூட  சமீப காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகள் , சிறு பத்திரிக்கைகள் செய்த சேவைகள் சில மிகவும் சிறப்பாக இருந்து வந்தது. இவைகள் தனிநபரால் இயக்கப்படுபவைகள்.
ஆனால் ,அப்படிப்பட்ட ஒரு சேவையைக்கூட  அரசு செய்யவில்லைனு தான் சொல்லனும்.

நொரண்டு :ம்.

நண்டு :துரோகங்களை சொல்லனும்னா ,சொல்லிக்கிட்டே  போகலாம்.

நொரண்டு : ஓ

நண்டு : ஆனால்,தமிழன் ஒன்றே ,ஒன்றை புரிந்துகொண்டு நடக்கவேண்டும் .

நொரண்டு : எதப்பா.

நண்டு : அதையும் சித்தரே சொல்ரார்.

நொரண்டு :என்னானு ?

நண்டு : 
  

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"


நொரண்டு : ஓ...சரி தான் .ஆனா  'பரமனை நத்தியே' னா ?.

நண்டு : இதுவும் சித்தின் சுத்து தான் .

சித்தர் பாடலில் மறைத்துள்ள இரகசியம்
 இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

Download As PDF

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புகைப்பட மழலை

 

.

அம்மா அரவணைப்பில்
அப்பா அன்பில்
அம்மாயி செல்லத்தில்
உடையில்லா
துள்ளிய மனத்தில்
கைகால்களை ஆட்டி
ஆர்பரித்த
ஆர்ப்பாட்டத்தில்
புகைப்படமான
மழலை

எங்கோ தொலைந்து விட்டது
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

வீடு மாற்றியபொழுது
என்
மழலைப்புகைப்படம்   


.

( இங்கு வீடு   ஒரு குறியீடு .) ----




Download As PDF

வியாழன், 12 ஜூன், 2014

கால்பந்து கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு .

.

கால்பந்து விளையாட்டு மட்டுமன்று,
விளையாட்டு மட்டுமேயன்று,
விளையாட்டு மட்டுமேயாக மட்டும் கிடையாவே கிடையாது ...

கால்பந்தை
' விளையாட்டு ' என்ற பதத்தில் மட்டும் வைத்துப்பார்க்கக்கூடாது .
அது மிகப்பெரிய தவறு ...

கால்பத்து என்பது
கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு ஆகும்...

எங்களின் கைகளில் நீங்கள் உண்கின்றீர்கள் .
அதற்காக  எங்களின் கைகளை நீங்கள் கட்டிப்போட்டாலும்,
வெற்றியை நாங்கள் எங்களின் கால்களில் மூலம் அடைகின்றோம் ....
இது கால்பந்தின் அடிப்படை .

கால்பந்து கூலிகளின் கனவு .
குடிசைவாசிகளின் ஆறுதல்.

உண்மையான கால்பந்தாட்ட வீரர் பணத்திற்காக விளையாட மாட்டார் .
அப்படி விளையாடுபவன் கால்பந்தாட்ட வீரனில்லை ,
அவன் கால்பந்து விளையாடத்தெரிந்தவன்,
கால்பந்தின் ஆன்மாவை கொன்றவன் ஆவான்.

கால்பந்தானது வெவ்வேறு வடிவங்களில் தற்போது விளையாடப்பட்டுவருகிறது...

Download As PDF

திங்கள், 9 ஜூன், 2014

பின் நாக்கு சித்தரும் நானும் .








சொத்து வந்து சேர்ந்த தால்
சித்து வந்து  சூழ்ந்த தோ

சித்து வந்து  சேர்ந்த தால்
சொத்து வந்து சூழ்ந்த தோ

சொத்த சொத்து சொத்தை சொத்து
சுத்த சுத்தில் இல்லையே

சித்து பார்க்க சித்து பார்க்க
சொத்தை சொத்து இல்லையே

சொத்தை போயி சித்து போயி
சுத்தி மீளும் மானிடா

சொத்துமில்லை சித்துமில்லை

சிர  சுத்தியாகி போய்விடு
கிரி  சித்தமாகி போய்விடு.

 சித்து 1...
......

சித்து என்பது மிகவும் கவனமாக பர்க்கவேண்டிய ஒன்று.
சித்தர்கள் பற்றியும் அவர்களின் தன்மைகள் பற்றியும் ,சித்து பற்றியும் மக்கள் இன்றுவரை தவறான பார்வையையே வைத்துள்ளனர் என்பது எனது கருத்து மட்டுமல்ல ,உண்மையும் கூட.

கடந்த செவ்வாய் சென்னிமலை கோவிலுக்கு சென்றிருந்தேன்.
இரவு 8,9 மணி இருக்கும்.அன்னதானம் நடந்து கொண்டிருந்தது.
சாப்பிட்ட அனைவரும் செல்வந்தர்கள் .
குழந்தைகளும்,முதியோரும் உணவின்றி இங்கு அனேகஆசிரமத்தில் அனேகர் உள்ளனர்.அவர்களுக்கு உணவளிக்கலாமே .
சரி இது அவரவர் விருப்பம்.



மேலே உள்ள சித்து 1...எனது ஆக்கம்.

ஓவியம்  எனது  தூரிகை தீண்டலில் சென்னிமலை .


சித்தர்கள் பற்றியும் அவர்களின் இரகசியம் பற்றியும் இனி பார்ப்போம்....




Download As PDF

புதன், 21 மே, 2014

மோடிஜி ஊழலை ஒழிக்க லோக்பாலை விட மிகவும் வலிமையான WHITEBOX யை கொண்டு வருவாரா?.


லோக்பால் என்பது வீட்டிற்குள் சுத்தம் செய்வது போன்றது .


ஆனால் வீட்டை சுற்றி...அதையும் தாண்டி ஊரை நாட்டை என சுத்தம் செய்யாமல்?. யாருக்கும் பலன் இல்லாமல் ,மீண்டும் ,மீண்டும் பழைய இடத்திற்கே வந்து நிற்பதற்கு பதிலாக ,ஒட்டுமொத்த அமைப்பின் குறைபாடுகளையுமே களைய லோக்பாலை விட மிகவும் வலிமையான  WHITE BOX முறை தான் இன்று இப்பொழுது மிகவும் அவசியமாக உள்ளது . இந்த WHITE BOX முறையால் தான் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் .மற்றவைகளினால் சிறிய அதிர்வை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர வேறு ஒன்றையும் சாதிக்கப்போவது இல்லை .

WHITE BOX  என்பது புகார் பொட்டி .இது தூய்மைப்படுத்தும் செயலை செய்வதால் .தூய்மையைக்குறிக்கும் வெண்மை நிறத்தின் பெயர் பெறுகிறது .இந்த புகார் பெட்டிக்கும் மற்றைய புகார் பெட்டிக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் ,இந்த WHITE BOX ல் அளிக்கப்படும் புகாரின் மீது நடத்தப்படும் விசாரணைக்கும் மற்றைய புகார் பெட்டிகளில் அளிக்கப்படும் புகாரின் மீது நடத்தப்படும் விசாரணைக்கும் உள்ள நடைமுறைகளினால் தான் இது  சிறப்பு பெறுவதோடு ,தனது தூய்மைச்செயலையும் இது செய்வதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது .

இப்படி சிறப்புவாய்ந்த WHITE BOX என்ற புகார் பெட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் மற்றும் அரசிடம் அனுமதி பெற்று இயங்கும் அனைந்து அலுவலகங்களிலும் ,நிறுவனங்களிலும் கட்டாயம் வைக்கப்படவேண்டும் .அலுவலகத்தில் பாதுகாப்பான இடத்தில் மக்கள் அணுகும் வண்ணம் ,அறியும் இடத்தில் வைக்கப்படவேண்டும் .24 மணி நேரமும் மக்கள் பயன்படுத்தும் படியான ஏற்பாட்டுடன் அதன் அமைவிடம் அமையவேண்டும்.பாதுகாப்பு இருக்கவேண்டும் ,ஆனால்,கண்காணிப்பு எதுவும் இருக்கக்கூடாது .இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள WHITE BOX ல் மக்கள் அச்சமின்றி புகார்களை தெரிவிக்க விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும் .


WHITE BOX  புகார் பெட்டியில்  ஊழல்,சுரண்டல்,லஞ்சம் பெறுதல், கொடுத்தல்,சரியான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துதல்,தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சரிவர செய்யாதிருத்தல்,கலப்படம் செய்தல், கையாடல் செய்தல் ,சுற்றுப்புற சீர்கேடுகள் செய்தல்....இன்ன பிற இது போன்ற எந்த புகார்களையும் எங்கும் வேண்டுமானாலும் மனுவாக அளிக்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது .இங்கு அளிக்கப்படும் புகாரின் மீது விசாரிந்து நடவடிக்கை எடுக்க குற்றம் சாட்டப்பட்டவர் முறையான அனுமதி என்ற பதத்தை  பயன்படுத்த தகுதியில்லாதவராகிறார் .அரசியல் அமைப்பு குறிப்பிட்டுள்ள அனைத்து நபர்களும் இதன் மூலம் விசாரிக்க எந்த தடையும் இல்லாத அளவில் உருவாக்கப்பட்ட ஒரு புகார் முறை . 

WHITE BOX ல்  புகார் கொடுப்பவர் தனது பெயரை தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை .பெயர் குறிப்பிட்டால் சரியான நடவடிக்கை உதவியாக இருக்கும் .

WHITE BOX ல் அளிக்கப்படும் புகார்களை வாரவாரம் கடைசி வேலை நாளில் கடைசி மணி நேரத்தில் WHITE BOX வைக்கப்பட்ட இடத்தில் உள்ள பணிப்பதிவேட்டில் முதலில் உள்ள நபர் முதலில் என தொடங்கி பின் அடுத்தவர் என சுழற்சிமுறையில் தலைமையை உருவாக்கி அனைவரின் முன்னிலையிலும் WHITE BOX  அவ்வலுவலத்தில் திறக்கப்படவேண்டும்.

தலைமை ஏற்றவரால் யார் யார் மீது என்ன என்ன புகார் வந்துள்ளது என்பதனை அனைவரும் அறிய படிக்கப்பட்டு ,புகாரின் தன்மைக்கேற்ப உரிய சட்டப்படியான உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .தலைமை ஏற்றவரின் மீதே புகார் இருக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்த புகாரில்லாத பணிப்பதிவேட்டில் அடுத்துள்ள நபர் தலைமை ஏற்கவேண்டும்.இங்கு உயரதிகாரி ,கடைநிலை ஊழியர் என பேதம் இல்லை.அனைவரும் ஒரு வாரம் தலைமை வகிப்பர் .

புகார்கள் பற்றிய முழுவிவரங்களையும் அந்த அந்த அலுவலக அறிவிப்புப்பலகையில் கட்டாயம் ஒட்டப்படவேண்டும் .அன்றே வட்டார புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட புகார்களைப்பற்றிய விவரங்களையும் , நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் ,மேல் நடவடிக்கை எடுக்கவும் வட்டார புகார் ஆணையம் ஒன்று அமைக்கப்படவேண்டும்.அது அந்த அந்த வட்டாரத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் சம்பந்தாமான அனைத்து விசயங்களையும் அவைகள் பரிசீலிக்கவேண்டும் .அவைபற்றிய அனைத்து விபரங்களையும் வட்டார புகார் ஆணையத்தின் அலுவலக அறிவிப்புப்பலகையில் கட்டாயம் ஒட்டப்படவேண்டும் .வட்டாச்சியர் வட்டார புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

வட்டார புகார் ஆணையம் தான் பெற்றவைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விவரங்களை 15 நாட்களுக்கு ஒரு தடவை மாவட்ட புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வேண்டும்.அங்கு அவைகள் பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டு அது சம்பந்தமாக எடுக்கப்பட்ட விபரங்களை  தனது அறிக்கையாக 30 நாட்களுக்கு ஒரு முறை மாநில புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்ட வேண்டும்.மாவட்ட ஆட்சியர் மாவட்ட புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

மாநில புகார் ஆணையம் தம்முன் கொண்டுவரப்பட்ட புகார் மனுக்கள் சம்பந்தாமான அனைத்து விசயங்களையும் பரிசீலிக்கவேண்டும் . மேலும் பத்திரிக்கை ,செய்தி நிறுவனங்கள் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் மூலம் 45 நாட்களுக்கு  ஒரு முறை புகார் மனுக்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் .அது சம்பந்தமான மத்திய புகார் ஆணையத்திற்கு பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட்ட வேண்டும்.மாநில தலைமை செயலர் மாநில புகார் ஆணையத்தினை வழிநடத்தவேண்டும்.

மத்திய புகார் ஆணையம் ஒன்றை அரசு ஏற்படுத்த வேண்டும் .அதன் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து  மாநில புகார் ஆணையத்தினையும் வழிநடத்தவேண்டும்.மத்திய புகார் ஆணையத்தில்,ஒரு தலைமை புகார் ஆணையரும் மற்றும் 4 புகார் ஆணையர்களும் அதற்கான நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படவேண்டும் .

இவ்வாறு அமைக்கப்படும் புகார் ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு  அங்கீகாரம் கொடுக்கப்படவேண்டும் .

இவ்வாறு ஒரு விரிவான அமைப்பை ஏற்படுத்தினால் தான் இந்தியா தூய்மைப்படும் .

எனவே  லோக்பாலுக்கு பதிலாக அதை விட வலிமையான WHITE BOX  எனும் புகார் ஆணையத்தை நிறுவுவதே நலம்.

எனவே

மோடிஜி அவர்கள்  ஊழலை ஒழிக்க லோக்பாலை விட மிகவும் வலிமையான WHITEBOXயை கொண்டுவருவாரா இல்லை மாற்று எதையாவது தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






இப்படிப்பட்ட  இன்றைய இந்திய அரசையும்,அரசியலையும்  விட



தூய்மையான இந்திய அரசையும் ,அரசியலையுமே  நான் விரும்புகிறேன் .



.


( படங்கள் உதவி கூகுள் மற்றும் இணையம் நன்றி ) .மீள்வு.
Download As PDF

திங்கள், 19 மே, 2014

ஓட்டுக்கு 200 ரூபாயும் 144ம் தமிழக பாஜகா கூட்டணிக்கு தோல்வியும் ஏன்?




நொரண்டு :வணக்கம் நண்டு

நண்டு : வாங்க நொரண்டு

நொரண்டு :ம் ...தேர்தல் முடிவுகள்.

நண்டு : எதிர்பார்த்த ஒன்னு தானே.

நொரண்டு :ஆமாம் ,ஆனால் எனக்கு சரியா ,விளங்கும்படி வெற்றி ,
தோல்விக்காண காரணத்த சொல்லு .

நண்டு : சொன்னா விழங்கிடும் வெளங்கி.

நொரண்டு :சும்மா சொல்லுப்பா.

நண்டு :  சும்மா ,சும்மா ,சொல்லி என்ன பிரயோசனம்.

நொரண்டு :சொல்லுப்பா.

நண்டு :மோடி அலையை தமிழகத்தில் தடுத்து நிறுத்திய  நீலகிரி மலை.
20 சதவீதம் மோடி அலையை தடுத்தது இது தான்.

நொரண்டு : ம்...

நண்டு :  ரஜினி,விஜய் போன்ற பிரபலங்களை மோடி சந்தித்ததும் ,அதில் ஒரு வாய்ஸை மக்கள் எதிர்பார்த்தும் , வாய்ஸ் இல்லாத்தால் ,மக்கள் .ஓ ,அம்மா தான்  ஜெயிக்பாங்க போல, அதனல தான் இவங்க வாய்ஸ் கொடுக்க மாட்டேங்கராங்க போல ,என்ற ஒரு உளவியல் ஓட்டம் தமிழக மக்களிடையே ஏற்பட்டது.இது  25 சதவீத மோடி அலையை மேலும் வீழ்த்தியது. விஜயகாந்தின் மீது மக்கள் வைத்திருந்த இமேஜை இந்த சந்திப்பு 30 சதவீதம் சரித்தது .இந்நிகழ்வு  நடந்திருக்கவே கூடாது.தமிழக மக்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளாத சந்திப்புகள் என்பதை இது காட்டுகிறது. 

நொரண்டு : ஓஓஓஓஓஓ.......

நண்டு :வைகோ வின் அழகிரி சந்திப்பும் இத்தகைய பலனையே அவருக்கு தந்துள்ளது.

நொரண்டு :ம்....

நண்டு :யார் ஜெயிச்சாலும் மோடிக்குத்தான் ஆதரவு என்ற பொதுக்கருத்து ஓட்டம்,15 சதவீத மோடி அலையை பிரித்தது.

நொரண்டு :ம் ... 

நண்டு ;  மேலும்,கட்சிகளுக்குள்ளே ஒற்றுமையில்லை.

நொரண்டு :ம்...

நண்டு : கூட்டணித்தலைவர்கள் ஒற்றுமையுடன் ஒன்றாக பிரச்சாரம் செய்யாமை.

நொரண்டு :ம்...

நண்டு : புதுச்சேரி பிரச்சனை.

நொரண்டு :ம்...

நண்டு : இரண்டாவது அதிமுக போன்று செயல்பட்ட தன்மை.

நொரண்டு :ம்...

நண்டு :அதிமுகவின்  தயவு என்றும் தேவை என்ற கருத்தோட்டம்.

நொரண்டு :ம்...

நண்டு : பாஜகாவினை மக்களிடையே தாமதமாக கொண்டுசென்றது.

நொரண்டு :ம்...

நண்டு : ஊடகங்களை சரியாக பயன்படுத்தாமை,ஊடக மக்களையும் சரியாக பயன்படுத்தாமை. 

நொரண்டு :ம்...

 நண்டு : மகத்தான வெற்றிக்கூட்டணி ,ஆனால் மகத்தான உள்குத்துகள்.

நொரண்டு :144 பற்றி.

நண்டு :  சரியான செயல் .இது இல்லையெனில்,தமிழகம் அமைதியை இழந்திருக்கும்.

நொரண்டு : ஓட்டுக்கு 200 ரூபாய்...

நண்டு :அதில்  எனக்கு நம்பிக்கையும் இல்லை ,அதனால் தான் அதிமுக வென்றது என்பதுவும் உண்மையில்லை, உண்மையில் தங்களின் தோல்வியை  மறைக்க கட்சிகள் போடும் வெற்று கூச்சல்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.அதிமுகவின் வெற்றியில் பாடம் கற்காமல் ,அதன் வெற்றியை விமர்சிப்பதில் கவனம் செலுத்தி ,தங்களின் தவறுகளை கண்டடைவதில் தோல்வியை தழுவியும்,மக்களையும் குழப்பி,ஏமாற்றும் , FRAUD செயல் அவ்வளவே.இதில் பலன் ஏதும் இல்லை.கட்சி தலைமையை ஏமாற்றலாம்.அவ்வளவே.

நொரண்டு :ம் ....

நண்டு : இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதில் ரகசியங்களும்  நிறைய உண்டு.


நொரண்டு :சொல்லவேண்டியது தானே .


நண்டு : இது பற்றி  கட்சி தலைமைகள் கேட்டால் மட்டுமே உரிய பதில் சொல்லுவேன்.

நொரண்டு :ஏன் ?

நண்டு :உனது அறிவை நான் வலைப்பதிவை ஆரம்பித்த நாளிலிருந்து தெரிந்து வருவதால் ,உன் கிட்ட சொல்லி ஒரு பயனுமில்லை.

நொரண்டு :கடைசியா என்ன சொல்ல வர்ர

  நண்டு : இந்த தேர்தலில் விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியினர் மற்றும் மோடி ஆகியோர் மட்டுமே  தமிழகத்தில் பாஜகா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உண்மையான அற்பணிப்புடன் செயல்பட்டனர் என்பதுவே உண்மை.இதற்காக விஜயகாந்த் மற்றும்  அவரது  மனைவி அவர்களை பாராட்டியே அகவேண்டும்.

  நொரண்டு :ம்....

நண்டு : தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவில் மிக அதிக மாற்றம் வேண்டும்.

நொரண்டு :சரி

நண்டு :தேமுதிகவிற்கு தோல்வியில்லை,ஏமாற்றம்  மட்டுமே.பாடம் கற்க வேண்டும் இன்னும்.

நொரண்டு :சரி.

நண்டு :அதிமுகவிற்கு மிக அதிக பொறுப்புகளை மக்கள் அளித்துள்ளனர்.அதனை அவர்கள் நிறைவேற்றவேண்டும்.

நொரண்டு :சரி.

நண்டு :  திமுக தன்னை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.


நொரண்டு : காங்கிரஸ் ...

நண்டு : நான் தற்போது விடைபெறுகிறேன்.

நொரண்டு :ம்...வா.


படங்கள் உதவி நன்றி கூகுள் மற்றும் இணையம்.
Download As PDF

ஞாயிறு, 18 மே, 2014

மறைந்து போனவர்களின் மரணவாக்குமூலங்கள்.


கைகளில் உணவுப்பாத்திரத்துடன் தாத்தா,
கடல் சூழ்ந்த அத்தீவின்
மத்தியிலுள்ள ஒரு பாழடைந்த குடிலுக்கு
வெளியே தட்டுத்தடுமாறிக்கொண்டு .

முற்றத்தில் காத்திருக்கின்றன
இரைக்காக சேவல்கள்
தாத்தாவை பார்த்தபடி .

வெட்டவெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்
தாத்தாவைப் பார்த்து ஓடிவந்து
அவரின் கைகளை பிறாண்டுகின்றனர்.

ஊமைகளின் பாஷையை
ஊமையாகிப்போன தாத்தா உணர்ந்து
வீட்டினுள் நகர்கின்றார் .

காலம் தாத்தாவாகி.
காலம் என்னை தாத்தாவாக்கி ...

திடும்...திடுமென
மறைந்து போனவர்களின்
மரண ஓலங்கள்

தீவு முழுவதும் .

இவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை,

இருந்தாலும்

ஏன்,ஏன்,ஏன் ?..?..?..? என்ற கேள்வியுடன்
பயணிக்கின்றன
ஓலங்கள் ...
ஓலங்கள் ...
ஓலங்கள்...
தாங்க முடியாத படி ...
காதை கிழிக்கின்றன.

எங்களின்
ஒவ்வொருவரின் கல்லறையிலும்
எழுதுங்கள் ...
எழுதுங்கள்...
எங்களின் இறப்பிற்குக்காரணம்....
எங்களின் இறப்பிற்குக்காரணம்....
என
ஒவ்வொரு இறப்பும்
ஓலமிட்டபடி
கையில் ஏதோ குறிப்பு சுற்றப்பட்டு
ஆயிரக்கணக்கில்...


என்னுள் ஓலங்களை அடக்க ,
எனது காதுகளை அறுத்தெறிந்து
என் கைகள்
ஒவ்வொரு திறந்த வாயையும்
வேகவேகமாக மூடிக்கொண்டே செல்கின்றன

ஒன்று,
இரண்டு ,
...
முப்பதாயிரம்...
நாப்பதாயிரம் ...
நீண்டு கொண்டே செல்கின்றன வாய்கள்...
திடுமென ஒரு குழியில்
நான் வீழும் வரை .
இது குழி அல்ல
இரத்தக்குளம் என
உப்புக்கரிப்பை உணர்த்திய வாய் கூறியது.
விடுபட கைகளை அசைத்தபொழுது
ஆமி களின் துப்பாக்கி வெடிப்புகள்
திடுமென மூளையை அழுத்தியது.
வெடிப்பின் திசை நோக்க
பீரங்கிகளின் பெருநெருப்பில்
வாய்மூடிய உடல்கள் ,
சிதறல் சிதறலாக சிதற ,
சிதறல்கள் முழுதும் என் முகத்தில்,

ஆமியிடம் தப்ப
இரத்தத்தில் மூழ்கினேன் .

தாகம் ,தாகம் ,தாகம்...
கண்கள் இருண்டன .
உடல் கனக்க ஆரம்பித்தது .

தீர்க்கப்பட்டது தாகம் .

இனிய குளிர்ந்த நன்னீர் என்னைச்சுற்றி  இப்பொழுது .
கைகளை அசைத்துபடி வானத்தில் பறந்தபடி .
இறக்கைகள் வெப்பமுற
ஓய்வெடுக்க
முள் மலையில் இறங்கிய,
இரண்டு நிமிட ஒய்யாரத்திற்குள் ,
கொல்... கொல்...
சப்தம் கேட்டு எழ .
ஆயிரம் ரவைகள் துரத்த ,
வேகமாக பறக்க எண்ணி
இறக்கைகளை விரித்து
வேக வேகமாக அடித்துக்கொண்டே
தரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன
என் கால்கள்.



தொடரும் ....
.


.
Download As PDF

வெள்ளி, 16 மே, 2014

3 வெற்றிகள் 1 இந்தியமக்களுக்கு 2 மோடிஜிக்கு 3 எனக்கு,இனி ஆடுவோமேபள்ளு பாடுவோமே.

வெற்றியை தந்த இந்திய தங்கதாமரைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள் பல.


மோடிஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 

இது 17 ஏப்ரல், 2014  அன்று போட்ட பதிவு .பார்க்க 

365 எம்.பி க்களுடன் நரோந்திர மோடி பிரதமர் ஆகிறார்.வருக,வருக,வாழ்த்துக்கள் மோடிஜி.

 

இதற்கு வந்த கருத்துரைகள் சில - பார்வைக்கு

G.M Balasubramaniam சொன்னது…
அப்படிநடக்குமானால் இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்
P.S.Narayanan சொன்னது…
எவ்வளவு கூட்டிக் கழித்தாலும் 230க்குமேல் வரவில்லை: இது காவிக்கும்பல் கவைலையோடு சொன்னது. ஆனால் நீங்கள் இஷ்டம் போல 365 என அவிழ்த்து விடுகிறீர்கள்...

தனிமரம் சொன்னது…
கொஞ்சம் பேராசைதான்!
kari kalan சொன்னது…
கனவு காண்பது என்று முடிவெடுத்த பின்னால் எதுக்கு ஒரு கஞ்சத் தனம்? சும்மா ஒரு 500 தொகுதின்னு அடிச்சி விட வேண்டியது தானே. காசா, பணமா..... :))
gurumoorthy சொன்னது…
vilankipogum

juneeb saikh சொன்னது…
பகல் கனவு பலிக்காது பார்போம் ?????????????

 

ஏதே பேராசை கனவு கொண்டு போடப்பட்ட பதிவாக பலரும் பார்த்தனர்.

 

பேராசை கொண்டு போடப்பட்ட பதிவல்ல என்பதை தற்பொழுது வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள்  பறைசாற்றுகின்றன.

 

 நான் உலகை சுவாசிப்பவன் ,இந்தியாவை நேசிப்பவன்.

 இந்தியாவை நேசித்ததால்  இதனை கணிக்க முடிந்தது.

 

எந்த கருத்துகணிப்பும் 15ல் இருந்து 20எண்ணிக்கை முன்பின் இருக்கும்,ஏனெனில்,543 தொகுதிகளையும்  கருத்தில் கொண்டு கணிக்கும் பொழுது இந்த வித்தியாசம் கட்டாயம் வரும்.

 

தமிழகத்தில் பாஜக தனித்தே நின்றாலும் வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் பல கிடைக்காமல் போனது பாஜகவிற்கு பின்னடைவே.தமிழகத்தில் இப்படி நடக்கும் என்பது எனக்கு முன்பே தெரியும், அதனை கருத்தில் கொண்டும், தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களின் நிலையை அறிந்தும் தான் நான் 365 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என முடிவுக்கு வந்தேன்.இன்னும் வலுவான உத்தியை கையாண்டிருந்தால் 400 க்கு மேல்  பாஜக ஆயத்தமாகியிருக்கும்.

 

தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் 

 

உண்மையில் இது  இந்தியமக்களுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றி யாகும்.

 

இரண்டாவது மோடிஜி அவர்களின் உறுதிக்கும் உழைப்பிற்கும் தேசப்பற்றிற்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

 

மற்றும் 

 

எனக்கும்,எனது கணிப்பிற்கு கிடைத்த மகிழ்வான  வெற்றியாகும் இது.

 

வெற்றியை தந்த இந்திய தங்கதாமரைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள் பல.


மோடிஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 

நல்லவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டோம் ,

இனி  ஆடுவோமே பள்ளுபாடுவோமே.


வாழ்க பாரதம்.

படங்கள உதவி நன்றி இணையம் மற்றும் கூகுள்.

Download As PDF

திங்கள், 12 மே, 2014

அடிமாட்டுக்கு விற்கப்படஉள்ள 60000 ஜல்லிகட்டுகாளைகள் அனைத்தையும் அரசே ஏற்கவேண்டும். .




நொரண்டு :வணக்கம் நண்டு.

நண்டு :வாங்க நொரண்டு.

நொரண்டு :ஜல்லிகட்டு ???

நண்டு : என்ன தெரிஞ்சுக்கவேண்டும்.

நொரண்டு :தடை பற்றி

நண்டு : முதலில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தடைவிதிக்கப்பட்டது.

நொரண்டு : ஓ அப்படியா .

நண்டு :ஆமாம்,பின் கொஞ்சம்கொஞ்சமா தளர்ந்தது .

நொரண்டு :ஓ...

நண்டு : தற்போழுது உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது .

நொரண்டு :ம் ...

நண்டு :  சரி அதப்பத்தி என்ன ?.

நொரண்டு :இல்ல,கிட்டத்தட்ட 60000 ஜல்லிகட்டு காளைகள் அடிமாட்டுக்கு விற்கப்பட உள்ளதாக செய்தி வருகிறதே அதப்பத்தி ,என்ன செய்தால் அவைகள் காப்பாற்றப்படும்?

நண்டு :  பிரச்சனை இல்ல ,அனைத்து காளைகளையும் அரசே ஏற்கவேண்டும்,அவ்வளவே.

நொரண்டு :சரி தான்,அடிமாட்டுக்கு விற்கப்பட உள்ள 60000 ஜல்லிகட்டு காளைகள் அனைத்தையும் அரசே ஏற்கவேண்டும் என்பது எனது கோரிக்கையாகவும் முன்மொழிகிறேன்.

நண்டு :  
ஜல்லிகட்டு காளைகளை காக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என  சமூக,விலங்கின ஆர்வளர்களை மிகவும் பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சமூக,விலங்கின ஆர்வளர்கள்  நடவடிக்கை எடுப்பர் எனவும் நம்புகிறேன்.



 படங்கள் உபயம் இணையம் நன்றி
Download As PDF

வியாழன், 8 மே, 2014

ஜாதி ,மதம், தீண்டாமை X சமச்சீர்கல்வி .


இன்று சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று ஓரளவிற்கு தெரியவந்துவிட்டது.ஆனால்,இன்னும் கல்வி சம்பந்தமாக விழிப்பு வரவில்லை.அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் எத்தகைய கல்வி இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு அரசியல் தளத்தில் முதலில் இருக்கவேண்டும் என்பதுவே முக்கிமான ஒன்றாகும் .

இன்றைக்கு நமக்கு சமச்சீர் கல்வி என்பதை விட பொதுக்கல்வியே மிகவும் அவசியமான கட்டாயமான ஒன்று.  ஆனால்,இதன் தேவை மற்றும் அவசியம் பற்றி எந்தவித கவலையும்,பார்வையும் இல்லாமல் மக்களும், சமத்துவம் , சகோதரத்துவம்,பகுத்தறிவு ,முதலாளி,தொழிலாளி ,ஒடுக்கப்பட்டவர் என , எதையாவது கூறிக்கொண்டு ,அனுதினம் ,போராட்டத்தில் குதித்து, தாங்களை மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் ,அனைத்து கட்சிகளும், இருப்பது அறியாமையிலா? இல்லை ,அனைத்திலும் பாசிச குணம் புகுந்துவிட்டதாலா ? என்பது ஆராயக்கூடிய விசயமாக உள்ளது .
அறியாமையில் என்றால் உணர்த்தலாம்,
பாசிசம் என்றால் துரத்தி துடைப்பதைத்தவிர்த்து வேறு வழியே கிடையாது .

தீண்டாமை ஒழிப்புக்காக காந்தி,பெரியார்,அம்பேத்கார் மற்றும் பல பெயர் தெரிந்த,தெரியாத தலைவர்கள் மற்றும் முகம் தெரியாத ,பாதிக்கப்பட்ட அனைவரின் உயிர்,உழைப்பு ,கஷ்டம் மற்றும் கனவிற்கு மருந்தாக உள்ளது தான் நமது அரசியலமைப்பு கூறும் கல்வி என்ற அடிப்படை உரிமை. அப்படிப்பட்ட அடிப்படை உரிமையான கல்வியில், பொதுக்கல்வி முக்கியமான காரணியாக இருந்து நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயர்வு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது .

அடிப்படை உரிமை கல்வி என்னும் பொழுது ,
அனைத்து கல்வி நிலையங்களையும் ,அரசே நடத்த வேண்டும்.
அது தான் சரி,அது தான் சட்டமும் கூறுகிறது.
அப்படி அரசே ஏற்று நடத்தும் பொழுது ,
அண்மைப்பள்ளியில் தான் அனைவரும் படிக்கவேண்டும் .
அப்பொழுது தான் அனைவரும் ஒரே குடையின் கீழ் படிப்பர்.
அப்படி குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கும் பொழுது ,
குழந்தைகளின் மனதில் எத்தகைய ஜாதி மதபோதங்களும் இல்லாத  காரணத்தினால்,அவர்கள் இயல்பாகவே,  தாங்கள் எந்தவித ஜாதி ,மத , தீண்டாமை பேதமின்றி,ஒருவருடன் ஒருவர்,நன்றாக பழகி,
ஒரே தன்மையினராக வளர்வர்.
இவ்வாறு ஜாதி மத போதமின்றி ,தங்களுக்கிடையே ,தீண்டாமை என்னும் பாவங்கள் இன்றி ,ஒத்த மாணாக்கர்களாய் வளர்வர்.
அவ்வறு அவர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தான் ஜாதி,மத,தீண்டாமை என்னும் கொடுமைகளை  சமுதாயத்திலிருந்து மாய்க்கமுடியும்.

அதை விடுத்து
நாம் ஜாதியை,மதத்தை மரமாக பள்ளியில் வளரவிட்டு ,
பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது முட்டாள் தனமாகும் ,
5 ல் வளையாதது 50 ல் வளையாது .

ஜாதி,மத போதம் ஒழியவேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும் என நினைக்கும் மக்களின் காவலர்கள் இதனை  உணர்ந்து உடனே பொதுக்கல்வி என்னும் அனைவருக்குமான தரமான ஒரே கல்வியை அமுல்படுத்த இணைந்து போராட வேண்டும் .

ஜாதி ,மதம் ஒழிந்தால்,வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
தீண்டாமை  என்ற அறியாமை அகன்றுவிடும் .






குழந்தைகளை பாருங்கள் .....

அவர்களிடம் அன்பு என்ற ஒன்றைத்தவிர்த்து வேறு எதுவும் இருப்பது இல்லை .

நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை  குழந்தைகளாக வளர்ப்போமாக .




.
சற்றே மாற்றத்துடன் இது ஒரு மீள்வு.
 அசலை இங்கே  பார்க்க.
Download As PDF

புதன், 7 மே, 2014

சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் .







கல்வி என்ற விசயத்தில் நாம் அனைவரும் ஒன்றும் அறியாத அறிவற்றவர்களாகவே இன்னும் இருக்கின்றோம் .

சட்டம் என்ன சொல்கிறது நடைமுறையில் என்ன என்பதனை கல்வியாளர்கள் என்று கூறித்திரிபவர்களும்,கல்வியாளர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்களும், இன்னும் இது விசயமாக அலட்டிக்கொள்பவர்களும்,ஆதங்கப்படுபவர்களும் சிறிதும் சிந்தித்து செயல்பட்டது போல் தெரியவில்லை .
அனைவரும் இந்த விசயத்தில் படிப்பறிவில்லாதவர்களாகவா உள்ளனர் என்ற கேள்வி என்னுள் எழுந்துகொண்டே இருக்கிறது .

முதலில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளவேண்டும் .
அது நமது அரசியல் அமைப்புச்சட்டம் .
இந்திய அரசியல் சாசனம் என்பது
இந்தியர்களாகிய நாம் ,
நாம் பெற்ற விடுதலையை பேணிக்காக்கவும் ,
நமக்காக நம் உரிமைகளை வலியுறுத்து நிலைநாட்டிக்கொள்வதற்கும் வழங்கிக்கொண்ட உரிமை சாசனம் .
இது நமது உயிர்.
இதனை மீறிய சட்டங்கள் எதுவும் இல்லவே இல்லை.

நமது அரசியல் சாசனத்தின் 86 வது திருத்த சட்டம்
THE CONSTITUTION (EIGHTY-SIXTH AMENDMENT) ACT, 2002
[12th December, 2002.]


An Act further to amend the Constitution of India. .
BE it enacted by Parliament in the Fifty-third Year of the Republic of India as follows:-

1. Short title and commencement.- (1) This Act may be called the Constitution (Eighty-sixth Amendment) Act, 2002.
(2) It shall come into force on such date as the Central Government may, by notification in the Official Gazette, appoint.


2. Insertion of new article 21A.- After article 21 of the Constitution, the following article shall be inserted, namely:-

Right to education.-

"21A. The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such
manner as the State may, by law, determine.".

3. Substitution of new article for article 45.- For article 45 of the Constitution,the following article shall be
substituted, namely:- .

Provision for early childhood care and education to children below the age of six years.

"45. The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the
age of six years.".


4. Amendment of article 51A.- In article 51A of the Constitution, after clause (J), the following clause shall be added,
namely:-

"(k) who is a parent or guardian to provide opportunities for education to his child or, as the case may be, ward between
the age of six and fourteen years.".

இது ஆகும் .

new article 21A ''The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such
manner as the State may, by law, determine'' என கூறுகிறது .
இதன் படி அரசு கட்டாயம் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கவேண்டும் .
இதன் படி free and compulsory education to all children of the age of six to fourteen years அரசு மட்டுமே தரவேண்டும்.
அரசுக்கு மட்டுமே அதனை செய்யவேண்டும் .

மேலும்
new article "45. The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the age of six years.".ஆனது
''இந்த அரசியல் சாசனம் துவக்கப்பட்டுப் பத்தாண்டுகளுக்குள் குழந்தைகள் அனைவரும் பதினான்கு வயது முடிவடையும் வரையில் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெற்வதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்'' என்பதற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு new article 21A வழி வகை செய்துவிட்டபடியால் இங்கு இவ்வாறு வகைமை செய்யப்பட்டுள்ளது .



இப்படி அரசியல் அமைப்புச்சட்டத்தில் வகைமை செய்த பின் அரசு கல்வி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என பல அமைப்புகள் எப்படி இருக்க முடியும் ? .அரசு அனுமதிப்பது முறையா ?.எதன் அடிப்படையில் அனுமதிக்கிறது ?.
.
மேலும் கல்வி ஒரு அடிப்படை உரிமையான பிறகு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆதாரக்கல்வியை போதிக்க எதன் அடிப்படையில் அரசு அனுமதிக்கிறது ?.அரசு அனுமதிப்பது முறையா ?.

இவைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்றல்லவா ? .


new article 21A ன் படி நமது நாட்டில் ஒரு மூலையில் உள்ள மாணவர் என்ன படிக்கின்றாரோ அதனையே எங்கும் உள்ள அனைத்து மாணவர்களும் படிப்பார்கள் .அதுவும் அவர்வர் தாய்மொழியில் .அவ்வளவே.இதில் குழப்பம் எதுவும் இல்லை .மொழி,இனம்,பண்பாடு பாதிக்கும் என்ற அச்சத்திற்கு இடமில்லை.உலகிலே மிகச்சிறந்த கல்வியை ,மற்ற நாடுகளுக்கு முன்னுதரமாண கல்வியை அளிக்கமுடியும்.

அரசியலமைப்பு சட்டம் இப்படி கூறும் சூழலில் சமச்சீர் கல்வி என்ற ஒன்றே ஒரு அரசியல் தேசிய அபத்தம் ஆகும் , அல்லவா ?.

ஏன் இதனை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரியவில்லை ?

1970 ஆம் ஆண்டை சர்வதேச கல்வி ஆண்டாக .நா அங்கீகரித்தது.அதிலிருந்து ஆதாரக்கல்வியை உலகிலுள்ள அனைத்து குழந்தைகளும் பெற எண்ணிலடங்கா நிதிகளை அளித்துவருகிறது .நாம் தான் ஆதார கல்விக்கு சரியாக,சரியான நிதிகளை ஒதுக்க முடியாவிட்டாலும் ..நா வின் நிதியையாவது முறையாக பயன் படுத்தியுள்ளோமா என்பதுவும் கேள்விக்குறியாகவே உள்ளது .

ஆதாரக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் 8 ஆண்டுகள் என்பது காந்தியின் கனவு.



காந்தியின் கனவு நனவாகும் காலத்தை எதிர்பார்த்து.




இது  ஒரு மீள் பதிவு
 அசல் கட்டுரையை இங்கேசென்று பார்க்க 



.

Download As PDF