ஞாயிறு, 18 மே, 2014

மறைந்து போனவர்களின் மரணவாக்குமூலங்கள்.


கைகளில் உணவுப்பாத்திரத்துடன் தாத்தா,
கடல் சூழ்ந்த அத்தீவின்
மத்தியிலுள்ள ஒரு பாழடைந்த குடிலுக்கு
வெளியே தட்டுத்தடுமாறிக்கொண்டு .

முற்றத்தில் காத்திருக்கின்றன
இரைக்காக சேவல்கள்
தாத்தாவை பார்த்தபடி .

வெட்டவெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்
தாத்தாவைப் பார்த்து ஓடிவந்து
அவரின் கைகளை பிறாண்டுகின்றனர்.

ஊமைகளின் பாஷையை
ஊமையாகிப்போன தாத்தா உணர்ந்து
வீட்டினுள் நகர்கின்றார் .

காலம் தாத்தாவாகி.
காலம் என்னை தாத்தாவாக்கி ...

திடும்...திடுமென
மறைந்து போனவர்களின்
மரண ஓலங்கள்

தீவு முழுவதும் .

இவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை,

இருந்தாலும்

ஏன்,ஏன்,ஏன் ?..?..?..? என்ற கேள்வியுடன்
பயணிக்கின்றன
ஓலங்கள் ...
ஓலங்கள் ...
ஓலங்கள்...
தாங்க முடியாத படி ...
காதை கிழிக்கின்றன.

எங்களின்
ஒவ்வொருவரின் கல்லறையிலும்
எழுதுங்கள் ...
எழுதுங்கள்...
எங்களின் இறப்பிற்குக்காரணம்....
எங்களின் இறப்பிற்குக்காரணம்....
என
ஒவ்வொரு இறப்பும்
ஓலமிட்டபடி
கையில் ஏதோ குறிப்பு சுற்றப்பட்டு
ஆயிரக்கணக்கில்...


என்னுள் ஓலங்களை அடக்க ,
எனது காதுகளை அறுத்தெறிந்து
என் கைகள்
ஒவ்வொரு திறந்த வாயையும்
வேகவேகமாக மூடிக்கொண்டே செல்கின்றன

ஒன்று,
இரண்டு ,
...
முப்பதாயிரம்...
நாப்பதாயிரம் ...
நீண்டு கொண்டே செல்கின்றன வாய்கள்...
திடுமென ஒரு குழியில்
நான் வீழும் வரை .
இது குழி அல்ல
இரத்தக்குளம் என
உப்புக்கரிப்பை உணர்த்திய வாய் கூறியது.
விடுபட கைகளை அசைத்தபொழுது
ஆமி களின் துப்பாக்கி வெடிப்புகள்
திடுமென மூளையை அழுத்தியது.
வெடிப்பின் திசை நோக்க
பீரங்கிகளின் பெருநெருப்பில்
வாய்மூடிய உடல்கள் ,
சிதறல் சிதறலாக சிதற ,
சிதறல்கள் முழுதும் என் முகத்தில்,

ஆமியிடம் தப்ப
இரத்தத்தில் மூழ்கினேன் .

தாகம் ,தாகம் ,தாகம்...
கண்கள் இருண்டன .
உடல் கனக்க ஆரம்பித்தது .

தீர்க்கப்பட்டது தாகம் .

இனிய குளிர்ந்த நன்னீர் என்னைச்சுற்றி  இப்பொழுது .
கைகளை அசைத்துபடி வானத்தில் பறந்தபடி .
இறக்கைகள் வெப்பமுற
ஓய்வெடுக்க
முள் மலையில் இறங்கிய,
இரண்டு நிமிட ஒய்யாரத்திற்குள் ,
கொல்... கொல்...
சப்தம் கேட்டு எழ .
ஆயிரம் ரவைகள் துரத்த ,
வேகமாக பறக்க எண்ணி
இறக்கைகளை விரித்து
வேக வேகமாக அடித்துக்கொண்டே
தரையில் ஓடிக்கொண்டிருக்கின்றன
என் கால்கள்.



தொடரும் ....
.


.
Download As PDF

5 கருத்துகள் :

Unknown சொன்னது…

இன ஒழிப்பு துயரின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் கவிதை அருமை !தொடரட்டும் !
தம 2

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஈழப் படுகொலைகளை காட்சிப்படுத்திய கவிதை வரிகள் சிறப்பு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

அம்பாளடியாள் சொன்னது…

நெஞ்சை நெகிழ வைத்த அருமையான இக் கவிதைப் பகிர்வு
ஒட்டு மொத்த உணர்வுகளையும் கட்டிப் போட்டது ! மிக்க
நன்றி சகோதரா பகிர்வுக்கு .

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஈழத்தின் இனப்படுகொலையைப் பற்றிய தங்கள் கவிதை அருமை! பயங்கரமாக இருந்தது! மனதில் பயமும் தொற்றிக் கொண்டது!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "