செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

O +ve இரத்தம் உடனடி தேவை





சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினரால்
கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிவரும்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
ஒருவருக்கு அவசரமாக உயிர்காக்க O+ve பிரிவு இரத்தம் தேவை.மேற்கண்ட இரத்தப் பிரிவினர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

செய்தியைப் படித்தவுடன் O+ve பிரிவினைச் சேர்ந்தவன் என்பதால் SMS அனுப்பிய சென்னை கோயம்பேடு இந்தியன் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

IC வார்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர். வயதானவர் உடல் முழுவதும் கட்டுக்களுடன் மூக்கில் ஆக்ஸிஜன் ஏற, பல இணைப்புகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தார். டாக்டர் என்னிடம் இரத்தத்தை எடுத்தபொழுது பெரியவருக்குத்தான் தேவையாக இருக்கிறது.
தங்களின் உதவிக்கு நன்றி என கூறினார்.

பெரியவரின் தீட்சண்யமான கண்கள் என்னை மிகவும வசீகரித்தது.அவர் என்னை சைகை செய்து அழைத்தார். கைகளை மெல்ல வருடி அருகில் அமர்த்தினார். பாரத மாதாவே என்னை தன் மடியில் அமர்த்தியது போன்ற உணர்வு.

ஐயா, நலமாக உணர்கின்றீர்களா என்றேன்.

ம் ...என்றார்.

பின், பையா நாளிதழ்களும், பிற வார இதழ்களும், பேப்பரும் பேனாவும் கொண்டு வந்து உதவ முடியுமா என்றார்.

என்னால் மறுமொழி கூற முடியவில்லை.

எனது கை பலத்த அடிபட்டுள்ளது நான் கூறுவதை எழுத்தர முடியுமா என்றார்.

சரியென அவரின் முன் அமர்ந்தேன்.

பையா, அதற்கு முன் இவற்றைப் படியென இரண்டு துண்டு செய்திகளைக் கொடுத்தார்.

'' நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும்வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங்கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாக படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் செத்தேரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம தோன்ற வேண்டும்
என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமைகாட்டி விட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.
- ஜெனரல் டயர் ''

'' 1917 டிஸம்பரில் பரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது ராஜத்துரோக விசாரணைக் குழுமம் Sedition Committee ரௌலட் கமிட்டி என்ற பெயரில் பின்னர் பிரசித்தமானது. 1918 ஜூலை, இக்கமிட்டி தன் ரிப்போர்ட்டை அச்சிட்டு வெளியிட்டது. இந்த ரிப்போர்ட்டின்படி,இந்தியாவில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு குண்டர்களின் கலகஆர்ப்பாட்டம்-குண்டர்கள் என்றால், கொள்ளை கொல்லை புரியும் தீயர்கள்! இவ்வறிக்கை மேலும் முயன்று நிலைநாட்டப் பார்த்த கண்டுபிடிப்புகள் - இந்திய தேசபக்தர்கள் யாவரும் அராஜக வாதிகள், கொள்ளை, தீ வைப்பு, அடிதடி கொலை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களால் சமூகத்துக்கு பேராபத்து தான் விளையும், நாட்டில் அமைதி குலையுமோ என்கிற அச்சத்துக்கு இடமுண்டு- என்பனவாம்!. இப்படிப்பட்ட குற்றவாளிப் புள்ளிகளை அடக்குவது மேன்மேலும் கடினமாகி வருவதால் அதற்கான புதிய சட்டங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றும் இந்த ரிப்போர்ட் கூறிற்று. ''

படித்துவிட்டுப் பார்த்தேன்.

கம்பீரமான குரலில் எழுது என்றார்.

சென்னை ., 22..2.2009,

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனது அன்பினிற்கினிய நண்பர் டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு, எப்படி உள்ளீர்கள், நாம் சந்தித்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. நலமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கின்றேன்.

என் மனஅழுத்தம் காரணமாகவும், சொல்லவெண்ணா துயரத்தின் காரணமாகவும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களைத் தவிர இத்தருணத்தில் எனக்கு ஆறுதலும், ஜனநாயகத்திற்கு பாதுகாப்புத் தரும் உரிய அறிவுரைகளும் தருபவர்கள் உலகில் வேறுயார் இருக்கின்றார்கள். சுதந்திர நாட்டின் குடிமக்கள் தங்களின் சீறிய அறிவின் துணை கொண்டு மேலும் நாட்டை வளப்படுத்தி தாங்கள் உலகிலே தலைசிறந்த ஜனநாயக வாதிகளாக ஆக்கிக் கொள்வர் என்று நினைத்தோம். ஆனால் இன்று ஜனநாயகத்தை கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டிருப்பதனைப் பார்த்தால்
மிகவும் வேதனையாக உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது, நீதிபரிபாலணம் எப்படி நடக்கிறது. என்பதனை நேரில் கண்டுவர சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். அன்று மாலை திடுதிடுவென்று எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல், முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் மீது கொடூர தாக்குதலை ஏற்படுத்தியதோடு நீதிமன்றத்தின் மீது தாக்குதல்களை நடத்தினர் காக்கி உடையணிந்த கும்பல் .. எனக்கு தூக்கிவரிப்போட்டது. யார் இவர்கள் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் எனத் தெரியாமல் திகைப்புடன் நின்று கொண்டிருந்த என்னை டே கிழவா, நீ யாருடா?, வக்கீலா ?என்றார் ஒரு காக்கி உடையணிந்தவர். ஆம் என்றேன். எத்தனை பேர் எனறு தெரியவில்லை. சரமரியாக என்னைத் தாக்கினர் . என்னை கொலை செய்யும்பொழுது கூட இப்படிப்பட்ட வலியை நான் உணரவில்லை. பின் மயங்கி விழுந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரிக்கைகள் மூலம் உலக நடப்பும் அதற்குப் பின்னிட்டு
நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் யாவற்றையும் தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவும் பிறவற்றிற்கும் எனக்கு சில சட்டத்திற்கு சட்ட விளக்கம் வேண்டியிருப்பதாலும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட யார் யாருக்கு கடிதம் எழுதுவது என்பது குறித்தும் தங்களின் மேலான ஆலோசனைக்காகவும், அறிவுறுத்தலுக்காவும் இக்கடிதத்தை
எழுதுகின்றேன். எனது கருத்தையும் தெரிவித்துள்ளேன். உரிய உயரிய பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். ஜனநாயகம் காக்க நமது பணியை தொடர வேண்டும என நினைக்கின்றேன். தங்களின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.


ஜனநாயக சுதந்திர நாட்டில் நாடு முழுவதும் Democratic Machine ஒரு விநாடி கூட நின்றுவிடாமல் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நாட்டின் எப்பகுதியிலாவது ஒரு பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தடுக்கப்பட்டால்கூட அங்கு கொடுங்கோலாட்சி நடக்கிறது என்பதுதானே உண்மை.


மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படும்பொழுது அதற்கு அவர்கள் நிவாரணம் கேட்கும் உரிமை உண்டு. ஒரு வினாடி கூட அது மறுக்கப்படவோ, தடுக்கப்படவோ கூடாது.எச்சூழலிலும் அப்படி எங்கேனும் ஒரு மூலையில் ஏதேனும் ஒரு பாமரனுக்கு மறுக்கப்பட்டிருந்தாலும் ஜனநாயக இயந்திரம் இயங்கவில்லையென்றே பொருள் கொள்ளலாம் அல்லவா?.

நீதிமன்றங்கள் என்பது ஜனநாயக இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றது என்பதனை உறுதிசெய்யும் ஒரே அமைப்பாகும். நீதிமன்றங்கள் தனது நீதிபரிபாலணத்தை தொடர்ந்து 365 நாட்களும் 24 மணி நேரமும் 60 நிமிடங்களும் 60 விநாடிகளும் இடைவிடாது செலுத்திக்கொண்டே இருக்குமிடத்தில்தான் ஜனநாயகம் சிறப்பாக இயங்குகிறது, இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு குடிமகன் தனக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளலாம். அந்த உரிமையை யாரும் எப்பொழுதும் மறுக்கவோ, தடுக்கவோ கூடாது என்பதுதானேஉண்மை. இது குறித்து விரிவான விளக்கம் கூறவும்.

சென்னை மாகாணம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் 4 நாட்கள் குடிமக்கள் அனைவருக்கும் அவரவர் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது குறித்து தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

சென்னை மாகாணம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் தாளிட்டு இருந்ததை அறிந்து வெட்கித் தலை குனிகின்றேன். என்னை மீண்டும் கொலை செய்ததாகவே உணர்ந்தேன். என்ன கொடுமை,என்ன கொடுமை. வெட்கம், வெட்கம். இந்தியா ஜனநாயக நாடு தானா, இல்லை வேறு எதுவுமா?
ஜனநாயகத்தைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் அவர் அவர்கள் வேறு எதுஎதுவோ பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும், விசாரணை செய்து கொண்டும் இருக்கின்றனரே.
ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒன்று இவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்து கொண்டும் யாரையோ காப்பாற்ற ஓடுகின்றார்களா?

சட்டத்தின் பாதுகாப்பு தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 4 நாட்கள் சென்னை மாகாணம் முழுவதும ஜனநாயக உரிமை, குடிமக்களுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. அதனை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதனை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். 'இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஷரத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டால், இச்சரத்து இல்லாமல் இருப்பின் அரசியலமைப்பே செல்லாத ஒன்றாகக் கூடிய ஷரத்தைத் தவிர வேறு எந்த ஷரத்தையும் நான் குறிப்பிட மாட்டேன். இது அரசியலமைப்பின் இருதயம் ஆகும். என ஷரத்து 32-யை குறிப்பிட்டீர்கள். ஷரத்து 32 மற்றும் 226 ஆகியவைகள் இரண்டும எவ்வளவு முக்கியமான ஒன்றாகும். அரசியலமைப்பின் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படும்பொழுது, உச்ச நீதிமன்றம் நீதிப் பேராணை வெளியிட அதிகாரம் படைத்துள்ளது. 'அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்" என சிறப்பாக உச்சநீதிமன்றம் அழைக்கப்படுகிறது. அப்படியிருக்க மேற்கூறிய நான்கு நாட்கள் சென்னை மாகாணாத்தில் எந்த ஒரு குடிமகணும் அடிப்படை உரிமைகள் மற்றுமல்லாமல் சாதாரண உரிமைகள் மீறப்பட்டதற்கும்கூட நீதிமன்றத்தினை அணுகமுடியாதபடி அதனை அடைத்து, முடக்கி வைத்தது எச்சட்டப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி நீதிமன்றங்களை முடக்கி வைக்க அதிகாரம் உண்டா? அத்தகைய அதிகாரம் யாரிடம் உண்டு? அப்படி ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்களை எப்பொழுது, எக்காரணத்திற்காக மூடி வைக்க முடியும்? மூடிவைக்க முடியுமா? அப்பொழுது Democratic Machine இயங்கவில்லை என்றுதானே பொருள். அப்படி இயங்காதபட்சத்தில் அதற்கு பொறுப்பு யார் ஏற்க வேண்டும். மூடுவதற்கு ஜனாதிபதி (அ) ஆளுநரின் உத்தரவு உடனே பெற வேண்டுமா இல்லையா? நீதிமன்ற நிர்வாகத்திற்கு அத்தகைய அதிகாரம் எச்சட்டத்தின் வழி கொடுக்கப்பட்டுள்ளது? எவ்வாறு? யாருக்கு? அப்படியே கொடுக்கப்பட்டிருந்தாலும் அது சரியா? சட்டத்தின் பாதுகாப்பை முடக்க முடியுமா? அப்பொழுது பாதிக்கப்பட்ட நபர், ஜனநாயக உரிமை பாதிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற முடியுமா? யாரிடம் இழப்பீடு கேட்பது? யார் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதற்கு தாங்கள்தான் சரியான பதிலையும், ஆலோசனைகளையும், அறிவுறுத்தலையும் தர வேண்டும்.

நான் இங்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது என்னவெனில் சென்னை மாகாணத்தில் கடந்த சில நான்கு நாட்களாக நீதிபாரிபாலணம் நடைபெறவில்லை என்பதோடு, அங்கு மக்களுக்கு நீதிமன்த்தால் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பதுவே. மேலும் இதுபோன்று இனி எப்பொழுதும்
நடைபெறக்கூடாது என்பதுவும் ஆகும். இது ஒரு ஜனநாயக அசிங்கம், கேவலம், இதற்கு தார்மீகப்பொறுப்பேற்று இந்த ஜனநாயக படுகொலைக்கு உரியவர்கள் தங்களின் பதவியினை ராஜீனாமா செய்ய வேண்டும் என்றும், ஜனாதிபதி இது சம்பந்தமாக இதுவரை எந்த கண்டனமோ, அறிக்கையோ மற்ற எதுவுமோ கூறாமல் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது. அதுபோலவே கவர்னாரின் செயலும்.நாட்டில் ஒரு பகுதியில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சூழலில் அத்றகு தார்மீகப் பொறுப்பேற்று அவர்கள் ராஜீனாமா செய்தாலும் மகிழ்வேன். ஜனநாயகத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையாக நினைத்து பெறுமைப்படுவேன்.

ஆனால் மிகவும் வருந்தத்தக்க விசயம் என்னவெனில் மிகப்பெரிய அரசியல் ஜனநாயகப் படுகொலை நடத்திவிட்டு, வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாகத்தான் இதுவெல்லாம் நடந்ததாகஒரு மாயையை ஏற்படுத்தி தப்பிக்கப்பார்ப்பதை என்னால் ஒத்தக்கொள்ள முடியவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது வாழ்க்கையல் செளரி சௌரா நிகழ்ச்சியில் காவல் நிலையத்தை காவலர்களை உள்வைத்தே,ஆங்கிலேய ஏகாதிபத்தியம் போராட்டத்தை திசை திருப்பி நெருப்பிட்டு ,அடக்கு முறையை அப்பாவி இந்தியமக்களின் மீது போட்டதோடு நானும், எனது போராட்டத்தை விளக்கிக் கொள்ளும்படி செய்தனர். பின்னிட்டுத்தான் காவல்துறையின் சூழ்ச்சிகளைப்புரிந்துகொண்டு செயல்பட்டேன். பிட் நோட்டீஸ் அடிப்பது, வன்முறையை மறைமுகமாகத் தூண்டுவது போன்ற செயல்களுக்கு அவர்கள்தான் காரணம் என.

மேலும் ஒன்றை உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். விரைவான நீதி கிடைக்கத்தானே நாம் எவ்வளவோ சட்ட முன் வரைவுகளை வெளியிட்டோம். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அரசின் பேருந்துகள் ஜப்தி செய்து வைத்துள்ளதாக எனக்கு தெரிய வருகின்றது. இது என்ன நடைமுறை கலெக்டர் அலுவலகம் ஜப்தி, பேருந்து ஜப்தி என. ஏன் அரசிடம் நேரடியாக பெற எத்தனையோ வழிகள் இருக்க ஏன் மக்களுக்கு தாமதமாக நீதி வழங்க வேண்டும். இது குறித்து தாங்கள், மக்கள் விரைவாக நீதி கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளது, எது செய்யலாம் என்பது குறித்து தக்க ஆலோசனைகள் கூறவும்.

மேலும், பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில முதல் மந்திரி ஷபாஸ் ஷொரிப்பை அந்நாட்டு சுப்ரிம் கோர்ட் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதற்காக தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும், முதல்வர் பதவியில் நீடித்திருப்பதற்கு தடை வித்துத்துள்ளது.

இது குறித்து எனக்கு உள்ள சந்தேகம் என்னவெனில்,ஆங்கிலேயே நீதித்துறையைப் பற்றி எனது பார்வையை நான் கண்ட அவலத்தினின்று கூறிக்கொள்கின்றேன். ஆங்கிலேயே ஆட்சியில் பணிபுரிந்தவர்கள் சம்பளத்திற்காகவும், பதவி உயர்விற்காகவும் புகழிற்காகவும், அரசை மிகவும் சார்ந்து, அரசு சொல்வதை ,நினைப்பதை,இம்மி பிசகாமல் தங்களின் நீதிபரிபாலணத்தை காட்டிவந்தனர். உயர் பதவியே குறிக்கோளாகவும்,மிகவும் சொகுசுக்காகவும், அந்த சொகுசு நீடிக்க அரசுக்கு எது வேண்டுமானாலும் செய்து வரும் ஏஜெண்டுகளாகவும் இருந்து வந்தனர். மொத்தத்தில் அரசு வழக்கறிஞர்களாகவே இருந்து வந்தனர். நான் வாதாடிய வழக்குகளாகட்டும், எனது போராட்டங்களுக்கு எதிராக அவர்கள் போட்ட வழக்காகட்டும், அவர்கள் ஒருபொழுதும் அரசின்  விசுவாசத்தினின்று பிறழ்ந்ததே கிடையாது. எனது வாழ்க்கைப் பயணத்தின் நெடுக இவ்வாறே பார்த்திருந்தேன்.நியாயமும் ,மனிதாபிமானமும் அவர்களிடம் என்றும் நான் பார்த்தே இல்லை .

சுதந்திரத்திற்கு முன்பே நீதித்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர நினைத்தேன். அதற்கு முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அந்த அமைப்புகள் அப்படியே தொடர்ந்தால் அந்த அந்த அமைப்புகளில் பதவியில் அமர்பவர்கள் அதே போன்று கட்டப்பஞ்சாயத்து மனோநிலையிலேயே நடந்து கொள்வார்கள் என்று எனது மனதில் ஒரு நமைச்சல் இருந்து வந்தது. விரிவாக செயல்படுத்துவதற்கு முன் என்னை படுகொலை செய்துவிட்டார்கள். நான் அப்பணியை சரியாக செய்யாததன் காரணமாகத்தான் என்னவோ, நாம் பெற்றுத்தந்த சுதந்திர நாட்டில் இன்னும் மக்கள் அதனை பூரணமாக அனுபவிக்க முடியாமல் அவதிப்படுகின்றார்கள் போலும்.

மேலும், அரசியல் சாசன உரிமைகள் குற்றவழக்கு பின்னணியால் எப்பொழுதும் பாதிக்கப்பவதில்லை. அரசியல் குற்றம் என்பது வேறு, சமூக குற்றம் என்பது வேறு. இவற்றை உணர்ந்து நீதிமன்றங்கள் செயல்படுவதாக தெரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாடுகளின் நீதிபதிகள் சர்வாதிகாரிகள் போல் செயல்படக் கூடாது என்பது எனது அழுத்தம் திருத்தமான கொள்கை. தங்களின் தீர்ப்பு தங்களுக்கு முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மட்டுமே. மேலும் பொது நல் வழக்குகளின் தீர்ப்புகள் பொது நலத்தின் மீது மட்டுமே. மற்ற வழக்கு தீர்ப்பிற்கும், பொது நல வழக்கு தீர்ப்பிற்கும், அரசயில் சட்டம் குறித்த தீர்ப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்.

அரசியலமைப்பின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் மட்டும் இருக்க அதில் அமர்ந்துள்ள நீதிபதிகள் அரசியல் வாதிகளின் பாதுகாவலனாக இருப்பதால் சுதந்திரமும் ஜனநாயகமும் கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கின்றது என்பது எனது திடமான கருத்து. நாம் போராடி சுதந்திரம் பெற்ற நாட்டில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஒரு நபருக்கு அவரின் சமுதாயக் குற்றத்தினைக் காரணம் காட்டி ஆணையிட அதிகாரமில்லை என்பது எனது கருத்து.

ஷொரிப் எங்கு சென்று பரிகாரம் எப்படி பெறுவது என்று எனக்கு தாங்கள் சரியான அறிவுறுத்தலும், ஆலோசனைகளையும் வழங்கவும்.


மேலும் பங்களாதேசத்தில் இராணுவப் புரட்சி மற்றும் பல புரட்சியாளரைக் காணவில்லை என்பதை படித்து தெரிந்து கொண்டேன். அரசு தனி விசாரணைக்கமிஷன் அதற்கு வைக்கலாம் அல்லவா?

விசாரணையில் கமிசன் பற்றி எனது கருத்தை தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன். நான் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது கோலோவில் நடந்த ஒரு போராட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க அரசு ஆணையிட்டது. அப்பொழுது அரசு தனக்கு தேவைப்பட்ட, அப்பொழுது நீதிபதியாக இருந்த சாம்சனை அமர்த்தியது. அவர் கோடா உயர்நதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது நான் ஆங்கிலேயே அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை தங்களின் பார்வைக்கு
வைக்கின்றேன்.

மேன்மை தாங்கிய இங்கிலாந்து பிரதமருக்கு கோலோ நிகழ்ச்சி பற்றி தாங்கள் அறிந்ததே அது சம்பந்தமாக தற்பொழுது கோடா உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி சால்மனை நியமித்துள்ளீர்கள். அடிமை அரசாக எங்களை ஆளும் நீங்கள் உங்களிடம் சம்பளம் வாங்கி வரும் ஒருவரை உங்களின் அரசு செய்த குறித்தினை விசாரணை செய்யும் தலைவராக அமர்த்துவது தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்பது தங்களுக்கே தெரியும். ஆதலால் ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை அதற்கு அமர்த்துமாறும், அப்படி அமர்த்தாத பட்சத்தில் நாங்கள் அந்த அமைப்பிற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றும், ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியதோடு, போராட்டமும் தொடரும் என்பதனைக் கூறிக் கொள்கின்றேன். உரிய நடவடிக்கை வேண்டி . நான் அக்கடிதம் 1910-ல் எழுதியது என நினைக்கின்றேன். அது நம்மை அடிமையாக ஒரு அரசு ஆண்டபொழுது எழுதியது. ஆனால் சுதந்திரமான ஜனநாயக நாட்டில் மேற்குறிப்பிட்ட எனது கடிதத்தில் கூறியுள்ள எனது கருத்துக்கு எதிராகவே மாறிவிடும் என்பதுவே.

அதாவது சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அப்பொழுது பணியிலுள்ள ஒருவரைத்தான் விசாரணைக் கமிஷன் தலைவராக அமர்த்த வேண்டும். அப்பொழுது தான் சரியான முறையில் ஜனநாயகம் காக்கப்படும் என்பது எனது கருத்து. இது சரிதானே. தாங்கள் இதைப் பற்றியும் கருத்து கூறவும்.

இங்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் பற்றி பேச வேண்டும் என நினைகின்றேன் .

கட்டுப்பாடற்ற முழுச்சுதந்திரம் பற்றி பேச வரும்பொழுது நீதிமன்ற அவமதிப்பு பற்றி எனது பார்வையை தங்களின் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஆங்கிலேயர்கள் தனது நீதிபதிகளின் தீர்ப்பின் மீது அடிமை நாடுகளின் மக்கள் எவ்விதமான கருத்தும் கூறக்கூடாது. அப்படி கருத்துக் கூறும் தகுதி சிறிதும் அற்றவர் அவர்கள்,  அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஜனநாயகக் குரல் ஒழிக்கக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகச் சூழ்ச்சி.

இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, மக்களாட்சியில் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது மக்களாட்சியாகாது. மாறாக சர்வாதிகார ஆட்சியாகிவிடும் (Tyranny) மக்களுக்கு கட்டுப்படாற்ற முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் . அதுதான் நான் விரும்பிய இந்தியா. நான் சுதந்திரம் பெற போராடியது அதற்காகத்தான். 60 ஆண்டுகள் ஓடிய பின்னும் இந்தியாமுதிர்ச்சியடையாமல் இருக்கிறது என்றால் கேவலம், வெட்கம். என்ன ஆட்சி ஆண்டு கொண்டு வருகின்றனர். எனது பெயரைச் சொல்லிக்கொண்டு. என்னை அவமானப்படுத்துவதாகவே
நினைக்கின்றேன். நமது இந்தியா சுதந்திர இந்தியா, உலகிற்கே உதாரணமாக இருக்க வேண்டும். நமது மக்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியா உலக அளவில் மிகச் சிறந்த நல்லரசாக விழங்கும் என்பது எனது கருத்து. அதை விடுத்து இந்திய மக்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துவது சுதந்திரப் போராட்டத்தையும், எமது தியாகத்தையும், எமது கனவையும், குழி தோண்டி புதைப்பதாகவே உணர்கின்றேன். கருத்துச் சுதந்திரத்திற்காகவே நாம் போராடினோம். சுதந்திரம் பெற்றோம். மறுப்பவர் யாராக இருந்தாலும் தூக்கியெறியப்பட வேண்டியவர்களே. கருத்துச் சுதந்திரம் உள்ள இடத்தில்தான் மிகச் சிறந்த சிந்தனைகளும், சீர்திருத்தங்களும் ஏற்படும். இது சரிதானே. தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.

மேலும் ,இந்தியாவிற்கு மிகச்சிறந்த வெளியுறவுக்கொள்கையை வகுத்துத்தரவேண்டும் என நினைக்கின்றேன் . தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .

ஒன்றை நான் இப்பொழுது நினைத்துப்பார்க்கின்றேன் . 1927-ம் ஆண்டில் நான் இலங்கை சென்றிருந்தபொழுது யாழ்பாணத் தமிழர்கள் இந்தியாவைத் தங்கள் தாய் நாடாகப் போற்றிக் கூறினர். இந்திய நாட்டின் மீது அவர்கள் கொண்டருந்த பற்றினை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.அங்கு இப்பொழுது மிகவும் வருந்தத்தக்க சூழல் நிலவி வருவது எமக்கு வருத்தத்தை தருகிறது .

பொதுவாகவே விடுதலைக்காக போராடும் மக்களுக்கு எப்படிப்பட்ட வி்தத்தில் இந்தியா இருக்கவேண்டும் என்பது குறித்து எமது கருத்துக்களுக்கும் தங்களின் மேலான   ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.எமது கருத்து ,இது எமது கருத்து மட்டுமல்ல இந்தியாவிற்கான சுதந்திரத்திகாக போராடும் பொழுது நான் பிற நாடுகளிடம் எப்படிப்பட்ட உதவிகளை விரும்பினேன் ,எப்படியெல்லாம் அவைகள் உதவ வேண்டும் என நினைத்தேனே அப்பொழுது தோன்றியது இது என்பதுவே உண்மை . விடுதலைக்காக மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களின் சுதந்திரத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் விதத்தில் நமது இந்தியாவின் செயல்பாடு இருக்க வேண்டும். எமது நாட்டிடமிருந்து எந்த ஒரு நாட்டிற்கும் விடுதலை இயக்கத்தையும், ஒடுக்குவதற்கு ஆலோசனைகளையோ, ஆயுதங்களையோ தருவதை
நான் ஒருபொழுதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் அப்படிப்பட்ட போராட்டத்தால் சுதந்திரம் வாங்கவில்லை. மேலும் ஒரு நாட்டின் சுதந்திரத்தை எவ்வழியில் அடைவது என்பதை அதற்காகக் போராடும் மக்களே தீர்மானித்க் கொள்ள வேண்டும். அதை மீறி யாரும மாற்று வழி கூறுவதை எம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. அது சரியானதும் அல்ல. யாரையும் நிர்பந்திக்கும் அரசாக எமது சுதந்திர ஜனநாயக இந்தியா இருப்பதை நான் விரும்பவில்லை. அதற்காக நான் சுதந்திரம் வேண்டி போராடவில்லை. சுதந்திரம் எங்கு தோன்ற எத்தணித்தாலும் அதற்கு முழு ஆதரவும் கொடுக்கவே யாம் விருப்பமுற்றுள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் எப்படி இருந்தாலும ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எனது ஆதரவு அவர்களுக்கு. இது சரிதானே.

தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி எனக்கு சில விளக்கங்கள் தேவை.

எவைகளை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் என்று கூறலாம் என்பது பற்றி எனக்கு விரிவான விளக்கம் தரவும்.

எனது கருத்தை தங்களின் முன் பதிவு செய்கிறேன்.ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் நாடு என்ற அமைப்பிற்கே அச்சுறுத்தும் வகையில்,பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்,பிரிவினையை துண்டவேண்டும் என்ற கருத்துடன் தேசத்திற்கே அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் தேசமக்களின் பாதுகாப்பிற்கும், உயிர் ,உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களை தொடர்ந்து அடிக்கடி பல்வேறு பெயர்ககளில் பல்வேறு இயக்கங்களாக பரிந்தோ, அல்லது ஒரே கோரிக்கையை பல்வேறாக பிரிந்தோ செய்யும் ஒரு இயக்கத்தை மட்டுமே தடை செய்யப்பட வேண்டும். அந்த இயக்கத்தின் செயல் தொடர்ந்து, பல்வேறு வழிகளில், நீடித்துக் கொண்டே பலரால் நடைமுறைப்படுத்திக் கொண்டே பின்பற்றிக்கொண்டே, ஆதரவளித்துக் கொண்டே வரும் வேலைகளில், அது தொடர் நிகழ்வாகிக் ண்டிருக்கும்பட்சத்தில் அவ்வியக்கத்தைப் பற்றி பேசவோ, எழுதவோ ,அதற்கு உதவவே தடை விதிக்கப்படலாம். இது தவிர்த்து ஏதோ ஓர் நிகழ்வினை மட்டும் காரணம் காட்டி ஒன்றை அல்லது ஒரு இயக்கத்தை தடை செய்வது கூடாது என்று நினைக்கிறேன்.


மேலும் , நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்நிலையங்கள் மற்றும் மதசம்பந்தமான நிறுவனங்கள் ஆகியவைகள் இருக்கலாமா என்பது குறித்து தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .
.
எனது கருத்து,
நீதிமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது அங்கு ஜாதி, இனம், மதம், மொழி, பால் எனஎந்தவித வேறுபாடும் பாராட்டக்கூடாது. அங்கு மக்களுக்கான மனித நோயத்துடுன் மக்களின் நலத்தை மையமாக வைத்தே நீதி பரிபாலணம் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய விருப்பு,வெறுப்பற்று நடு நிலைமையுடன் நீதி கூறுபவரே அங்கு இருக்க வேண்டும். உயர்வு, தாழ்வின்றி அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமை, இடம், வாய்ப்புஅளித்து நீதி பரிபாலணங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெற 100% உத்திரவாதம் தரப்பட வேண்டும். ஜனநாயகம் சிறிது குறைந்தாலும், அதற்கு பொறுப்பேற்று தங்களின் பதவியை துறப்பதற்கும்,அதற்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமானவர்கள் அங்கு இருக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்திற்குள்ளும், நீதிமன்றத்திற்குள்ளும் எந்தவிதமான மதச் சின்னங்களோ, அடையாளங்களோ,விளம்பரங்களோ, கோவில்களோ அது சம்பந்தமானவைகள் காட்சிப் பொருளாகவோ, நிலைபெற்ற அமைப்பாகவொ எவையுமே இருக்கக் கூடாது. மேலும் அரசியல் சார்புடைய சங்கங்களோ ,அமைப்புகளோ, கொடிமரங்களோ, பேனர்கள் போன்றவையோ மற்றும் அவற்றை பிரதிபலிக்கும் எவையும்
நீதிமன்றத்திற்குள்ளும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அனுமதித்தல் கூடாது. ஒரு நீதிமன்றத்திற்குள் நீதி பாரிபாலண அவை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற பணியாளர்கள் அறை,நீதிமன்ற அலுவலகம், வழக்கறிஞர் கூடம் மற்றும் வழக்கிற்கு பயன்படும் பொருட்கள் விற்பனை அங்காடி, மற்றும் வழக்கறிஞர்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், வங்கிகள், கேண்டீன்கள் இது தவிர்த்து வேறு எதுவும் இருக்கக் கூடாது. மேலும் அவற்றில் அரசியல் தலைவர்களின் போட்டோக்கள், மதச் சம்பந்தமான போட்டோக்கள் ,விளம்பரம் தாங்கிய காலண்டர்கள் ஆகியவை இருக்கக்கூடாது.இப்படித்தான் ஜனநாயக நீதிமன்றம் இருக்க வேண்டும்.

இறுதியாக,
நீதிமன்றத்திற்குள் புகுந்து நிராயுத பாணியாக இருந்த எம்மை ஒரு ஜனநாயக நாட்டில்,நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஊழியர்கள், நீதியை நிலைநாட்ட நீதிபாரிபாலணம் செய்யும் உயாரிய இடத்திற்குள் புகுந்து நீதியின் பாதுகாவலர்களான ஜனநாயகவாதிகளான வழக்கறிஞர்களை காட்டுமிராண்டிகள்போல் தாக்கியதோடு மட்டுமல்லாமல்,நீதிமன்றத்தில் உள்ள வாகனங்களையும், நீதிமன்றக் கட்டிடத்தையும் வெறிகொண்டு தாக்குதல் நடத்தியது குறித்து தங்களின் மேலான கருத்தையும் ஆலோசனையையும் கூறவும். நான் இங்கு அழுத்தம் திருத்தமுமாக பதிவு செய்வது என்னவென்றால், மேற்கண்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதல்களாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தின் மீது நடந்த ரடித்தாக்குதலாகவே
கருதுகிறேன் அரைவேக்காட்டு, தகுதியில்லாத உயர்பதவியில் உள்ளவர்களின் கைலாகாத தனத்தினால் ஜனநாயகத்தைப் பற்றி எந்த அறிவுமற்ற ஆணையினால்தான் நடந்த தாக்குதல் என்றே சொல்லுவேன். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு கொக்கரிக்கும் செயலாகவே கருதுகிறேன். எமது நாட்டில்  இப்படிப்பட்டவர்களை எமது மக்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்களின் செயல்களுக்கு மக்கள்தான் வழக்கறிஞர்களுடன் ஒன்றினைந்து
அவர்களுக்கு ஆதரவு தந்து ஜனநாயகத்தைக் காப்பதுடன், ஜனநாயக முறையில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

சுதந்திரம் பெற்று அயோக்கியர்களின் கைகளில் நாடு செல்லும் என நான் நினைக்கவேயில்லை. அப்படி நினைத்திருந்தால் அது நடைபெறாத வகையில் முன்பே வரைவுத் திட்டத்தை தயாரித்திருப்பேன். அதில் ஒன்றாக காவல்துறை முழுவதையும் நீதித்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் சட்டத்தினை வரைந்திருப்பேன். அப்பொழுதுதான் அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கு காவல்துறையினர் காவு ஆகாமல் காப்பாற்றுவதுடன் உண்மையான சட்டத்தின் ஆட்சி நடக்க ஏதுவாக இருக்கும். ஏனெனில் நீதிபதிகள்
தங்களது பாதுகாப்பினை அரசிடமிருந்தே பெறுவதால் அவர்கள் நேரடியாகவே ,மறைமுகமாகவே நிர்பந்தப்படுத்தப்படலாம்.

ஏற்கனவே காவல்துறையினர் மீது மக்களுக்கு   நம்பிக்கையில்லாது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அப்படி நாட்டை நாத்தமடித்து வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இப்பொழுது காவல்துறையினர் இந்த அராஜகத்தைப் பார்க்கும் மக்கள் காவல்துறை கடுமையான அமைப்பு. அதனால் நாம் அவர்களின் அட்டூழியங்களுக்கும், அராஜகங்களுக்கும் வாயடைத்து, கண்மூடி செல்ல வேண்டும்.நீதிமன்றத்தையே இவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. ஆதலால் ஜனநாயகத்தில் உரிமைகளை அவர்களிடம் அடமானம் வைத்து நடைபிணமாக அவர்கள் வாழ வேண்டியதுதான் என்று முடிவுக்கு சென்று விடுவார்கள் . இந்த லட்சணத்தில் அரசியல் அயோக்கியத்தை மேலும் அரங்கேற்ற புதிய சட்டத்தின் மூலம் அதிக அதிகாரம் காவல்துறைக்கு
கொடுக்கின்றனர் போலும். எம் பெயரில் ஆட்சி செய்யும் அறிவாளிகள். இப்பொழுதே காவல்துறையினர் இப்படியெனில், புதிய சட்டம் வந்த பிறகு நாடே கொடுங்கோலாட்சிக்கு உடனே சென்றுவிடும் என நினைக்கின்றேன். அப்படி ஒரு ஐடியா இருந்ததன் காரணமாகத்தான் என்னவோ அதனை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டனர் போலும். அப்படித்தான் நினைக்கின்றேன். இனி நீதிமன்றங்களே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததன் காரணமாகத்தான் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞரைத் தாக்க ஆரம்பித்தனர் போலும். இப்படிப்பட்ட அராஜக செயலை அரங்கேற்றியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இனிமேல் வரலாற்றில் இதுபோல் என்றும் எந்தத்தவறும் நடைபெறாமல் ஏதாவது செய்ய வேண்டும். தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல .அவரவர் செயல்களுக்கு மனிதாபிமானத்துடன் அவரவர்களே பொறுப்பேற்று அவரவர்கள் ஜனநாயகம் காக்க சட்டப்படி
நடந்துகொள்வதுதான் ஜனநாயக மாண்பு .அப்படிச்செய்வதுதானே சரி . இதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.
இந்தியா முழுவதும் உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்த்தே காத்திருக்கின்றோம் .
தங்களின் மேலான பதிலை எதிர்பார்ப்பு .

......
என எழுதி முடித்த நான் அவரிடமிருந்து அடுத்த வார்த்தை வராததால் அவரை பார்த்தேன் .

சரி இன்னொரு கடிதம் எழுதவும் என்றார் .

ஒபாமா அவர்களுக்கு
முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம். உங்களின் மூதாதையர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தவன் நான்.
மிக்க மகிழ்ச்சி ஒபாமா, மிக்க மகிழ்ச்சி!.
ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து மிகப் பெரிய உயரத்திற்கு உங்களை கொண்டு சென்றுள்ளதுமனிதாபிமானம்தான் .அதனால்தான் அமெரிக்கா, அமெரிக்காவாக இருக்கிறது. எமது இந்தியாவோ சுரண்டல்
சமூகத்தினரால் சிக்கித் தவிக்கிறது.எப்படித்தான் உயரப் போகிறதோ தெரியவில்லை.நல்ல தலைமை இல்லாமல் ஜனநாயகப் படுகொலையைக்கூட வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தேசம் நாசம்மாகிக் கொண்டிருக்கிறது.தங்களைப் போன்ற வழக்கறிஞரின் தலைமை தேவையாக உள்ளது இப்போது .இப்போது தான் O+ve ரத்தம் (ஒற்றுமையுடன் சேரும் பண்பு) அதிகமாக பாய்ந்துள்ளது ஜனநாயகத்திற்கு, வழக்கறிஞர்களால்.மேலும் மேலும் O+ve ரத்தம் சேர்ந்து ஒரு நல்ல தலைமையை உருவாக்கி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என எண்ணுகிறேன். இங்கு இப்பொழுது வழக்கறிஞர் சமுதாயத்தால் தான் ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியும்.அவர்கள்தான் இனி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
அதற்கு தங்களின் ஆதரவு உறுதியாக கிடைக்கும் என நம்புகிறேன்.
ஆதரவளிக்க வேண்டுகிறேன் .

தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்,
வணக்கம்.

பையா இந்த இரண்டையும் போஸ்ட் செய்துவிடு என்றார்.


ஐயா, தாங்கள் கையெழுத்து செய்யவில்லை என்றேன்.

இரண்டு கடிதத்தையும் வாங்கி

இப்படிக்கு
M.K.காந்தி

என கையெழுத்திட்டார்.

ஐயா,
நீங்களா !!!
மகாத்மாவா !!!
உங்களுக்கா !!!
நான் இரத்தம் ……!!!!…..

மெல்ல என்னை அருகில் அழைத்தார் .

பொற்கைகளால் அணைத்தார் .

அவருள் நான் கரைந்தேன் .









**************************************











கோர்ட்டுக்குள் புகுந்து வக்கீல்களை நொறுக்கியது போலீஸ் .
 செய்தி .இதைப்படித்ததும் எனக்கு பழையது ஞாபகத்துக்கு வந்துச்சு
அதான் இந்த மீள்வு .
அவ்வளவே . 





Download As PDF

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் பையன் ... மதன் .







 


 இந்த பையனே இன்றைய சிறப்பு.






இவன் பெயர் மதன்  .





கட்டாயம் பார்க்க  :     இந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?.

.


. Download As PDF