புதன், 28 டிசம்பர், 2016

முட்டாள் பணக்காரனாக காரணம் என்ன ?.



நொரண்டு   வணக்கம் நண்டு .

நண்டு வாங்க நொரண்டு .

நொரண்டு :  எனக்கு ஒரு சந்தேகம்.

நண்டு : ம் ...என்ன சந்தேகம்.

நொரண்டு நம்ம  ஒளவையார் -நல்வழி யில் பாவிகளின் பணம்   என்று

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 

என்ற பாடலை வகைப்படுத்தியிருக்காங்களே  இது சரியா ?.

நண்டு : ம் ...

நொரண்டு :  எனக்கு புரியல.

நண்டு :  என்ன புரியல .

நொரண்டு 
அட,இதுக்கு அர்த்தம் -
பாடுபட்டு  பணத்தினை தேடி பூமியில் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதர்களே ,கேளுங்கள் . உயிர் நீங்கிய பின்பு அந்தப் பணத்தை யார் அநுபவிப்பார்   என்கின்றனர்.
அதில் தான் எனக்கு  .....அது சரியா என்று ...

நண்டு :  ஔவையிடம்  கேட்டா  தான் இது சரியானு சொல்லியிருப்பாங்க .

நொரண்டு ஔவியம்  பேசதே .

நண்டு : இல்லப்பா ...இல்ல...நாம இந்த தப்ப தான் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வரோம் .அதான் சொன்னேன்.

நொரண்டு : அத விடு ...சரி நீ என்ன சொல்ல வர்ர ?.

நண்டு  என்னைக்கேட்டா

'' பாடுபட்டுத் தேடி சேர்த்த அறிவினை (பணத்தினை)  ,அனைவரும் அறிந்துகொள்ளமுடியாத வண்ணம்,பொதுவினில் பெற்ற அறிவினை , பொதுமைப்படுத்தாமல் ,ஒருசிலருக்குள்ளே மட்டும் புதைத்துவைத்து திரியும் உலகில் கெட்ட மானிடரே கேளுங்கள் .கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யார் அநுபவிப்பார் வீணாகப்போகும்  அந்த  அறிவை . ''
என சொல்லுவேன்.

நொரண்டு : எனக்கு  புரியல.

நண்டு : என்ன புரியல ?.

நொரண்டு : நல்லா புரியும்படி சொல்லுப்பா .

நண்டு : முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லு ,அப்புறம் உனக்கு புரியும் ...

நொரண்டு : ம் ... கேள் ... சொல்ரேன்.

நண்டு :பேர் சொல்லா மருந்து தெரியுமா ?.

நொரண்டு : ம் ... கேள்வி ப்பட்டதா இருக்குப்பா.

நண்டு :  எங்க கேள்விப்பட்ட .

நொரண்டு : எங்க அம்மாய் வூருல.

நண்டு :ம் ...

நொரண்டு :அங்க நான் முன்னாடி போனப்ப ...

நண்டு :விசயத்துக்கு வா.

நொரண்டு வயதான பாட்டி ஒருத்தங்க ஔடதம் பார்த்தாங்க.அப்ப அவங்க  பொடி ஒன்னு கொடுத்தாங்க .நான் என்னனு கேட்டேன்.அதுக்கு அவர் பேர் சொன்னா பலிக்காது.நீ அத கேட்காதே ,உன் நோவு சரியாகாது,பாத்துக்க ,என்றார்.நானும் நோவு சரியாச்சினா போதும்னு வந்துட்டேன்.

நண்டு சொன்னா பலிக்காதா... வைத்தியம் .

நொரண்டு :  இல்லப்பா அது தலைமுறை  வைத்தியம்.அவங்களுக்கு மட்டும் தான் அது கைவரும்.பலிக்கும்.

நண்டு :ம்...இது மடமை.நோய் பொதுவா,அனைவருக்கும்  வரும்பொழுது , மருந்து மட்டும் ...எப்படிப்பா ...?.

நொரண்டு : ஏப்பா திரும்பவும் ஔவியம்  பேசார . அவங்க பரம்பரயா பணக்காரங்க தெரியுமா ,ஔடதம்  பார்த்து தான் பிழைக்கனும்னு அவசியம் இல்ல தெரியுமா.


நண்டு இங்கு முட்டாள் பணக்காரனாக  இருக்க காரணம் என்ன என்று தெரியுமா?.

நொரண்டு : தெரியாது ,நீயே சொல்லு  .

நண்டு :  

'' பரம்பரை பரம்பரையாக அறிவின் வெளிப்பாட்டினை சுரண்டி பிழைப்பிற்கு பயன்படுத்தி  வாழ்ந்து வளம் பெற்று நகர்ந்து வரும் வாரிசாக முட்டாள் இருப்பதால்  பணக்காரனாக இருக்கிறான். '' 



நொரண்டு : ஓ....ஓ....

நண்டு :அறிவில்லாமல் வாழ்பவன் பிணத்திற்கு ஒப்பாவான்.

நொரண்டு :  நடை பிணம் .

நண்டு :  ஆமாம்.

நொரண்டு பணம் இல்லாட்டித்தான்  பிணம் என்று பொதுவா  கூறுவர்.

நண்டு : ம்...

நொரண்டு :  என்னப்பா ம் னு சொல்ற.

நண்டு :ஆமாம்பா ,அறிவில்லாதவன் பிணம் தானே.

நொரண்டு : அப்ப நீ பணம் என்பதற்கு அறிவுனு பொருள்படுத்திக்கொள்றா.

நண்டு ம் ...

நொரண்டு :அப்புறம் மேல சொல்லு.

நண்டு :நம்ம ஆளுக பணம் என்ற பதத்தை செல்வத்திற்கு தாரைவார்த்து விட்டனர் ஔவை பாட்டில்.

நொரண்டு : என்ன சொல்ற.


நண்டு :அவங்க காலத்துல நாம இப்ப பயன்படுத்தும் பணம் என்பதற்கான அர்த்தம் இல்ல.  

நொரண்டு :  ஓ. 

நண்டு : ஆனால்,பாடல் தரும் பல அர்த்தங்களில் செல்வத்தை  மட்டுமே பிரதானமாகிவிட்டது ....நிகழ்வுகளில்.

நொரண்டு : ஏன்?

நண்டு :அத பிறகு பாக்கலாம்.

நொரண்டு :இதத்தான்  பாரதி நல்லதோர் வீணை  என்றாரே.
திருமூலர்   உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே  என பாடினாரே.


நண்டு : இன்னும் கேள்.



இன்று ஆள் பாதி ஆடை பாதி என 
ஆடையில் மறைந்துகொண்டான் மனிதன்,
அதனால் ஆளைவிட ஆடை முக்கியம்  என்றாகிவிட்டது இன்று  .


நொரண்டு : ம் ....

நண்டு இன்னும் கேள்.

அறிவை அணிய வேண்டிய  மனிதம் ஆடம்பரத்தில் அழிந்துவருகிறது.

அறிவை வளர்கவேண்டிய மானுடம்,ஆசைகளையும் ,அதிகாரத்தையும் வளர்த்துக்கொண்டு அவஸ்தைப்படுகிறது.

மூளையை மகிழ்விக்கவேண்டிய பிறப்பு ,பிற  உறுப்புகளை  மகிழ்கிறது மடிகிறது.

பிறப்பின் பயணம் தெரியாமல் எங்கொங்கோ பிண்டமாக பயணப்பட்டு சென்றுகொண்டுள்ளது.

நொரண்டு : சரிதான்.


நண்டு :

இந்த உடம்பு அறிவை வளப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது .
ஆனால்,நாம் அறிவை வளப்படுத்தாமல், அழகுபடுத்தாமல் உடம்பை அழகு படுத்தியும் .அதையே  முதன்மைப்படுத்தியும் , அதனை மட்டுமே இன்பப்படுத்தியும் ,அதில் கிடைப்பது  மட்டுமே ஆனந்தம்  அதுவே வாழ்வு என வாழ்ந்து மடிகிறோம்.

இன்றைய மனிதனின் அத்தனை கேட்டிற்கும் இதுவே காரணம்.









.

இது மீள்வு...
Download As PDF

புதன், 7 டிசம்பர், 2016

எங்கள் தலைவனை கண்டுபிடித்து தாருங்கள் கண்டுபிடித்து தாருங்கள்






கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.
கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக
தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....







மேலும் படிக்க இங்கே செல்க ...


Download As PDF

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

சிறுகதை

1.  ஈடிபஸ் காம்பஸ்




.
.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.
கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக
தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....

என்ற பழங்குடிகளின் பழம் பாடல் காலம் காலமாக மலைகள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.இன்றும் அவர்களின் வாய்கள் அவற்றை முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது என்று ஆரம்பித்தது என்று தெரிந்து கொண்டாலும் எப்போது முடியும் தெரியவில்லை. காரணம், ஈடிபஸ் கண்டுபிடிக்க முடியாத இடம் நோக்கி சென்றுவிட்டான். அவனை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறு தகவல்தான் மேற்கூறிய பழங்குடிகளின் உள்ள குமுறல்…


ஈடிபஸ் தனது குதிரையின் மூலம் தீப்ஸிலிருந்து நகருகிறான்.எவ்வளவு நேரம், தூரம் ஓடியது என்று தொரியவில்லை.கண்குழியில் அதிக வலி எடுக்கவே குதிரையை நிறுத்தினான்.குதிரையை மட்டுமே உதவியாக கொள்ள வேண்டியிருப்பதால் அதனது எண்ணத்திற்கு அதிக மதிப்புகொடுத்தால் தான் மீண்டும் பயணிக்கமுடியும் என்பதால் குதிரைக்கு ஓய்வு கொடுக்கஎண்ணி குதிரையில் இருந்து இறங்கி அமர்ந்தான்.கைகளாலே மெல்ல மெல்ல இடத்தின் தன்மையைஆராய்ந்தான்.கைகளை அங்கும், இங்கும் போட்டுதுலாவினான். அவன் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.ஆம், தடி ஒன்று கிடைத்து விட்டது.அதன் உதவியுடன் இடங்களை துலாவ ஆரம்பித்தான்.தடி ஏதோ சலசலப்பை ஏற்படுத்த அதை நோக்கி நகர்ந்தான்.ஒரு செடியினைக் கைப்பற்றினான்.என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.வேக வேகமாக அதன் இலைகளை பறித்து கண் குழிகளில் கசக்கி அப்பிக் கொண்டான். சற்று இதமாக இருக்கவே மீண்டும் சில இலைகளை சேகரித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து கண் குழிகளில் ஊற்றினான்.கண் குழிகளில் குளுமை தெரியவே ஆனந்தமாக அப்படியே செடியை ஒட்டியே படுத்துக் கொண்டான்.அதிகம் பயணித்த களைப்பில் அயர்ந்துவிட்டான்.


பறவைகள் சத்தங்கள் கேட்டு எழுந்தான் ஈடிபஸ் . பறவைகளின் சத்தம்  கேட்டுக் கொண்டு இருக்கவே பகல்பொழுது என்று உணர்ந்து தன் கையில் கிடைத்த தடியை மட்டும் துழாவி எடுத்தான். அதன் உதவியினால் மெல்ல எழுந்து தடியை தட்டி தட்டி நடக்க ஆரம்பித்தான்.குதிரையை கூப்பிடும் ரகசிய மொழியில் குதிரையை அழைத்தான்.குதிரையிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கையிலுள்ள தடியினை அங்கும் இங்கும் வேகமாக ஆட்டினான். எதிரில் எதுவும் இல்லை.குதிரை தன்னை பிரிந்து சென்றுவிட்டது என்று யூகித்துக் கொண்டான்.இனிமேல் குதிரையை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கவலையுடன் நொந்து அமர்கின்றான்.பிறகு குச்சியின் அளவிற்கு வேகமாக நடப்பது என்ற முடிவுக்கு வருகின்றான்.நீண்ட தொலைவிற்கு பிறகு அவனால் எதையும் அடையமுடியவில்லை.பறவைகளின் இரைச்சல் மட்டும் அடங்கிக் கொண்டு இருந்தது.ஒரு கணக்கிற்கு வர ஆரம்பித்தான்.பறவைகளின் இரைச்சலிலிருந்து பறவைகளின் இரைச்சல் வரை நகர்வது என்று முடிவு செய்தான்.களைப்பின் காரணமாக அமர்ந்தான்.கையில் ஏதோ தட்டுப்பட அதனை எடுத்து முகர்ந்தான்.அது ஒரு பழம். உற்சாகமானான்.பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது . உடனே உண்ண ஆரம்பித்தான்.அங்கேயே அயர்ந்துவிட்டான் . மீண்டும் பறவைகளின் ஒலியில் எழுந்தான்.பசி எடுக்கவே உண்டது ஞாபகம் வந்தது. பழத்தின் மரம் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்றஆவலில் குச்சியின் உதவியுடன் ஒரு மரத்தை கண்டுபிடித்தான் . தான் கண்டுபிடித்த மரம் தவறானது என்று மரத்தில் ஏறிய பின்பு உணர்ந்து பல முயற்சிக்கு பிறகு உண்மையான மரத்தினை கண்டு கொண்டான்.அங்கேயே இருக்க முடிவு எடுத்தான்.

பொருளற்ற,ஆள் அம்புகளற்ற,உறுப்புகளற்ற ஈடிபஸை அவன் நினைத்துப் பார்க்கிறான்."ஓ" வாழமுடிகிறதே! .எப்படி? எப்படி? இவைகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற நினைப்பில்தானே வாழ்ந்துவந்திருக்கிறேன். அநேக உயிர்களையும், பொருட்களையும் அழித்தேன். அநேக போர்களை நான் மேற்கொண்டேன். அப்போது ஏன் தெரியவில்லை? தெரிந்திருந்தால், மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பேனே. இப்போது நான் யாருக்கும் அரசன் இல்லை.இனி எனது வாழ்விற்காக யாரின் உழைப்பையும் சுரண்ட மாட்டேன், முடியவும் முடியாது . இருந்தாலும்,என்னால் முன்னைவிட பிரச்சனைகளற்ற வாழ்க்கையை இப்போது வாழ முடிகிறது. இருந்தாலும் தான் முன்பு அறியாது இருந்ததுபோல், இன்னும் தன் நாட்டிலும், வெளியிலும் மனிதர்கள் அறியாமையில் உள்ளனர். அவர்களுக்கு நான்தான் வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான். வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன் தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான். தனது நாட்டிற்கு எதிர் திசையில் தான் பயணம் செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே. அவன் மட்டும் சரியான பயணத்தை மேற்கொண்டிருந்தால் தீப்ஸ் மீண்டும் மிக நல்ல ஒரு அரசனை பெற்றிருக்கும்.

தீப்ஸிலிருந்து கிட்டதட்ட 500 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள ஒரு மிகப் பெரிய மலை முகடென்பது அவனுக்குத் தெரியாது அவன் அடைந்துள்ள இடம். பறவைகள், ஊர்வன, விலங்குகள் ஆகியவற்றின் நகரும் ஓசைகள், அண்மையில் ஏற்படும் வாசனைகள்,இடத்தினை பற்றிய படிப்பினை ஆகியவற்றை அவன் இப்பொழுது நன்றாக அறிந்து கொண்டான். சில சமயம் பலமாக தாக்கப்பட்டான் மிருகங்களால். மிருக வெறி கொண்டு தட்டுத்தடுமாறி போரிட்டான். ஓடினான், காயமுற்றான், தடியாலடித்து துரத்தினான், கையிலிருந்த தடியை மட்டும் எச்சூழ்நிலையில் தவறவிட்டதில்லை. அதுதான் அவனுக்கு வழிகாட்டியாகவும்,ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. தடியைப் பற்றி அவனின் கருத்து இப்படித்தான் இருந்தது."மனிதன் வாழ்வதற்கு தன்னை தவிர்த்து பிற ஒன்று தேவை.அது அதிகமாக அதிகமாக மனிதன் அவற்றிற்கு அடிமையாகின்றான்.தடி எனது வழிகாட்டி.நான் அதனை பின்பற்றுகிறேன்.இப்பொழுது நானும் அடிமையே.உயிரற்ற ஒன்றுக்கு".

மிருகங்களிடம் ஏற்பட்ட போரினால் தடியில் ஆங்காங்கு இரத்தக் கரைகள் அப்பிக் கொண்டன. அவைகள் அத்தடியினை சிவப்பு நிறத்தில் பளபளக்கச் செய்தது. அவனின் உடம்பில் மிகச் சிறந்த வீரத்தழும்புகள் ஏற்பட்டிருப்பதாக உணருகிறான்.எவ்வளவோ மருத்துவர்களின் உதவியுடன் போர் களத்தில் ஏற்பட்ட புண்களை மருந்துகொண்டு குணப்படுத்த முடிந்தாலும், அதிக வலியும், ஆற அதிக நாட்களும் ஆகும். ஆனால் இங்கு புண்கள் ஆற தான் ஏதேதோ தளைகளைமட்டும் தடவிக் கொண்டாலும் உடனே குணமாகிவிடுகிறதே என வியந்தான்.

நீரோடைகளின் சலசலப்பு,மலைகளின் கலகலப்பு பள்ளத்தாக்குகளின் கலகலப்பு,ஆற்றின் சலசலப்பு,அடர்ந்த காடுகளின் குளுமை,விலங்குகளின் குரல்,அவைகளின் அசைவுகளினால் ஏற்படும் சலசலப்பு ஆகியவற்றை துல்லியமாக கணிந்து ஒவ்வொன்றுக்கும் சரியான தீர்வை வைத்திருந்தான்.
காற்று வாசனைகளை கடத்துகின்றது.அதன் மூலம் அருகில், தூரத்தில் உள்ளதை உணர முடிகிறது.காற்றின் சலசலப்பினால் தம்மைச்சுற்றி உள்ளவைகளின் நிலைகளை தெளிவாக தெரிந்துகொள்ளமுடிகின்றது.காற்றின் அசைவினால்தான் இவைகளனைத்தும் சாத்தியம்.காற்றே அனைத்திற்கும் ஆதாரம் என்று கூறிக்கொண்டான்.இப்போ தான் தன் உணவுக்காக அலையவும் இல்லை,நீரை தேக்கி வைப்பதும் இல்லை,உடையை பற்றி பிரச்சனையும் இல்லை,வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்.

மீண்டும், மீண்டும் தீப்ஸை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டான்.ஆனால் தற்பொழுது தனக்கு எவ்வளவு ஆனந்தம் அவனுக்கே வியப்பை அளித்தது.தான் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற நினைப்பு வந்தது.இன்னும் எவ்வளவு தூரம் என்ற நினைப்புடன் தீப்ஸிலிருந்து அதிக தூரம் விலகி கொண்டிருந்தான்.மனித வாடையே இதுவரை அவனுக்கு தென்படவில்லை.

நேரம், காலம், நாள் எல்லாம் அவனுக்கு அப்பொழுது புரிபடவில்லை. இப்பொழுது அனைத்தும் மனிதனை கட்டுப்படுத்தும் தண்டனைச் சட்டங்களாகவே நினைத்தான்.அவை அனைத்தும் பொய் என முடிவுக்கு வந்தான்.இது நாமே நமக்காக போட்டுக்கொண்ட விலங்கு என்பதனை கொஞ்சம், கொஞ்சமாக தனது கருத்தாக உருப்பெறச் செய்து கொண்டான்.தான் தீப்ஸிலிருந்து பொழுது முழுக்க முழுக்க மூடத்தனத்திலும், மூட பழக்க வழக்கங்களிலும் இருந்ததை எண்ணிப்பார்க்கிறான்.

எப்படித்தான் நூறு சதவீதம் மூடப்பழக்கத்தில் வாழ முடிந்தது நம்மால்? .வாழ்ந்தும்தானே இருக்கின்றோம்.நானே இப்படி என்றால் மற்றவர்களும் அப்படித்தானே.என்ன வாழ்க்கை,மூட பழக்க வழக்கங்களிலே பிறந்து, வாழ்ந்து, மடிவது.எல்லோரும் அப்படித்தானே.யார் இதற்கு முடிவு கட்டுவது.மிகவும் கடினமான செயல்தான்.இருந்தாலும் இனியும் தான் மூடத்தனத்தை ஒழிக்க பாடுபடாவிட்டால் நான் மனித குலத்திற்கு உதவி செய்யாதவனாகி விடுவேன்.

மத நம்பிக்கைகள், மதக் கோட்பாடுகள் எப்படி மனிதனை மூடனாக, மடையனாக, முட்டாளாக மனிதனை வைத்திருப்பதுடன் சிந்திக்கக்கூடாத சூழலையும் வருவாக்கி, சிந்திக்க முடியாதவனாக முடமாக்கி வைத்துள்ளது.பிறந்தால், இறந்தால், நோயுற்றால், குணமானால், நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால்,உறங்கினால், விழித்தால், சிந்தித்தால், கண்டால், எழுதினால், பறவை பறந்தால், விலங்கு பார்த்தால், படித்தால், பழகினால், சுத்தமாக இருந்தால், அசுத்தமானால் எது செய்தாலும் பகுத்தறிவற்ற செயலிலல்லவா மக்கள் வாழ்கின்றனர்.

பகுத்தறிவுடன் யாரும் சிந்திப்பதில்லையே பகுத்தறிவுடன் சிந்திப்பதே முட்டாள் தனமாக,மூடத்தனமாக மனித
குலத்திற்கே கெடுதி செய்ய வந்ததாக அல்லவா நினைத்து வாழ்ந்து வந்துள்ளோம்.நான் மட்டுமா,என் மக்களும் ,அண்டைமக்களும்,அரசர்களும் அப்படித்தானே.என்ன வான் ஒலி,மனிதனை மன நோயாளியாக்கி பேசும் பேச்சல்லவா இது.நான் எப்படி இதனை ஏற்றேன்."ஓ" அனைவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்.அரசனையே ஏமாற்றும் அளவிற்கு பாதுகாப்புடன், பத்திரமான இடத்தில்ல்லவா மூடப்பழக்க வழக்கங்கள் உள்ளன.

பகுத்தறிவு எங்கே? .ஓரிடத்திலும் இல்லை….இல்லை. பகுத்தறிவதற்கு மனிதன் தன் நிலை பற்றி சரியாக புரிந்து, அறிந்து கொள்ளாததே, விரும்பாததே காரணம்.நான் அதற்கு மிகச் சிறந்த விடையை அளிக்க வேண்டும். காமம் அனைத்திற்கும் பொதுவானது.கற்பு என்பது பொய்.மனிதர்கள் உணவை மையமாக கொண்டே வாழ்கிறார்கள்.வாழ்க்கை என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது.உண்பது, உடுப்பது, பொழுது போக்குவது மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்கின்றனர்.ஏன், எனக்கே தெரியாமல்
இருந்ததே.நான் இந்த அறிவை அடைந்தது எதனால். காதுகளை நன்றாக பயன்படுத்தியதால் அல்லவா? நானே தான் எனது ஆட்சியை இழந்தேன்.ஐயோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டேனே.மூடப் பழக்கத்தினால் முடமானேனே என்று ஓங்காரத்துடன் கத்தினான்.காடுகளும், மலைகளும் ஒரு நிமிடம் ஆடி அதிசயித்தது.

"ஏ ஈடிபஸின் கையிலுள்ள நன்னெறி காட்டும்.நல்வழி காட்டும் தடியே உலகில் அதிகமான மூடப் பழக்கவழக்கம் மற்றும் மனிதனை மனிதனாகநினைக்காத தேசம் ஒன்று உண்டு என்றால் அது நோக்கி என்னை அழைத்துச் செல்.நீதான் எனக்கு வழிகாட்டி.உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை"
என்று கூறி தனது கையிலுள்ள தடியினை, தனது தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து நின்ற இடத்திலிருந்து கரகரவென்று சுழன்று நின்றான். அவன் கையிலிருந்த தடி இந்திய துணைக்கண்டம் இருந்த திசையை நோக்கி காட்டியது.அத்திசை நோக்கி நகர்ந்தான்.

மல்யுத்தக்கலத்தில் மிகப்பெரிய மல்யுத்தம் நடக்கிறது.வெற்றி பெருகின்றான் ஈடிபஸ்.பழங்குடிகள் ஆரவாரத்துடன் ஈடிபஸை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.அவர்கள் நீ யார். எங்களுக்கு கூறு.ஒன்று நீ வீரனாக இருக்க வேண்டும்,அல்லது அரசனாக இருக்க வேண்டும்.அதில் நீ யார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இரந்தனர்.ஈடிபஸ் எங்கள் ஊரில் அனைவரையும் ஏமாற்றும் கதை ஒன்று உண்டு.அதுதான் என்னைப் பற்றிய நீங்கள் கேட்கும் கதை.ஆனாலும்...என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறி
தனது கைகளை உயர்த்தி காண்பித்து  எனக்கான பாதை இதோ தெரிகிறது,எனது கை வழியாக உங்களுக்குத் தெரிகின்றதா என்றான்.பழங்குடியினர் அவனது கையிலுள்ள தடியிலிருந்து கோடு ஒன்று கிழக்கு நோக்கிச் செல்வதை பார்த்ததாக கூறி தங்களுக்குள் வியக்கின்றனர். சூரியன் மேற்கில் பிரகாசமாக இருக்கின்றான்.

எங்கள் ஊரி்ல் ஒரு பொய் உண்டு.அது என்னைப் பற்றியது.அரச வாழ்வு பற்றி தவறான ஒன்று நிலவி இனி உலகில்
அரசாள விரும்புபவர்களுக்கு அதுவே உதாரணமாக இருக்கும்.அரசர்கள் அனைவரும் கொடூரன்களாகவே காண்பிக்கப்படுவர்.ஆனால், உண்மையில் அவர்கள் அவனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.போரில் அனைவருக்கும் முன்னே அரசன் தான் சாகின்றான்.படைகள் சிறிது பின்வாங்கினாலும் சிதறிய படைகளில், சேர்ந்த புதியவர்கள் எதிரியின் கையாட்களாக மாறி முதலில் கொல்ல நினைப்பது தனது முன்னாள் அரசனைத்தான் என்பதை நான் அனுபவப்பூவமாக உணர்ந்தவன், ஒன்றல்ல இரண்டல்ல பல போர்களில். வெற்றி பெறபவனே அரசன்.போர் என்றால் உண்மையில் சாவுக்கும், வாழ்வுக்குமான சரியான எல்லைக்கோடு அல்ல.ஒருவன் இயல்பாக சாவதையே இயற்கை விரும்புகிறது.ஆனால் அரசர்களோ போரில் சாவதையே மிகவும் விரும்புகின்றனர்.உண்மையில் வீரம் என்பது போரினில் கிடையாது.அனைத்தும் கோழைத்தனமான தந்திரங்களே. போரில் யார் யார், எதை எதைச் செய்ய வேண்டும் என தீர்மானித்து இயங்குகின்றோம். ஆனால் வெற்றி யாரிடமிருந்து வருமென யாருக்கும் தெரியாது.சில சமயம் வெற்றி பெற்றுள்ளோம் என்ற பிரச்சனை இல்லாமல் தங்களை மாய்த்துக்கொண்ட கோழைகளை போர்க்களத்தில் பார்த்துள்ளேன்.

மக்களை காப்பவன்,மக்களை காக்க மனிதர்களை கொன்றுதான் சாத்தியமென்றால் அது காட்டுமிராண்டித்தனமானது. ஒரு கோடிகோழைகளை  காக்க பல்லாயிரம் பேர் இறக்க வேண்டுமென்றால் அது முட்டாள்தனமானது.
தாங்கள் மடிவோம் என்ற உறதியுடன் போருக்கு புறப்படுபவன்
தாங்களால்  காக்கப்படுவது , தங்களால் வாழப்பார்ப்பது் கோழைகள் என்பதை அறிந்தால் உண்மையில் அவன் போர்க்களத்திலிருந்து வெளியேறி விடுவான்.வீரம், வீரத்திற்காக மடியுமிடம் போர்க்களமல்ல என்பதால் போரை வெறுக்கிறேன்.நான் தனியாளாக நின்று பலரை கொன்றிருக்கிறேன்.ஆனால் நாடு, நான் வென்றதாக கூறி தன்னை எனது பாதத்தில் வைத்து பிறகு தீப்ஸின் மூடசதிகாரர்களின் வலையில் மாட்டி சதிகாரர்களால் நாட்டின் காலடியில் தள்ளப்பட்டேன்.

உண்மையில் அரசர்கள் பாவம் செய்தவர்கள்.
மன்னிக்க முடியாதவர்கள்.மன்னிக்க முடியாத செயல் செய்தவர்கள். அரசர்கள் அவர்களுக்கு கிடைத்ததை அவர்கள் அனுபவித்தார்கள்.அவர்கள் அனுபவிப்பதற்காகவே சிலர் அவர்கள் விரும்பியதை தாங்களே விரும்பி அனுபவிக்க கொடுத்தார்கள்.இதில் ஒளிவு எதுவும் இல்லை.உண்மையில் பல சமயங்களில் விருப்பமில்லாமலும் அவர்கள் சிலதை அனுபவிக்கும்படியும் ஆனது.விரும்பிய சில சமயம் வன்முறையில் முடிந்தது. அப்படி விரும்பியவன் எவனொ அவனுக்கு சாவுமணி அடித்தார்கள்.அரசர்களுக்கென்று
சொந்த சொத்தும் கிடையாது. தனி சுகம் என்பதும் கிடையாது.அனைத்தும் மக்களுடையது, அனைத்தும் மக்களுக்கானது,மக்களால் அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் ஒருபோதும் முடியாது என்பதாலேயே அரசனை அவர்கள் நம்புகின்றார்கள்.ஈடிபஸ் மயங்கி விழுந்தான்.

ஒரு பறவைகளின் இரைச்சல்கள் அதிகமானதருணம் தீப்ஸின் போரிகையின் சப்தம் கேட்டு அதிசயித்தான். ஒரு பழங்குடியினை அழைத்து கேட்டான். அவன் ஏதோ தெரியவில்லை. மிகப் பெரிய உருவங்களில் மனிதர்கள் நகர்ந்து வருகின்றனர் என்றான். ஈடிபஸ் உணர்ந்து கொண்டான். தீப்ஸ் மக்கள் தன்னைத் தேடி வருகின்றனர் என்பதனை. அவர்களைப் பார்க்க ஈடிபஸ் விரும்பவில்லை. பழங்குடியினாரிடமிருந்து  விடைபெறுகின்றான். தனக்கு தானே திசைக்காட்டியாக , வழிகாட்டியாக ஆக்கிக்கொண்டு.தடியினை தூர எரி்கிறான்.

உலகில் உயிர்வாழும் ஆசையை தவிர்த்து , பிறஆசைகள் இல்லாதவன்.புது புது ஓசைகள் கேட்டும் ஞாபகப்படுத்தியும், இனங்கண்டும் கொள்கின்றான். அவைகளுக்கென சில பெயர்களை தனக்குள் வைத்துக் கொள்கின்றான்.அவன் இதுவரை ருசிக்காதவைகளை, நுகராதவைகளை அனுபவிக்கின்றான்.தான் தூர தேசம் வந்துவிட்டதை  உணர்கிறான். இனிமேல் தான் கடினமான சோதனைகளை சந்திக்கப் போகிறான் என்பது அவனுக்குத் தெரியாது. இப்போது அவனுக்கு தாய், தந்தை, வளர்ப்புத் தாய், தந்தை, குழந்தைகள், நாடு போன்றவை ஏதோ ஒரு நிகழ்வின் சந்திப்பாகவேபடுகிறது. அரசனாக இருந்த  சமயங்களை விட, இப்பொழுது செய்யும், ஒவ்வொரு செயலும்  அர்த்தமுடையதாகவும் ,  அர்த்தப்படுவதாகவும் உணர்கிறான். அவன் பாதங்கள் மிளகு விளையும் நாட்டை அடைகின்றது.
.
.



.

































2 . O +ve இரத்தம் உடனடி தேவை 







சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினரால்
கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிவரும்
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
ஒருவருக்கு அவசரமாக உயிர்காக்க O+ve பிரிவு இரத்தம் தேவை.மேற்கண்ட இரத்தப் பிரிவினர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

செய்தியைப் படித்தவுடன் O+ve பிரிவினைச் சேர்ந்தவன் என்பதால் SMS அனுப்பிய சென்னை கோயம்பேடு இந்தியன் மருத்துவமனைக்கு விரைந்தேன்.

IC வார்டிற்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தனர். வயதானவர் உடல் முழுவதும் கட்டுக்களுடன் மூக்கில் ஆக்ஸிஜன் ஏற, பல இணைப்புகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தார். டாக்டர் என்னிடம் இரத்தத்தை எடுத்தபொழுது பெரியவருக்குத்தான் தேவையாக இருக்கிறது.
தங்களின் உதவிக்கு நன்றி என கூறினார்.

பெரியவரின் தீட்சண்யமான கண்கள் என்னை மிகவும வசீகரித்தது.அவர் என்னை சைகை செய்து அழைத்தார். கைகளை மெல்ல வருடி அருகில் அமர்த்தினார். பாரத மாதாவே என்னை தன் மடியில் அமர்த்தியது போன்ற உணர்வு.

ஐயா, நலமாக உணர்கின்றீர்களா என்றேன்.

ம் ...என்றார்.

பின், பையா நாளிதழ்களும், பிற வார இதழ்களும், பேப்பரும் பேனாவும் கொண்டு வந்து உதவ முடியுமா என்றார்.

என்னால் மறுமொழி கூற முடியவில்லை.

எனது கை பலத்த அடிபட்டுள்ளது நான் கூறுவதை எழுத்தர முடியுமா என்றார்.

சரியென அவரின் முன் அமர்ந்தேன்.

பையா, அதற்கு முன் இவற்றைப் படியென இரண்டு துண்டு செய்திகளைக் கொடுத்தார்.

'' நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும்வரை சுட்டுக் கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங்கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாக படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் செத்தேரின் எண்ணிக்கை     இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலை நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம தோன்ற வேண்டும்
என்றுதான் சுட்டுக் கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமைகாட்டி விட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.
- ஜெனரல் டயர் ''

'' 1917 டிஸம்பரில் பரிட்டிஷ் அரசாங்கம் அமைத்தது ராஜத்துரோக விசாரணைக் குழுமம் Sedition Committee ரௌலட் கமிட்டி என்ற பெயரில் பின்னர்      பிரசித்தமானது. 1918 ஜூலை, இக்கமிட்டி தன் ரிப்போர்ட்டை அச்சிட்டு வெளியிட்டது. இந்த ரிப்போர்ட்டின்படி,இந்தியாவில் நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு குண்டர்களின் கலகஆர்ப்பாட்டம்-குண்டர்கள் என்றால், கொள்ளை கொல்லை புரியும் தீயர்கள்! இவ்வறிக்கை மேலும் முயன்று நிலைநாட்டப் பார்த்த கண்டுபிடிப்புகள் - இந்திய தேசபக்தர்கள் யாவரும் அராஜக வாதிகள், கொள்ளை, தீ வைப்பு, அடிதடி கொலை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களால் சமூகத்துக்கு பேராபத்து தான் விளையும், நாட்டில் அமைதி குலையுமோ என்கிற அச்சத்துக்கு இடமுண்டு- என்பனவாம்!. இப்படிப்பட்ட குற்றவாளிப் புள்ளிகளை அடக்குவது மேன்மேலும் கடினமாகி வருவதால் அதற்கான புதிய சட்டங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றும் இந்த ரிப்போர்ட் கூறிற்று. ''

படித்துவிட்டுப் பார்த்தேன்.

கம்பீரமான குரலில் எழுது என்றார்.

சென்னை ., 22..2.2009,

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எனது அன்பினிற்கினிய நண்பர் டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு, எப்படி உள்ளீர்கள், நாம் சந்தித்து, பேசி பல நாட்கள் ஆகிவிட்டது. நலமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கின்றேன்.

என் மனஅழுத்தம் காரணமாகவும், சொல்லவெண்ணா துயரத்தின் காரணமாகவும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களைத் தவிர இத்தருணத்தில் எனக்கு ஆறுதலும், ஜனநாயகத்திற்கு பாதுகாப்புத் தரும் உரிய அறிவுரைகளும் தருபவர்கள் உலகில் வேறுயார் இருக்கின்றார்கள். சுதந்திர நாட்டின் குடிமக்கள் தங்களின் சீறிய அறிவின் துணை கொண்டு மேலும் நாட்டை வளப்படுத்தி தாங்கள் உலகிலே தலைசிறந்த ஜனநாயக வாதிகளாக ஆக்கிக் கொள்வர் என்று நினைத்தோம். ஆனால் இன்று ஜனநாயகத்தை கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டிருப்பதனைப் பார்த்தால்
மிகவும் வேதனையாக உள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது, நீதிபரிபாலணம் எப்படி நடக்கிறது. என்பதனை நேரில் கண்டுவர சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். அன்று மாலை திடுதிடுவென்று எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல், முன்னெச்சரிக்கை எதுவும் செய்யாமல் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் மீது கொடூர தாக்குதலை ஏற்படுத்தியதோடு நீதிமன்றத்தின் மீது தாக்குதல்களை நடத்தினர் காக்கி உடையணிந்த கும்பல் .. எனக்கு தூக்கிவரிப்போட்டது. யார் இவர்கள் எதற்காக இப்படிச் செய்கின்றார்கள் எனத் தெரியாமல் திகைப்புடன் நின்று கொண்டிருந்த என்னை டே கிழவா, நீ யாருடா?, வக்கீலா ?என்றார் ஒரு காக்கி உடையணிந்தவர். ஆம் என்றேன். எத்தனை பேர் எனறு தெரியவில்லை. சரமரியாக என்னைத் தாக்கினர் . என்னை கொலை செய்யும்பொழுது கூட இப்படிப்பட்ட வலியை நான் உணரவில்லை. பின் மயங்கி விழுந்துவிட்டேன் என்றே நினைக்கிறேன். இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பத்திரிக்கைகள் மூலம் உலக நடப்பும் அதற்குப் பின்னிட்டு
நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் யாவற்றையும் தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவும் பிறவற்றிற்கும் எனக்கு சில சட்டத்திற்கு சட்ட விளக்கம் வேண்டியிருப்பதாலும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட யார் யாருக்கு கடிதம் எழுதுவது என்பது குறித்தும் தங்களின் மேலான ஆலோசனைக்காகவும், அறிவுறுத்தலுக்காவும் இக்கடிதத்தை
எழுதுகின்றேன். எனது கருத்தையும் தெரிவித்துள்ளேன். உரிய உயரிய பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன். ஜனநாயகம் காக்க நமது பணியை தொடர வேண்டும என நினைக்கின்றேன். தங்களின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.


ஜனநாயக சுதந்திர நாட்டில் நாடு முழுவதும் Democratic Machine ஒரு விநாடி கூட நின்றுவிடாமல் இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி நாட்டின் எப்பகுதியிலாவது ஒரு பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகள் தடுக்கப்பட்டால்கூட அங்கு கொடுங்கோலாட்சி நடக்கிறது என்பதுதானே உண்மை.


மக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படும்பொழுது அதற்கு அவர்கள் நிவாரணம் கேட்கும் உரிமை உண்டு. ஒரு வினாடி கூட அது மறுக்கப்படவோ, தடுக்கப்படவோ கூடாது.எச்சூழலிலும் அப்படி எங்கேனும் ஒரு மூலையில் ஏதேனும் ஒரு பாமரனுக்கு மறுக்கப்பட்டிருந்தாலும் ஜனநாயக இயந்திரம் இயங்கவில்லையென்றே பொருள் கொள்ளலாம் அல்லவா?.

நீதிமன்றங்கள் என்பது ஜனநாயக இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே வருகின்றது என்பதனை உறுதிசெய்யும் ஒரே அமைப்பாகும். நீதிமன்றங்கள் தனது நீதிபரிபாலணத்தை தொடர்ந்து 365 நாட்களும் 24 மணி நேரமும் 60 நிமிடங்களும் 60 விநாடிகளும் இடைவிடாது செலுத்திக்கொண்டே இருக்குமிடத்தில்தான் ஜனநாயகம் சிறப்பாக இயங்குகிறது, இருக்கிறது என்று      அர்த்தம்.

ஒரு குடிமகன் தனக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளலாம். அந்த உரிமையை யாரும் எப்பொழுதும் மறுக்கவோ, தடுக்கவோ கூடாது என்பதுதானேஉண்மை. இது குறித்து விரிவான விளக்கம் கூறவும்.

சென்னை மாகாணம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன் 4 நாட்கள் குடிமக்கள் அனைவருக்கும் அவரவர் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது குறித்து தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்.

சென்னை மாகாணம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களும் தாளிட்டு இருந்ததை அறிந்து வெட்கித் தலை குனிகின்றேன். என்னை மீண்டும் கொலை செய்ததாகவே உணர்ந்தேன். என்ன கொடுமை,என்ன கொடுமை. வெட்கம், வெட்கம். இந்தியா ஜனநாயக நாடு தானா, இல்லை வேறு எதுவுமா?
ஜனநாயகத்தைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் அவர் அவர்கள் வேறு எதுஎதுவோ பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும், விசாரணை செய்து கொண்டும் இருக்கின்றனரே.
ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒன்று இவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது தெரிந்து கொண்டும் யாரையோ காப்பாற்ற ஓடுகின்றார்களா?

சட்டத்தின் பாதுகாப்பு தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 4 நாட்கள் சென்னை மாகாணம் முழுவதும ஜனநாயக உரிமை, குடிமக்களுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, மூடப்பட்டுள்ளது. அதனை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர் என்பதனை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். 'இந்த அரசியலமைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஷரத்தின் பெயரைக் கூறும்படி என்னிடம் கேட்கப்பட்டால், இச்சரத்து இல்லாமல் இருப்பின் அரசியலமைப்பே     செல்லாத ஒன்றாகக் கூடிய ஷரத்தைத் தவிர வேறு எந்த ஷரத்தையும் நான் குறிப்பிட மாட்டேன். இது அரசியலமைப்பின் இருதயம் ஆகும். என ஷரத்து 32-யை குறிப்பிட்டீர்கள். ஷரத்து 32 மற்றும் 226 ஆகியவைகள் இரண்டும எவ்வளவு முக்கியமான ஒன்றாகும். அரசியலமைப்பின் உத்திரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படும்பொழுது, உச்ச  நீதிமன்றம் நீதிப் பேராணை வெளியிட அதிகாரம் படைத்துள்ளது. 'அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்" என சிறப்பாக உச்சநீதிமன்றம் அழைக்கப்படுகிறது. அப்படியிருக்க மேற்கூறிய நான்கு நாட்கள் சென்னை மாகாணாத்தில் எந்த ஒரு குடிமகணும் அடிப்படை உரிமைகள் மற்றுமல்லாமல் சாதாரண உரிமைகள் மீறப்பட்டதற்கும்கூட நீதிமன்றத்தினை அணுகமுடியாதபடி அதனை அடைத்து, முடக்கி வைத்தது எச்சட்டப்படி என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி நீதிமன்றங்களை முடக்கி வைக்க அதிகாரம் உண்டா? அத்தகைய அதிகாரம் யாரிடம் உண்டு? அப்படி ஜனநாயக நாட்டில் நீதிமன்றங்களை எப்பொழுது, எக்காரணத்திற்காக மூடி வைக்க முடியும்? மூடிவைக்க முடியுமா? அப்பொழுது Democratic Machine இயங்கவில்லை என்றுதானே பொருள். அப்படி இயங்காதபட்சத்தில் அதற்கு பொறுப்பு யார் ஏற்க வேண்டும். மூடுவதற்கு ஜனாதிபதி (அ) ஆளுநரின் உத்தரவு உடனே பெற வேண்டுமா இல்லையா? நீதிமன்ற நிர்வாகத்திற்கு அத்தகைய அதிகாரம் எச்சட்டத்தின் வழி கொடுக்கப்பட்டுள்ளது? எவ்வாறு? யாருக்கு? அப்படியே கொடுக்கப்பட்டிருந்தாலும் அது சரியா? சட்டத்தின் பாதுகாப்பை முடக்க முடியுமா? அப்பொழுது பாதிக்கப்பட்ட நபர், ஜனநாயக உரிமை பாதிக்கப்பட்டதற்காக இழப்பீடு பெற முடியுமா? யாரிடம் இழப்பீடு கேட்பது? யார் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதற்கு தாங்கள்தான் சரியான பதிலையும், ஆலோசனைகளையும், அறிவுறுத்தலையும் தர வேண்டும்.

நான் இங்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது என்னவெனில் சென்னை மாகாணத்தில் கடந்த சில நான்கு நாட்களாக நீதிபாரிபாலணம் நடைபெறவில்லை என்பதோடு, அங்கு மக்களுக்கு நீதிமன்த்தால் நீதி மறுக்கப்பட்டுள்ளது என்பதுவே. மேலும் இதுபோன்று இனி எப்பொழுதும்
நடைபெறக்கூடாது என்பதுவும் ஆகும். இது ஒரு ஜனநாயக அசிங்கம், கேவலம், இதற்கு தார்மீகப்பொறுப்பேற்று இந்த ஜனநாயக படுகொலைக்கு உரியவர்கள் தங்களின் பதவியினை ராஜீனாமா செய்ய வேண்டும் என்றும், ஜனாதிபதி இது சம்பந்தமாக இதுவரை எந்த கண்டனமோ, அறிக்கையோ மற்ற எதுவுமோ கூறாமல் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது. அதுபோலவே கவர்னாரின் செயலும்.நாட்டில் ஒரு பகுதியில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட சூழலில் அத்றகு தார்மீகப் பொறுப்பேற்று அவர்கள் ராஜீனாமா செய்தாலும் மகிழ்வேன். ஜனநாயகத்திற்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையாக நினைத்து பெறுமைப்படுவேன்.

ஆனால் மிகவும் வருந்தத்தக்க விசயம் என்னவெனில் மிகப்பெரிய அரசியல் ஜனநாயகப் படுகொலை நடத்திவிட்டு, வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாகத்தான் இதுவெல்லாம் நடந்ததாகஒரு மாயையை ஏற்படுத்தி தப்பிக்கப்பார்ப்பதை என்னால் ஒத்தக்கொள்ள முடியவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது வாழ்க்கையல் செளரி சௌரா நிகழ்ச்சியில் காவல் நிலையத்தை காவலர்களை உள்வைத்தே,ஆங்கிலேய ஏகாதிபத்தியம் போராட்டத்தை திசை திருப்பி நெருப்பிட்டு ,அடக்கு முறையை அப்பாவி இந்தியமக்களின் மீது போட்டதோடு நானும், எனது போராட்டத்தை விளக்கிக் கொள்ளும்படி செய்தனர். பின்னிட்டுத்தான் காவல்துறையின் சூழ்ச்சிகளைப்புரிந்துகொண்டு செயல்பட்டேன். பிட் நோட்டீஸ் அடிப்பது, வன்முறையை மறைமுகமாகத் தூண்டுவது போன்ற செயல்களுக்கு அவர்கள்தான் காரணம் என.

மேலும் ஒன்றை உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். விரைவான நீதி கிடைக்கத்தானே நாம் எவ்வளவோ சட்ட முன் வரைவுகளை வெளியிட்டோம். ஆனால் இன்று நீதிமன்றத்தில் அரசின் பேருந்துகள் ஜப்தி செய்து வைத்துள்ளதாக எனக்கு தெரிய வருகின்றது. இது என்ன நடைமுறை கலெக்டர் அலுவலகம் ஜப்தி, பேருந்து ஜப்தி என. ஏன் அரசிடம் நேரடியாக பெற எத்தனையோ வழிகள் இருக்க ஏன் மக்களுக்கு தாமதமாக நீதி வழங்க வேண்டும். இது குறித்து தாங்கள், மக்கள் விரைவாக நீதி கிடைக்க என்னென்ன வழிகள் உள்ளது, எது செய்யலாம் என்பது குறித்து தக்க ஆலோசனைகள் கூறவும்.

மேலும், பாகிஸ்தானில் பஞ்சாப் மாநில முதல் மந்திரி ஷபாஸ் ஷொரிப்பை அந்நாட்டு சுப்ரிம் கோர்ட் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதற்காக தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும், முதல்வர் பதவியில் நீடித்திருப்பதற்கு தடை வித்துத்துள்ளது.

இது குறித்து எனக்கு உள்ள சந்தேகம் என்னவெனில்,ஆங்கிலேயே நீதித்துறையைப் பற்றி எனது பார்வையை நான் கண்ட அவலத்தினின்று கூறிக்கொள்கின்றேன். ஆங்கிலேயே ஆட்சியில் பணிபுரிந்தவர்கள் சம்பளத்திற்காகவும், பதவி உயர்விற்காகவும் புகழிற்காகவும், அரசை மிகவும் சார்ந்து, அரசு சொல்வதை ,நினைப்பதை,இம்மி பிசகாமல் தங்களின் நீதிபரிபாலணத்தை காட்டிவந்தனர். உயர் பதவியே குறிக்கோளாகவும்,மிகவும் சொகுசுக்காகவும், அந்த சொகுசு நீடிக்க அரசுக்கு எது வேண்டுமானாலும் செய்து வரும் ஏஜெண்டுகளாகவும் இருந்து வந்தனர். மொத்தத்தில் அரசு வழக்கறிஞர்களாகவே இருந்து வந்தனர். நான் வாதாடிய வழக்குகளாகட்டும், எனது போராட்டங்களுக்கு எதிராக அவர்கள் போட்ட வழக்காகட்டும், அவர்கள் ஒருபொழுதும் அரசின்  விசுவாசத்தினின்று பிறழ்ந்ததே கிடையாது. எனது வாழ்க்கைப் பயணத்தின் நெடுக இவ்வாறே பார்த்திருந்தேன்.நியாயமும் ,மனிதாபிமானமும் அவர்களிடம் என்றும் நான் பார்த்தே இல்லை .

சுதந்திரத்திற்கு முன்பே நீதித்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர நினைத்தேன். அதற்கு முடியாமல் போய்விட்டது. ஏனெனில் அந்த அமைப்புகள் அப்படியே தொடர்ந்தால் அந்த அந்த அமைப்புகளில் பதவியில் அமர்பவர்கள் அதே போன்று கட்டப்பஞ்சாயத்து மனோநிலையிலேயே நடந்து கொள்வார்கள் என்று எனது மனதில் ஒரு நமைச்சல் இருந்து வந்தது. விரிவாக செயல்படுத்துவதற்கு முன் என்னை படுகொலை செய்துவிட்டார்கள். நான் அப்பணியை சரியாக செய்யாததன் காரணமாகத்தான் என்னவோ, நாம் பெற்றுத்தந்த சுதந்திர நாட்டில் இன்னும் மக்கள் அதனை பூரணமாக அனுபவிக்க முடியாமல் அவதிப்படுகின்றார்கள் போலும்.

மேலும், அரசியல் சாசன உரிமைகள் குற்றவழக்கு பின்னணியால் எப்பொழுதும் பாதிக்கப்பவதில்லை. அரசியல் குற்றம் என்பது வேறு, சமூக குற்றம் என்பது வேறு. இவற்றை உணர்ந்து நீதிமன்றங்கள் செயல்படுவதாக தெரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாடுகளின் நீதிபதிகள் சர்வாதிகாரிகள் போல் செயல்படக் கூடாது என்பது எனது அழுத்தம் திருத்தமான கொள்கை. தங்களின் தீர்ப்பு தங்களுக்கு முன் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு மட்டுமே. மேலும் பொது நல் வழக்குகளின் தீர்ப்புகள் பொது நலத்தின் மீது மட்டுமே. மற்ற வழக்கு தீர்ப்பிற்கும், பொது நல வழக்கு தீர்ப்பிற்கும், அரசயில் சட்டம் குறித்த தீர்ப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பதை நீதிபதிகள் உணர வேண்டும்.

அரசியலமைப்பின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் மட்டும் இருக்க அதில் அமர்ந்துள்ள நீதிபதிகள் அரசியல் வாதிகளின் பாதுகாவலனாக இருப்பதால் சுதந்திரமும் ஜனநாயகமும் கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கின்றது என்பது எனது திடமான கருத்து. நாம் போராடி சுதந்திரம் பெற்ற நாட்டில் தேர்தலில் போட்டியிடக் கூடாது என ஒரு நபருக்கு அவரின் சமுதாயக் குற்றத்தினைக் காரணம் காட்டி ஆணையிட அதிகாரமில்லை என்பது எனது கருத்து.

ஷொரிப் எங்கு சென்று பரிகாரம் எப்படி பெறுவது என்று எனக்கு தாங்கள் சரியான அறிவுறுத்தலும், ஆலோசனைகளையும் வழங்கவும்.


மேலும் பங்களாதேசத்தில் இராணுவப் புரட்சி மற்றும் பல புரட்சியாளரைக் காணவில்லை என்பதை படித்து தெரிந்து கொண்டேன். அரசு தனி விசாரணைக்கமிஷன் அதற்கு வைக்கலாம் அல்லவா?

விசாரணையில் கமிசன் பற்றி எனது கருத்தை தங்களின் பார்வைக்கு வைக்கின்றேன். நான் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது கோலோவில் நடந்த ஒரு போராட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க அரசு ஆணையிட்டது. அப்பொழுது அரசு தனக்கு தேவைப்பட்ட, அப்பொழுது நீதிபதியாக இருந்த சாம்சனை அமர்த்தியது. அவர் கோடா உயர்நதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். அப்பொழுது நான் ஆங்கிலேயே அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதனை தங்களின் பார்வைக்கு
வைக்கின்றேன்.

மேன்மை தாங்கிய இங்கிலாந்து பிரதமருக்கு கோலோ நிகழ்ச்சி பற்றி தாங்கள் அறிந்ததே அது சம்பந்தமாக தற்பொழுது கோடா உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி சால்மனை நியமித்துள்ளீர்கள். அடிமை அரசாக எங்களை ஆளும் நீங்கள் உங்களிடம் சம்பளம் வாங்கி வரும் ஒருவரை உங்களின் அரசு செய்த குறித்தினை விசாரணை செய்யும் தலைவராக அமர்த்துவது தங்களுக்கு சாதகமாகவே அமையும் என்பது தங்களுக்கே தெரியும். ஆதலால் ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை அதற்கு அமர்த்துமாறும், அப்படி அமர்த்தாத பட்சத்தில் நாங்கள் அந்த அமைப்பிற்கு ஒத்துழைக்க மாட்டோம் என்றும், ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறியதோடு, போராட்டமும் தொடரும் என்பதனைக் கூறிக் கொள்கின்றேன். உரிய நடவடிக்கை வேண்டி . நான் அக்கடிதம் 1910-ல் எழுதியது என நினைக்கின்றேன். அது நம்மை அடிமையாக ஒரு அரசு ஆண்டபொழுது எழுதியது. ஆனால் சுதந்திரமான ஜனநாயக நாட்டில் மேற்குறிப்பிட்ட எனது கடிதத்தில் கூறியுள்ள எனது கருத்துக்கு எதிராகவே மாறிவிடும் என்பதுவே.

அதாவது சுதந்திரமான ஜனநாயக நாட்டில் அப்பொழுது பணியிலுள்ள ஒருவரைத்தான் விசாரணைக் கமிஷன் தலைவராக அமர்த்த வேண்டும். அப்பொழுது தான் சரியான முறையில் ஜனநாயகம் காக்கப்படும் என்பது எனது கருத்து. இது சரிதானே. தாங்கள் இதைப் பற்றியும் கருத்து கூறவும்.

இங்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் பற்றி பேச வேண்டும் என நினைகின்றேன் .

கட்டுப்பாடற்ற முழுச்சுதந்திரம் பற்றி பேச வரும்பொழுது நீதிமன்ற அவமதிப்பு பற்றி எனது பார்வையை தங்களின் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நீதிமன்ற அவமதிப்பு என்பது ஆங்கிலேயர்கள் தனது நீதிபதிகளின் தீர்ப்பின் மீது அடிமை நாடுகளின் மக்கள் எவ்விதமான கருத்தும் கூறக்கூடாது. அப்படி கருத்துக் கூறும் தகுதி சிறிதும் அற்றவர் அவர்கள்,  அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஜனநாயகக் குரல் ஒழிக்கக்கூடாது என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகச் சூழ்ச்சி.

இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, மக்களாட்சியில் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது மக்களாட்சியாகாது. மாறாக சர்வாதிகார ஆட்சியாகிவிடும் (Tyranny) மக்களுக்கு கட்டுப்படாற்ற முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் . அதுதான் நான் விரும்பிய இந்தியா. நான் சுதந்திரம் பெற போராடியது அதற்காகத்தான். 60 ஆண்டுகள் ஓடிய பின்னும் இந்தியாமுதிர்ச்சியடையாமல் இருக்கிறது என்றால் கேவலம், வெட்கம். என்ன ஆட்சி ஆண்டு கொண்டு வருகின்றனர். எனது பெயரைச் சொல்லிக்கொண்டு. என்னை அவமானப்படுத்துவதாகவே
நினைக்கின்றேன். நமது இந்தியா சுதந்திர இந்தியா, உலகிற்கே உதாரணமாக இருக்க வேண்டும். நமது மக்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இந்தியா உலக அளவில் மிகச் சிறந்த நல்லரசாக விழங்கும் என்பது எனது கருத்து. அதை விடுத்து இந்திய மக்களின் கருத்துச் சுதந்திரத்தை தடுத்து நிறுத்துவது சுதந்திரப் போராட்டத்தையும், எமது தியாகத்தையும், எமது கனவையும், குழி தோண்டி புதைப்பதாகவே உணர்கின்றேன். கருத்துச் சுதந்திரத்திற்காகவே நாம் போராடினோம். சுதந்திரம் பெற்றோம். மறுப்பவர் யாராக இருந்தாலும் தூக்கியெறியப்பட வேண்டியவர்களே. கருத்துச் சுதந்திரம் உள்ள இடத்தில்தான் மிகச் சிறந்த சிந்தனைகளும், சீர்திருத்தங்களும் ஏற்படும். இது சரிதானே. தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.

மேலும் ,இந்தியாவிற்கு மிகச்சிறந்த வெளியுறவுக்கொள்கையை வகுத்துத்தரவேண்டும் என நினைக்கின்றேன் . தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .

ஒன்றை நான் இப்பொழுது நினைத்துப்பார்க்கின்றேன் . 1927-ம் ஆண்டில் நான் இலங்கை சென்றிருந்தபொழுது யாழ்பாணத் தமிழர்கள் இந்தியாவைத் தங்கள் தாய் நாடாகப் போற்றிக் கூறினர். இந்திய நாட்டின் மீது அவர்கள் கொண்டருந்த பற்றினை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.அங்கு இப்பொழுது மிகவும் வருந்தத்தக்க சூழல் நிலவி வருவது எமக்கு வருத்தத்தை தருகிறது .

பொதுவாகவே விடுதலைக்காக போராடும் மக்களுக்கு எப்படிப்பட்ட வி்தத்தில் இந்தியா இருக்கவேண்டும் என்பது குறித்து எமது கருத்துக்களுக்கும் தங்களின் மேலான   ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.எமது கருத்து ,இது எமது கருத்து மட்டுமல்ல இந்தியாவிற்கான சுதந்திரத்திகாக போராடும் பொழுது நான் பிற நாடுகளிடம் எப்படிப்பட்ட உதவிகளை விரும்பினேன் ,எப்படியெல்லாம் அவைகள் உதவ வேண்டும் என நினைத்தேனே அப்பொழுது தோன்றியது இது என்பதுவே உண்மை . விடுதலைக்காக மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களின் சுதந்திரத்தை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் விதத்தில் நமது இந்தியாவின் செயல்பாடு இருக்க வேண்டும். எமது நாட்டிடமிருந்து எந்த ஒரு நாட்டிற்கும் விடுதலை இயக்கத்தையும், ஒடுக்குவதற்கு ஆலோசனைகளையோ, ஆயுதங்களையோ தருவதை
நான் ஒருபொழுதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் அப்படிப்பட்ட போராட்டத்தால் சுதந்திரம் வாங்கவில்லை. மேலும் ஒரு நாட்டின் சுதந்திரத்தை எவ்வழியில் அடைவது என்பதை அதற்காகக் போராடும் மக்களே     தீர்மானித்க் கொள்ள வேண்டும். அதை மீறி யாரும மாற்று வழி கூறுவதை எம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. அது சரியானதும் அல்ல. யாரையும் நிர்பந்திக்கும் அரசாக எமது சுதந்திர ஜனநாயக இந்தியா இருப்பதை நான் விரும்பவில்லை. அதற்காக நான் சுதந்திரம் வேண்டி போராடவில்லை. சுதந்திரம் எங்கு தோன்ற எத்தணித்தாலும் அதற்கு முழு ஆதரவும் கொடுக்கவே யாம் விருப்பமுற்றுள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் எப்படி இருந்தாலும ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களாக அவர்கள் இருக்கும்பட்சத்தில் எனது ஆதரவு அவர்களுக்கு. இது சரிதானே.

தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பற்றி எனக்கு சில விளக்கங்கள் தேவை.

எவைகளை தடை செய்யப்பட்ட இயக்கங்கள் என்று கூறலாம் என்பது பற்றி எனக்கு விரிவான விளக்கம் தரவும்.

எனது கருத்தை தங்களின் முன் பதிவு செய்கிறேன்.ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் நாடு என்ற அமைப்பிற்கே அச்சுறுத்தும் வகையில்,பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்,பிரிவினையை துண்டவேண்டும் என்ற கருத்துடன் தேசத்திற்கே அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தும் தேசமக்களின் பாதுகாப்பிற்கும், உயிர் ,உடமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயல்களை தொடர்ந்து அடிக்கடி பல்வேறு பெயர்ககளில் பல்வேறு இயக்கங்களாக பரிந்தோ, அல்லது ஒரே கோரிக்கையை பல்வேறாக பிரிந்தோ செய்யும் ஒரு இயக்கத்தை மட்டுமே தடை செய்யப்பட வேண்டும். அந்த இயக்கத்தின் செயல் தொடர்ந்து, பல்வேறு வழிகளில், நீடித்துக் கொண்டே பலரால் நடைமுறைப்படுத்திக் கொண்டே பின்பற்றிக்கொண்டே, ஆதரவளித்துக் கொண்டே வரும் வேலைகளில், அது தொடர் நிகழ்வாகிக் ண்டிருக்கும்பட்சத்தில் அவ்வியக்கத்தைப் பற்றி பேசவோ, எழுதவோ ,அதற்கு உதவவே தடை விதிக்கப்படலாம். இது தவிர்த்து ஏதோ ஓர் நிகழ்வினை மட்டும் காரணம் காட்டி ஒன்றை அல்லது ஒரு இயக்கத்தை தடை செய்வது கூடாது என்று நினைக்கிறேன்.


மேலும் , நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்நிலையங்கள் மற்றும் மதசம்பந்தமான நிறுவனங்கள் ஆகியவைகள் இருக்கலாமா என்பது குறித்து தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தருமறு வேண்டுகிறேன் .
.
எனது கருத்து,
நீதிமன்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது அங்கு ஜாதி, இனம், மதம், மொழி, பால் எனஎந்தவித வேறுபாடும் பாராட்டக்கூடாது. அங்கு மக்களுக்கான     மனித நோயத்துடுன் மக்களின் நலத்தை மையமாக வைத்தே நீதி பரிபாலணம்      மேற்கொள்ளப்பட வேண்டும். சுய விருப்பு,வெறுப்பற்று நடு நிலைமையுடன் நீதி கூறுபவரே அங்கு இருக்க வேண்டும். உயர்வு, தாழ்வின்றி அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமை, இடம், வாய்ப்புஅளித்து நீதி பரிபாலணங்கள்
மேற்கொள்ளப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடைபெற 100% உத்திரவாதம் தரப்பட வேண்டும். ஜனநாயகம் சிறிது குறைந்தாலும், அதற்கு பொறுப்பேற்று தங்களின் பதவியை துறப்பதற்கும்,அதற்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமானவர்கள் அங்கு இருக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்திற்குள்ளும், நீதிமன்றத்திற்குள்ளும் எந்தவிதமான மதச் சின்னங்களோ, அடையாளங்களோ,விளம்பரங்களோ, கோவில்களோ அது சம்பந்தமானவைகள் காட்சிப் பொருளாகவோ, நிலைபெற்ற அமைப்பாகவொ எவையுமே இருக்கக் கூடாது. மேலும் அரசியல் சார்புடைய சங்கங்களோ ,அமைப்புகளோ, கொடிமரங்களோ, பேனர்கள் போன்றவையோ மற்றும் அவற்றை பிரதிபலிக்கும் எவையும்
நீதிமன்றத்திற்குள்ளும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் அனுமதித்தல் கூடாது. ஒரு நீதிமன்றத்திற்குள் நீதி பாரிபாலண அவை, நீதிபதிகள் அறை, நீதிமன்ற பணியாளர்கள் அறை,நீதிமன்ற அலுவலகம், வழக்கறிஞர் கூடம் மற்றும் வழக்கிற்கு பயன்படும் பொருட்கள் விற்பனை அங்காடி, மற்றும் வழக்கறிஞர்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் ஓய்வு அறை மற்றும் வழக்கறிஞர் சங்கம் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், வங்கிகள், கேண்டீன்கள் இது தவிர்த்து வேறு எதுவும் இருக்கக் கூடாது. மேலும் அவற்றில் அரசியல் தலைவர்களின் போட்டோக்கள், மதச் சம்பந்தமான போட்டோக்கள் ,விளம்பரம் தாங்கிய காலண்டர்கள் ஆகியவை இருக்கக்கூடாது.இப்படித்தான் ஜனநாயக நீதிமன்றம் இருக்க வேண்டும்.

இறுதியாக,
நீதிமன்றத்திற்குள் புகுந்து நிராயுத பாணியாக இருந்த எம்மை ஒரு ஜனநாயக நாட்டில்,நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஊழியர்கள், நீதியை நிலைநாட்ட நீதிபாரிபாலணம் செய்யும் உயாரிய இடத்திற்குள் புகுந்து நீதியின் பாதுகாவலர்களான ஜனநாயகவாதிகளான வழக்கறிஞர்களை காட்டுமிராண்டிகள்போல் தாக்கியதோடு மட்டுமல்லாமல்,நீதிமன்றத்தில் உள்ள வாகனங்களையும், நீதிமன்றக் கட்டிடத்தையும் வெறிகொண்டு தாக்குதல் நடத்தியது குறித்து தங்களின் மேலான கருத்தையும் ஆலோசனையையும் கூறவும். நான் இங்கு அழுத்தம் திருத்தமுமாக பதிவு செய்வது என்னவென்றால், மேற்கண்ட சம்பவம் வழக்கறிஞர்கள் மீது நடந்த தாக்குதல்களாக நான் கருதவில்லை. ஜனநாயகத்தின் மீது நடந்த ரடித்தாக்குதலாகவே
கருதுகிறேன் அரைவேக்காட்டு, தகுதியில்லாத உயர்பதவியில் உள்ளவர்களின் கைலாகாத தனத்தினால் ஜனநாயகத்தைப் பற்றி எந்த அறிவுமற்ற ஆணையினால்தான் நடந்த தாக்குதல் என்றே சொல்லுவேன். சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு கொக்கரிக்கும் செயலாகவே கருதுகிறேன். எமது நாட்டில்  இப்படிப்பட்டவர்களை எமது மக்கள் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர்களின் செயல்களுக்கு மக்கள்தான் வழக்கறிஞர்களுடன் ஒன்றினைந்து
அவர்களுக்கு ஆதரவு தந்து ஜனநாயகத்தைக் காப்பதுடன், ஜனநாயக முறையில் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

சுதந்திரம் பெற்று அயோக்கியர்களின் கைகளில் நாடு செல்லும் என நான் நினைக்கவேயில்லை. அப்படி நினைத்திருந்தால் அது நடைபெறாத வகையில் முன்பே வரைவுத் திட்டத்தை தயாரித்திருப்பேன். அதில் ஒன்றாக காவல்துறை முழுவதையும் நீதித்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் சட்டத்தினை வரைந்திருப்பேன். அப்பொழுதுதான் அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கு காவல்துறையினர் காவு ஆகாமல் காப்பாற்றுவதுடன் உண்மையான சட்டத்தின் ஆட்சி நடக்க ஏதுவாக இருக்கும். ஏனெனில் நீதிபதிகள்
தங்களது பாதுகாப்பினை அரசிடமிருந்தே பெறுவதால் அவர்கள் நேரடியாகவே ,மறைமுகமாகவே நிர்பந்தப்படுத்தப்படலாம்.

ஏற்கனவே காவல்துறையினர் மீது மக்களுக்கு   நம்பிக்கையில்லாது வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். அப்படி நாட்டை நாத்தமடித்து வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். இப்பொழுது காவல்துறையினர் இந்த அராஜகத்தைப் பார்க்கும் மக்கள் காவல்துறை கடுமையான அமைப்பு. அதனால் நாம் அவர்களின் அட்டூழியங்களுக்கும், அராஜகங்களுக்கும் வாயடைத்து, கண்மூடி செல்ல வேண்டும்.நீதிமன்றத்தையே இவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை. ஆதலால் ஜனநாயகத்தில் உரிமைகளை அவர்களிடம் அடமானம் வைத்து நடைபிணமாக அவர்கள் வாழ வேண்டியதுதான் என்று முடிவுக்கு சென்று விடுவார்கள் . இந்த லட்சணத்தில் அரசியல் அயோக்கியத்தை மேலும் அரங்கேற்ற புதிய சட்டத்தின் மூலம் அதிக அதிகாரம் காவல்துறைக்கு
கொடுக்கின்றனர் போலும். எம் பெயரில் ஆட்சி செய்யும் அறிவாளிகள். இப்பொழுதே காவல்துறையினர் இப்படியெனில், புதிய சட்டம் வந்த பிறகு நாடே கொடுங்கோலாட்சிக்கு உடனே சென்றுவிடும் என நினைக்கின்றேன். அப்படி ஒரு ஐடியா இருந்ததன் காரணமாகத்தான் என்னவோ அதனை எதிர்த்து போராடிய வழக்கறிஞர்களைத் தாக்க ஆரம்பித்து விட்டனர் போலும். அப்படித்தான் நினைக்கின்றேன். இனி நீதிமன்றங்களே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்ததன் காரணமாகத்தான் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குள் புகுந்து வழக்கறிஞரைத் தாக்க ஆரம்பித்தனர் போலும். இப்படிப்பட்ட அராஜக செயலை அரங்கேற்றியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று எனக்குத் தெரியவில்லை. இனிமேல் வரலாற்றில் இதுபோல் என்றும் எந்தத்தவறும் நடைபெறாமல் ஏதாவது செய்ய வேண்டும். தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடல்ல .அவரவர் செயல்களுக்கு மனிதாபிமானத்துடன் அவரவர்களே பொறுப்பேற்று அவரவர்கள் ஜனநாயகம் காக்க சட்டப்படி
நடந்துகொள்வதுதான் ஜனநாயக மாண்பு .அப்படிச்செய்வதுதானே சரி . இதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் கூறவும்.
இந்தியா முழுவதும் உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்த்தே காத்திருக்கின்றோம் .
தங்களின் மேலான பதிலை எதிர்பார்ப்பு .

......
என எழுதி முடித்த நான் அவரிடமிருந்து அடுத்த வார்த்தை வராததால் அவரை     பார்த்தேன் .

சரி இன்னொரு கடிதம் எழுதவும் என்றார் .

ஒபாமா அவர்களுக்கு
முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம். உங்களின் மூதாதையர் பட்ட கஷ்டத்தை நேரில் பார்த்தவன் நான்.
மிக்க மகிழ்ச்சி ஒபாமா, மிக்க மகிழ்ச்சி!.
ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து மிகப் பெரிய உயரத்திற்கு உங்களை கொண்டு சென்றுள்ளதுமனிதாபிமானம்தான் .அதனால்தான் அமெரிக்கா, அமெரிக்காவாக இருக்கிறது. எமது இந்தியாவோ சுரண்டல்
சமூகத்தினரால் சிக்கித் தவிக்கிறது.எப்படித்தான் உயரப் போகிறதோ தெரியவில்லை.நல்ல தலைமை இல்லாமல் ஜனநாயகப் படுகொலையைக்கூட வேடிக்கைப் பார்த்துக்கொண்டு தேசம் நாசம்மாகிக் கொண்டிருக்கிறது.தங்களைப் போன்ற வழக்கறிஞரின் தலைமை தேவையாக உள்ளது இப்போது .இப்போது தான் O+ve ரத்தம் (ஒற்றுமையுடன் சேரும் பண்பு) அதிகமாக பாய்ந்துள்ளது ஜனநாயகத்திற்கு, வழக்கறிஞர்களால்.மேலும் மேலும் O+ve ரத்தம் சேர்ந்து ஒரு நல்ல தலைமையை உருவாக்கி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என எண்ணுகிறேன். இங்கு இப்பொழுது வழக்கறிஞர் சமுதாயத்தால் தான் ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியும்.அவர்கள்தான் இனி நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
அதற்கு தங்களின் ஆதரவு உறுதியாக கிடைக்கும் என நம்புகிறேன்.
ஆதரவளிக்க வேண்டுகிறேன் .

தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்,
வணக்கம்.

பையா இந்த இரண்டையும் போஸ்ட் செய்துவிடு என்றார்.


ஐயா, தாங்கள் கையெழுத்து செய்யவில்லை என்றேன்.

இரண்டு கடிதத்தையும் வாங்கி

இப்படிக்கு
M.K.காந்தி

என கையெழுத்திட்டார்.

ஐயா,
நீங்களா !!!
மகாத்மாவா !!!
உங்களுக்கா !!!
நான் இரத்தம் ……!!!!…..

மெல்ல என்னை அருகில் அழைத்தார் .

பொற்கைகளால் அணைத்தார் .

அவருள் நான் கரைந்தேன் .









**************************************

















3.  பட்டுப்பூச்சியாக .



a
அதி தொலைவை நோக்கிய கண்கள் எதுவும் காணாமல் .எவ்வளவு நேரம் ,தூரம் இப்படியே என கணக்கிட என் குடுவையை முடிந்த அளவு திருகப்பட்ட நிலையில் .எப்பக்கத்திலிருந்தும் எனக்கான பதில் ஒலி இல்லாத சூனியத்தில் .என்னால் எதையும் யூகிக்க முடியவில்லை .இனி ஒன்றும் இல்லை, நாம் நமக்கான ஒதுக்கீட்டில் இருப்பது என்ற நிலையில் ...
என்னை மட்டும் விட்டுவிட்டு எப்படி எல்லோரும் என் குடுவைமொழிக்கு அப்பாற்பட்ட தூரத்திற்கு சென்றுவிட்டனர் ? .அப்படியெனில் என் குடுவைமொழிக்கான சமன்பாடு தீர்வு காணப்பட்டு விட்டதா ?.எப்படியிருந்தாலும் எங்கோ ஓரிடத்திற்கு சென்றிருக்க வேண்டும் அது மற்றவர்களா , நானா? . இங்கு எப்படி ஒதுக்கப்பட்டேன் அல்லது ஒதுங்கியிருக்கின்றேன் ? .குடுவை
வரைமுறையினின்று அவர்கள் விலகியவர்களாகவே இருக்கவேண்டும் .இன்னிலையில் எம் இருப்பிடத்திற்கான அபாயம் இன்னும் சில காலத்திற்கு தென்படாவிட்டாலும் அவை கண்ணில் படும் கணத்தினின்று அழிவு நிச்சயிக்கப்பட்டுவிடலாம் .அதற்காக , முன்னேற்பாடாக ,அனைவரும் வேறு
இடம் நோக்கி பயணப்பட்டுவிட்டனரா? .என்னால் மட்டும் ஏன் முடியவில்லை? மற்றவர்களைப்போல ஓடிவிட ? மனம் வராதது எதனால் , தனிமை கவ்வும் இக்கணம் வரை ? .
ஆபத்து ,ஆபத்து என பீதியுடன் அவர்கள் கூறும்பொழுது நான் மட்டும் பைத்தியக்காரத்தனம் என கூறியதான நினைவிலிருந்து போக உத்தேசித்தேன் .இருப்பினும் அவ்வாறு கூறியதற்கு எனது இயலாமையும் அதில் உண்டு .எனது மூதாதையர்கள் எமக்கு அதிக தூரம் பயணப்படும்படி எதையும் செய்யவில்லை என்பதுவே முழு உண்மை .எப்படி அவர்கள் மற்றவர்கள் போலில்லாமல் இப்படி ஒரு ஒன்றுக்கும் ஆகாத வழிமுறைகளை  தங்களின் ஜீன்களுக்கு பழக்கப்படுத்தினர் என தெரியவில்லை.
தூரத்தே தெரியும் ஒரு உரு ஆங்காங்கே அமர்ந்து அமர்ந்து மெதுவாகவந்துகொண்டிருக்கிறது .அதன் நகர்வு மட்டும் மிகவும் மெதுவாக மெதுவாக நளினமான .மிக நீண்ட தேடலுக்குப்பின் என் கண்ணில் படும் கணம் வரை எனக்குள் எரிமலை என்னை எரித்துக்கொண்டு .
ஓ , மலர்களில் அமர்ந்து அமர்த்து அது . உடனே நான் எனது தோட்டத்தை என் அருகில் அமைத்துக்கொண்டேன் ஆயிரம் கோடி மலர்களுடன் .அதன் பாதையில் என் தோட்டமிருந்தால் அது என் அருகில் வரும் என்ற நம்பிக்கையில் .அதனை என் கண்கள் உருப்பெருக்கிக்கொண்டிருந்தன .அது என்னவாக இருக்கும் என என்னால் உறுதியாக யூகிக்கமுடியவில்லை .அது மட்டும் எனக்கு இப்பொழுது ஆதரவாக இருந்தாலும் அதன் இயக்கம் மட்டும் மிகவும் அதிசயமாகவும் ,அதிர்ச்சியாகவும் இருந்தது .ஒருவேளை என் அழிவிற்கு நெருங்கிவரும் ஆபத்தாக நினைத்த மாத்திரம் இதயம் அதிகம் துடிப்பதாக குடுவையினின்று ஒளி வந்தது.கட்டுப்படுத்த கட்டளையிட்டுவிட்டு எனது மூதாதையர்களின் பழம்பெரும் பொருளங்காடிக்குச்சென்றேன் .

அவ்வுருவைப்பற்றி ஏதாவது சிறிய சமிக்சை கிடைக்கின்றதா என்பதே எனது இப்பொழுதைய வேலை .அவ்வுருவின் பிம்பத்தை எனது மூதாதையரின் நிகழ் பிம்பத்தில் பதித்துவிட்டு அதுபற்றிய விவரங்கள் கேட்டேன் .ஆரம்பத்தில் அதன் பெயர் வண்ண ஒலி வடிவத்திலிருந்து இருக்கின்றது என்ற உண்மை எனக்குப்பட்டது .ஒலி வடிவத்திலும் அதற்கு பிறகு வந்தவர்கள் ஒளி வடிவத்திலும் ,வரிவடிவத்திலும் எழுதிச்சென்றிருக்கின்றனர் .அப்படியென்றால் அவ்வுரு ஒரு ஆதி கால உரு . அதனால் நமக்கு ஆபத்தில்லை .

நமது மூதாதையர்கள் அதைப்பற்றி நல்ல விசயங்களே கூறிவிட்டிருக்கின்றனர்
.ஆனால்,மூதாதையர்களின் நிகழ் பதிவேட்டில் விலங்குகள்,பறவைகள் பற்றி மட்டுமே அதிகப்படியாக இருந்திருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது . எனது வளர்ச்சிக்கும் என் போன்ற என்பிறரின் வளர்ச்சிக்கும் உள்ள அதீத வித்தியாசம் பற்றி இப்பொழுது எனக்கு அதிகமாக கவலை ஏற்பட ஆரம்பித்துவிட்டது. ஏன் எனது மூதாதையர்கள் மட்டும் பிறர் போல் இல்லாமல் தாங்கள் மட்டும் தனிப்பாணியில் பயணம் செய்திருக்கின்றனர் ? .
எது எப்படி இருப்பினும் என் கண்களுக்கு மட்டும் அவர்கள் அளித்த தொலைதூரம் பார்க்கும் சக்திமட்டும் ஏதோ ஒன்றை இனம் காண உதவியிருக்கின்றது. அதனுடன் எப்படியும் தொடர்புகொள்ளவேண்டும் என எண்ணி அதன் இயங்கும் பக்கம் எனது பார்வையை அதிகம் கூர்மையாக்கினேன் .

சரி,அது நம் இனம் அல்ல .நம்மை தொந்தரவு செய்யும் இனம் இல்லை .பயப்படத்தேவையில்லை என்றிருந்த நிலையில் அட அருகில் வந்துவிட்டது .அழகாக தனது இறக்கைகளை விரித்து விரித்து பூவிற்குள் பூவாய் தாவி எதையோ நினைத்தபடி என்னை நோக்கி .எனது குடுவை தோல்வியை கொடுத்த பொழுதும் அதன் தொடர்பு பாதை இறக்கையை அசைப்பதில் இருக்கலாம் என என் மனம் சொல்லியது .தவறு செய்துவிட்டோம் அதன் பெயரை தெரித்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே ? அதற்குள் அருகில் வந்துவிட்டதே .
மெல்லிய இழைகள் பிரித்து, அழகிய மலர்களின் அடியினின்று ,மெல்லமெல்ல கைகளை விரித்து, செவ்வாய் கிரகத்தினின்று கொட்டப்படும் மஞ்சள் மக்குகளை கடக்க ,புவியினை தாண்ட, சன்னல் ஒளியின் வழியே பயணப்பட ,எத்தனிக்கும் ஏதுமற்ற எனக்கு, துணை பட்டுப்பூச்சியாக அது .நான் யார் ,அது என்ன என அறிய .

.

.





























.





4. வெள்ளிக்கம்பியின் முடிவிலிபோர்



.



.



எங்கும் மூக்கு வைத்து எதுவும் கிடைக்காமல்,கொட்டிக்கிடக்கும் காலாவதி போலி மருந்து கசிவின் கழிவுகளில் அசிங்கப்படுத்திய மூக்கினை நொந்தபடி காலிடப்பாக்களை உருட்டிய பலத்தில், பயத்தில் பறந்தமர்ந்த மொட்டை மதிலில் பூனை மஞ்சள் பட்டுப்பூச்சிகள் பறந்து திரிவும் செடிகளுடே இடித்துச்சென்றது மூக்கிலிருக்கும் அத்துகள்களுடன். எங்கிருந்தோ வந்த ஆக்ஸைடின் நாற்றத்தில் தனது இறக்கைகளை பரப்பி இம்சித்துக் கொண்டது ; பல்லாயிரக்கணக்கான தாக்குதல்களை கொடுக்கும் சிறுசிறு கம்பிகளை வயிற்றில் ஆயிரக்கணக்கில் கட்டி வைத்திருத்தல் மிகவும் கடினம் என்பதால் எப்படியாவது அவற்றை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.

போர், போர் தீரான மாயப்போர், காலச் சக்கரம் சுலன்றது. தன்னையும் விடாமல், போரையும் விடாமல், ஒன்றை ஒன்று ஒட்டி வைத்து வெட்டப்பட்ட இணைப்பு இடம் மட்டும் வெள்ளைக்காயம் வெள்ளிக் கம்பியாக மாறி , போர் தொடங்கி ,வெள்ளிக் கம்பி ஒளியுடன் உலகெங்கும் வீச, அத்தனை ஜீவ ராசிகளும் பரிதவிக்க ஓட ஓட பிரட்டியடிக்கும் அம் மாய ஒளி. எங்கும் செல்ல வைக்கும், எதைப் பற்றியும் சிந்திக்கவைக்காமல் எதையும் செய்ய வைக்கும். பனியினுடே பளபளக்கும் பொருள் தேடி, நதியினுடே மின்னிச் செல்லும் மஞ்சள் பார்த்து, நிலத்தினுடே நிலம் பிளந்து, கபாலம் உடைந்து, ஒன்றைக்கொன்று ஒன்பதாக்கி ஒன்பதையும் விடாமல் ஒன்றுமில்லாதாக்கி மீண்டும் ஒன்று பெற்று .தொடரரும், தொடரும், தொட்டுத் தொட்டு தொடரும் வெள்ளிக் கம்பியின் அதிகாரம்.

ஒரே ஓங்காரம், ஓலம், அவலம், இருந்தாலும் போரினின்று தப்பி எங்காவது சற்று நிம்மதி கிடைக்கினறதா. மலையேறி ஆதங்கம் கொண்டவனின் அடிவருடியது வெள்ளிக்கம்பி,அதை உணராமல் சிலாகித்தவன் காலில் வெள்ளிக்கம்பி வெம்மையுற்றது. எங்கும் வெம்மை. குளிர்தாண்டி வெம்மையின் வேதனை
மண்டையைப் பிளக்க. தொப்புளைத் தொட்ட குதிரைப்படை நாற்புறம் ஓடி எங்கும் பரவியது. சிறுக சிறுக குதிரையின் வேகம் உத்வேகம் பெற்று உடலெல்லாம் பரவி குதிரையின் ஓட்டத்திற்கு ஆட்பட வைத்தது. காடு, மேடு, பள்ளத்தாக்கு, பனி, நதி கடந்து நிலத்தினில் குதிரை எங்கும் வெல்வாலம் பிடித்து அலைந்து கொண்டிருந்தது. ஓடி வந்த குதிரையினின்று எங்கோ வெள்ளிக் கம்பி நிலத்தினில் விழுந்துவிட அங்கே நிற்கும்படி ஆகிவிட்டது அவனுக்கு.

திடுமென முலைத்த மின்னலை தலையில் பதித்து வெள்ளிக் கம்பியை அழித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தன்னுடல் தேய்த்து பல உயிர்களை பார்த்து ஆணையிட்டு, ஆண்டு அடங்கி வெள்ளிக்கம்பியின் ஒரு துரும்பைக் கண்டு சமாதானம் கொண்டு, மீண்டும், மீண்டும் கபாலம், சதை ,எழும்பு, இயக்கம், ஓட்டம் துரத்தல் என அனைத்தும் ஒரு துரும்பு வெள்ளிக் கம்பியினை காண்பதிலே சென்றது. எங்கே ஆரம்பிப்பது. எங்கே முடிகிறது. விடை கிடைக்காமல் பிரிந்து போகிறது ஜீவராசிகள். எனினும், வெள்ளிக் கம்பியின் மீது வெற்றி கொள்ள யாராலும் போரிடத்தான் முடியும். வெற்றி என்பது பல தோல்விகளுக்கு பின் அறிவிக்கப்படும் என்ற எண்ணத்துடனே பயணம்.வலிமை, மெலிமை இவைகளிரண்டும் வெள்ளிக் கம்பியின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகாமல் போக முடியாது. இருப்பினும் வலிமை மெலிமையை ஓட, ஓட சுரண்டி வெள்ளிக் கம்பியுடனான தனது போருக்கு தக்க ஆயுதங்களை தயார்படுத்தினாலும் சமதானம் மட்டுமே செய்ய முடிந்தது. மெலிமை எப்பொழுதும் திடத்துடன், தீரத்துடன் கடும்போர் செய்து தளர்வுற்று தளர்வுற்று சமாதானம் சொல்லி மீண்டும் இடையுறாத போர் -சமாதானம், போர்- சமாதானம் என்ற வேத காமத்தை ஓதியது. ஆனால் வலிமையையும், மெலிமையையும் மோதவிட்டு இவைகளிடமும் மோதி கம்பீரமாக நிற்கிறது வெள்ளிக்கம்பி. இத்தனைக்கும் மெலிதாக வாள் போல் தோன்றினாலும் அது கம்பியே. வாள் கம்பியென்றும் கூறலாம். ஆனால் வாள் என அறுதியிட்டுக் கூற முடியாது.

வெள்ளிக் கம்பியோ திடீரென தனதுடலின் அனைத்து அணுக்களின்றும் மின்னிப்பரவும் ஆயிரம் வெப்பக் கதிர்கணைகளை ஒரே நேரத்தில் பாய்ச்சும் திறனுள்ளது. இதன் தாக்குதல் காலம், தூரம், நேரம் என பாராமல் எல்லா ஜீவராசிகளிலும் ஏகமாகப் பரவி நிற்கும். இதன் மின்னிப்பரவும் ஆற்றல் மின்னி மறையும், மறைதல் என்பது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குட்பட்டது. எப்பொழுது தோன்றும், தாக்கும் என்றும், யாரைத் தாக்கும் என்றும் சொல்ல முடியதது. வலியதைத் தாக்கும்பொழுது மெலியதை தாக்காமல் செல்லலாம். ஒரே நேரத்தில் வலியதையும், மெலியதையும் தாக்கலாம். எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அதன் தாக்குதல் அந்தரங்கமாக எங்கோ
பூமிக்கு வெளியேறியள்ள சால்டன் தீவில் கூட வைக்கப்பட்டிருக்கலாம். காபாலத்திற்கு கீழேயும் வைக்கப்பட்டிருக்கலாம். சால்டன் தீவு உன் கபாலமாகக் கூட இருக்கலாம். அதற்கு கீழேயும் இருக்கலாம்.

வெள்ளிக் கம்பியுடனான போரை அனைத்து ஜீவராசிகளும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பொழுது எழுந்து நடந்தவன் மட்டும் விரைந்து சென்று மண்டியிட்டுவிட்டான். பிறவற்றைப் பார்த்தே கற்றுக் கொண்டவன். மண்டியிடலை மட்டும் சுயமாக உருவாக்கிக் கொண்டான். நடப்பவை சிலவற்றையும் தன்வயன்படுத்தி, நிலத்தில் பூத்த மகரந்தங்கள் அனைத்தையும் அழிக்க ஆரம்பித்தான். வாழ்விற்கு வரம்பு வைத்தான். இரவு போருக்கான சுழல் அல்ல என முடிவெடுத்தாலும். போர் சில பக்கங்களில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருந்தது. தாம் போரினின்று தனிப்பட்ட முறையில் தப்பயெண்ணி தன் இரத்தத்தை கூறாக்கி தன்னுடனான ஓரினத்தை சேர்த்து கலந்து தயார் செய்யப்பட்டது சிலசூழ்ச்சிகள் .ஒரு குறிப்பிட்ட கால அவசாகசத்துடன் போரில் சமாதானம் ஏற்பட வழி கிட்டிவிட்டது. கபாலத்தை தயார் செய்து கவசம் தாங்கி என்னுடன் வெள்ளிக் கம்பியுடனான போர் இல்லை என பறை சாற்ற துடித்தன எழுந்து நடந்த கும்பல். சமாதானத்திற்கான அனைத்து ஆயுதங்களையும் சேமித்து தன்னிடமில்லாதவைகளை தன்னிடம உள்ள ஆயுதம் கொடுத்து பறிமாறிக் கொள்ளப்பட்டது. எவ்வளவு பரிமாறுவது, எவ்வளவு பரிமாறுவது, கத்த ஆரம்பித்தது கூட்டம். விதியேற்படுத்தி, உயர உயர கற்களை நிரப்பி விதவிதமான ஒலியெழுப்பி ருசி காட்டி, சோம்பலை புகுத்தி, சொகுசு காட்டி என்றாலும் கூச்சல் மேலிட மேலிட, கபாலம் பிளந்து ஒலி பூமியை ஓட்டை போட பலர் ஓட்டை, ஓட்டை ,ஓசோன் ஓட்டை என் கத்திட, கத்தல் கூடிக்கொண்டே சென்றது.

வெள்ளிக் கம்பியின் புதிய பரிமாணம் புரியாமல் தவித்தது ஜீவராசிகள். வெள்ளிக் கம்பியின் தாக்குதல் யாவரையும் விட்டபாடில்லை. தாக்குதலை மறைக்க முயன்று முகத்தில் வெள்ளிரோகைகள் பரவ அதற்கும் பயந்து தன் இயக்கத்தை விரைவுபடுத்த உச்சி கபாலத்தில் ஏற்படுத்திய தாக்குதல் உள்ளங்காலை மண்டியிட வைத்தாலும் சற்று திடத்துடன் தோல்வி, தோல்வி என மனதிற்குள் கருவி தன்னிடம் தேடி சமாதானம் பேசி யாரிடமும் சொல்லாமல் நிம்மதி தேடி அலைந்தவனை, எங்கும் சொல்லாமல் பாடிய மூங்கிலும் மூச்சைவிட்ட குயிலும் கவர தனதியக்கத்தை ,உருக்கத்தை தனது உணர்வில் வாங்கி உதட்டிலும், நரம்பிலும், விரலிலும் விரல் விட்டு இனிமையான இசையையேற்படுத்தினான் ஒரு போராளி. அவனின் இசைக்கு மயங்கி ஓடி வந்தது ஒரு கூட்டம். சற்றே இளைப்பாற, சகலத்தையும் மறக்க கற்றுக் கொண்டது கூட்டம். அலைத்துச் சென்றன அனைவரையும் ஏதோ இராகத்தில், என்னவோ ஒரு தாளத்தில், காலம் . இசையில் மிதந்தவர்கள் போர் மறந்து, தொல்லை மறந்து, போக்கு மறந்து, காடு, மலை, சமவெளி, நீர் வீழ்ச்சி, தென்றல், சுகந்தம், மலர் கூட்டம், இனிய நெருடல், சிலாக்கியம், பிணைப்பு எல்லாம் கலந்த ஏகாந்தத்தில் திடீரென சால்டன் தீவினில் இறக்கி விடப்பட்டனர். பரிதவிப்பு, பதைப்பு அனைவரும் ஓடினர். அவரவர் இயக்க சக்திக்கேற்றவாறு, அதற்குள் இசைக்கருவியின் நரம்பு அறுந்து அனைவரின்
தொப்புளிலும் ஒரு மாய புகையை சுழலவிட்டது. பாவம் யாருக்கும் தெரிவதில்லை. வெள்ளிக்கம்பியின் மாயஜாலங்கள்.

அனைவரும் தங்களுக்கே உரித்தான ஆயுதங்களை பூட்டி போரிடாமல் சமாதானம் பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டனர். வெள்ளிக்கம்பியுடனான போரை அனைவரும் வெறுத்தனர். இதற்கென முடிவு, குழு குழுக்கலாக, அவரவர் கூட்டம் கூட்டமாக முடிவெடுக்கப்பட்டது. முதலாவதாக பூமியினின்று வெள்ளிக் கம்பியின் கோரப்பிடிக்கு ஆட்படாத உலோகத்திற்கு வெள்ளியென பெயரிடப்பட்டது. பின் அதனை கம்பி போன்ற அமைப்புள்ளதாக்கி தங்கள் இஷ்டம் போல் கலர் கலராக, பல நிறத்துடன், பல வடிவத்தில் வெள்ளிக் கம்பியை சிக்கவிடப்பட்டது. இதனைக் கொண்டு வெள்ளிக் கம்பியுடன் போரிட அவ்வவ்குழுக்களுக்கு, கூட்டத்திற்கு ஆணையிட்ப்பட்டது. பண்டமாற்று முறையில் வாங்கப்பட்ட ஆயுதங்களனைத்தும் இந்த போலி வெள்ளிக் கம்பிகளுக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. வெள்ளிக் கம்பியுடனான சமாதானம் இந்த போலி வெள்ளிக் கம்பியால் சாத்தியப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. காலம் சற்றைக்கெல்லாம் போலி வெள்ளிக் கம்பியுடன் உண்மையான வெள்ளிக் கம்பியை கலந்து விட உண்மையான வெள்ளிக் கம்பி தனது பணியின் புதிய பாரிமாணத்தை நோக்கி பாய்ந்துவிட்டது. வெள்ளிக் கம்பிக்கு மாற்று வெள்ளிக் கம்பி என்பதால் அதனுடனான தாகத்தில், சேர்ப்பில் ,சேமிப்பில் கூட்டம், கூட்டமாக நடக்க ஆரம்பித்தது ஜீவராசிகள். போலிக்கு உண்மையைவிட வலிமைகூட ஆரம்பித்துவிட்டது. போலியின் முன் அன்பு, பாசம், பரிவு, காதல், கருணை, இரக்கம், நேர்மை, நியாயம் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டது. கடவுளை படைக்க வைத்து அடிபணிய வைத்தது. இதனை இல்லை யென்றுகூறும் அளவிற்கும் இட்டுச் சென்றது.

போர், போர் வக்கிரமான போர் இப்பொழுது மோதிக் கொண்டது வெள்ளிக் கம்பியும் உயிரும் அல்ல. உயிரும், உயிரும். காரணம் போலி வெள்ளிக் கம்பியை சேர்த்தால் உண்மை தாக்காது என்ற பயத்தில் தாக்கினாலும் உடனடி சமாதானம் என்ற நினைப்பில் தொடர்ந்து போர், போரின் தன்மை மாறிக்கொண்டே வந்தது. இல்லை இல்லை போரின் பரிணாமம் பிரிதொன்றாக மாறவும் தலைப்பட்டது. திருடுதல், கலவாடுதல், கொள்ளையடித்தல் மூன்றும் பொதுவான ஒரு பிரிவின் முப்பாரிமாணம். சுரண்டுதல், பிடுங்குதல் இவை இன்னொரு பிரிவின் அதிகாரம். இப்படியாகவும் போரையும் ஜீவராசிகள் சந்திக்க நேரிட்டது. போலியிடம் ஒப்படைத்த பணி இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கிறது. போரிடுபவர்கள் வெள்ளிக் கம்பியின் தாக்குதலுக்கு தப்பிக்க பிறருடன் போரிட்டு வெள்ளிக் கம்பிக்கு அவர்களின் இரத்தத்தை அர்ப்பணிப்பதன் மூலம் தப்பிக் கொள்வார்கள். இதில் அரசனும், ஆண்டியும் அடங்குவர். வெள்ளிக் கம்பிக்கு அது உண்மையோ, போலியோ இரத்தம் என்றால் மிகவும் பிடிக்கும் என்ற நிலைக்கு சென்றது உலகு.தனக்காகவும், தன்னுடனும் போரிடும் அனைவரும் போலி வெள்ளிக் கம்பியின் முன் தனது இரத்தத்தினை உரைய வைத்தாலொழிய உண்மை வெள்ளிக் கம்பிக்கான தாக்குதலை அது நிறுத்தாது. போரிட வைக்கும் சூத்திரதாரி. தொடரும், தொடரும் இரத்த உறைதல், மீண்டும் தொடரும் இரத்த உறைதல். இரத்தம உறைந்தாலும், அதனுடன் தன்னுடன் போரிட ஏதாவதுண்டா என பல லட்சக்கணக்கான அழுகிய நெழிபுழுக்களை அனுப்பி அலசி அவற்றுடன் சொச்ச தாக்குதலை தொடுத்து மீண்டும் அலசி உலகம் முழுவதும் நாத்தத்தை ஏற்படுத்தி பின் புழுக்களின் இரத்தம் பார்த்து அவற்றிற்குள் ஆயிரம் தங்க வாட்களை ஏழுகூறாக்கி ,பாய்ச்சி, பிளந்து மீண்டும் அவற்றை மக்கச் செய்து நிலம் பிளப்பவன் கையில் கொடுத்து, அவனும் போரிட இரத்தம் கொடுத்து தனது நிலையில்லாத யாரும் வெற்றி கொள்ள முடியாத, எதிரியில்லாத, எதனாலும் வெல்ல முடியாத தனது மாய புகையால் அனைத்தையும வலைத்து அவைகளுடன் போரிட்டு அதனாலே இயங்க வைத்து ஆட்டி வைத்து உருவாக்கி, உருபார்த்து, அழிக்கும் முடிவில்லா மாயப் போரை மேற்கொண்டுவிட்டது வெள்ளிக்கம்பி.

காலில் ஒரு பரபரப்பு, பாய்ந்து சென்று பார்த்த பார்வையில் மின்னிக் கொண்டிருக்கும் பாதரச துகள் தாண்டி சமாதான ஆயுதங்களின் குவியல் பார்த்து ஒவ்வொரு கம்பியாக, ஒவ்வொரு கம்பிக்குமான சமாதானத்தையும் ஏற்படுத்த தன்னை ஆசுவாசப்படுத்தியது அந்த பூனை. வெள்ளிக்கம்பியால் இன்னும் சிறிது நேரத்தில் இரு கூறாக்கப்படுவது அறியாமல்..


.




.




.
































5.காப்பாட்சியாளரின்  காலாட்படையுடன் .



சிற்பங்கள் பேசும் மொழி கற்றவன் நான் .
நீண்ட நாட்கள் சிற்பங்களுடன் பேசி பயணப்பட்டு ஆகியிருந்தபடியால் காப்பாட்சியகத்திற்கு சிற்பங்களுடன் பேசிக் களிக்கச் சென்றபொழுது
அவைகள் ஏனோ பேச மறுத்தன .என் மொழி கடுமையாக இருந்திருக்குமோ அல்லது எனது அணுகுமுறை அவைகளுக்குப் பிடிக்கவில்லையா என்ற கேள்விகளை என்னுள்ளே எழுப்பிக்கொண்டே அருங்காட்சியகத்தை சுற்றிக்கொண்டிருந்தபொழுது வெட்டவெளியில் சிலர் தங்களின்
மூளையிலிருந்து கைகளின் மூலம் பறவைகள்,விலங்குகள்,மரங்கள்,காடுகள் என விதவிதமாக ,விதவிதமான நிறங்களில் தங்களுக்கு முன் இறக்கிக்கொண்டிருந்தனர் .அவற்றை ஆர்வத்துடன்
கவனித்துக்கொண்டிருந்தவர் தான் காப்பாட்சியாளர் என்பதை அருகிலிருந்த இருவரின் பேச்சுக்களிலிருந்து அறிந்து கொண்டேன் .அவர் தனது இளவர்களுக்கு பயிற்ச்சி கொண்டிருப்பதாகவும் அறிந்து கொண்டேன் .கூர்ந்து கவனித்ததில் அவர் மூளையிலிருந்து எவ்வாறு பிறவற்றிற்கு சிந்தனைகளை மாற்றுவது என்பது குறித்து மிகவும் சிரத்தையுடன் பொருமையாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன் . நான் மீண்டும் எனது பயணத்தின் ஆரம்பத்தை புதுப்பிக்க சிலைகளை அணுகினேன் .ஆனால்,அவைகள் மீண்டும் மௌனம் காட்டின .
சிலைகள் பற்றிய அறிவில் சிலைகள் அனைத்தும் பேசும் என்பது அடிப்படையான முதல் பாடமாகும் .இரண்டாவதாக சிலைகள் ஒரு சங்கோதத்தில் கட்டாயம் பேசும் .சிலைகள் தமக்குள் பேசிக்கொள்ளும் என்பதும் சிலைகள் பிற சிலைகளுடன் பேசும் என்பதும் ,முக்காலத்தையும் உணர்ந்தவைகள் என்பதோடு எதிர்காலத்தைப்பற்றி சரியான விடைகளுடன் விடுவிப்பையும் தரும்
என்பதும் ஆச்சரியப்படக்கூடிய பாடங்களாகும் .சிலைகள் தங்களுக்குள் பேசும் காலம் நடுஇரவு என்பதும் அதன் விழிப்பு நிலையில் நாம் அது தனக்குள் பேசிக்கொண்டவற்றை ஊகித்து உணரலாம் என்பதும்அறித்திருக்கவேண்டிய பாடங்களாகும் .
நான் அருங்காட்சியகத்தில் மற்றவர்கள் போலவே சும்மா சுற்றித்திரிந்து கொண்டிருந்தேன் .அவைகளின் மௌனம் எனக்கு புரிபடவில்லை .இவைகள் பேசாதா சிலைகளா ? ஊமைச்சிலைகள் இருக்கின்றதா ? என்ற ஐயப்பாடு எனக்கு சட் என்று ஏற்பட்டது .சிற்பசாஸ்திரத்திரப்படி அனைத்து சிலைகளும் சரியாகவே புடம் போடப்படுகின்றன என்பதுவே உண்மை .பேசும் கற்களில் இருந்தே சிலைகள் செய்யப்படுகின்றன .அதுவும் குறிப்பிட்ட சங்கோதமொழி தெரிந்த கற்களில் இருத்தே சிலைகள் செய்யப்படும் . குறிப்பிட்ட சங்கோதமொழி தெரிந்த கற்கள் மட்டுமே சிலைவடிக்க ஐயப்பாடு ஏனே அதிகரித்துக்கொண்டே வத்துகொண்டு வந்த வேளையில் சிற்பங்களின் கற்களுக்குள்
பயணிக்கும் சாம்பிரட் இரகசிய வாய்ப்பாட்டு முறையினை உபயோகித்து கற்களுடன் பயணப்பட முடிவுசெய்தேன் .

கற்கள் அனைத்தும் அதிர்ந்துகொண்டு உயிர்ப்புடன் இருந்தன .என்னால் பயணிக்கமுடியாத அளவு எதிர்வினைகளை தெரிவித்து என்னை மூர்ச்சையடையச்செய்தன. மீண்டு நான் வெளிவந்தபொழுது
காப்பாட்சியர் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார் .நான் அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்க அணுகியபொழுது சிந்து வெளி சிற்ப எழுத்துக்களுக்கு முன் அமர்த்திருப்பதை உணர்ந்தேன் .நான் எழுத்துக்களை ஆவலுடன் பார்த்துக்கொண்டே அவரை நெர்ங்கியதை கண்ட அவர் சிந்து வெளி எழுத்து
ஒன்றை என் மீது செலுத்தினார் .நான் அது தவறான பிரயோகம் எனக்கூறி அவரின் மீது அதையே மீண்டும் பிரயோகித்தபொழுது உடனே அதற்கு அவர் நர்தமா வனப்பகுதி ஆதிவாசிகளை போர்குறியுடன் என் முன் கொண்டுவந்து நிறுத்தினார் .எனக்கு பாகீரென்றது .அவருடன் போர்புரிய நான் வரவில்லை என அவருக்கு விளக்குவதற்குள் ஆதிவாசிகளின் தலைவன் தனது
மதகுருக்களின் மது வெறியாட்டத்தில் ஆண்டவனின் அருள்வாக்கு நர்மதையைக் கடந்து வெற்றி பெறு என்று இருக்கிறது என்பதைக்கொட்டு போருக்கு கிளம்பியிருத்ம்படியால் நான் போர் செய்யும்கட்டாயத்தில் தண்டகாரண்ய சதுப்புநில மாந்தர்கள் அருபதின்மறையும் ,மாயான்களையும் இணைத்து ஒரு மா லோகம் மாயமாய் தயாரித்து மிகப்பெரிய வெடிச்சத்தத்துடன் பிரவேசித்தேன் .தோல்வியின் விளிம்பிற்கு தள்ளப்பட்ட காப்பாட்சியர் போரை வேறு ஒரு பரப்பிற்குள் நுழைந்துஇப்பொழுது அவர் ஷென்றி ரென் என்பவருடன் தனது பாதுகாப்பு படையுடன் வந்து கொண்டிருந்தார் .நான் இப்பொழுது தனி மனிதனாய் இருந்து போரிட்ட பொழுதும் அவருடன் டார்வின் சேர்ந்துகொண்டார் .இப்பொழுது என் பக்கத்தில் முதன்முறையாக பிராய்டு அகப்பட எங்களமு போர் அறிவு சார்ந்ததானது .
அவர் புத்தகங்களினின்று காலாட்படைகளை ஆயுதங்களுடன் அனுப்பிக்கொண்டிருந்தார். நான் எனதுகபாலத்தைப்பிளந்து அவைகள் அனைத்தையும் அப்படியே விழுங்கிக்கொண்டிருந்தேன் .அதை உணர்ந்து
அப்போரை நிறுத்திய அவர் தான் எப்படியும் வெற்றிபொற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எனதுஅடித்தளந்தின் அஸ்திவாரத்தை தகர்க்க தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருத்த பொழுது ,சிறைப்பிடிப்பது எப்படி என்று தனது படையாட்களுக்கு பயிற்சி கொடுக்க சென்றபொழுது ,பிரமாண்டகன் என்பவன் அவரின் தூதுவனாக என்னிடம் வந்தான் .அவரின் படைகளைப்பற்றியும்
,படைகளின் தன்மை ,வலிமை,எண்ணிக்கை முதலியவைகளைக்கூறினான் .
நீங்களும் காப்பாட்சியாரும் பலத்தில் சமமாக உள்ளதால் போர் தேவையில்லை என்ற முடிவுக்கு காப்பாட்சியர் வந்துள்ளார் என்றான் பிரமாண்டகன் .
போர் தேவை இல்லை என்பதனின்று என்ன கூறவருகின்றீர்கள் ? எப்படி சமபலம் என நினைப்பது ? இந்த கணிப்பு எப்படி வந்தது ? என்றேன் .
காப்பாட்சியர் அப்படி நினைக்கின்றார் . அதோடு சம்பலத்துடன் இருப்பதனால் சதுரங்கத்தின் மூலம் முடிவு செய்யலாம் என்றும் முடிவுக்கு வந்துள்ளார் என்றான் பிரமாண்டகன்.
எனக்கு உடன்பாடில்லை சதுரங்கத்தில் அரசனை கைப்பற்றுவதே விதி ,ஆனால் எனக்கு அரசன் தேவையில்லை ,அரசு தான் வேண்டும் .மேலும் ,சதுரங்க அரசன் ஒரு சோம்பேறி ,மனித நேயமற்ற கொடுரன் .என்னிடம் உங்களின் போர்யுத்தியை புகுத்தாதீர்கள் எனது வரையறை வேறு .போரில்
ஆயுத வெற்றியல்ல பங்கு ,பதவி அல்ல பாதுகாப்பு இவை தான்வேண்டும் .சமாதான பேச்சுக்கள் அனைத்தும் ஆதாயத்தை நோக்கியே என்பதனை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள் .எந்த சமாதானப்பேச்சும் போரின் கொடூரத்தை பற்றி கவலைப்படுவதுவே .ஆதாயத்தை தேடும் மனிதவேடமே .போர் நிறுத்தம்
என்பதே ஆதாயத்தை வேறுவிதத்தில் தேடுவது என்பதை நீ காப்பாட்சியருக்கு உணர்த்து .எந்த போரிலும் வெற்றி என்பது ஒருவருக்கு மட்டுமே .சமாதானப்பேச்சு ஆதாயமே ,அது அனைவருக்கும் என்பதால் நான் ஆதாயத்தையே விரும்புகிறேன் .அதோடு இது மீது திணிக்கப்பட்ட
போர் .அதனால் நான் ஆதாயத்தை எதிர்பார்க்கின்றேன் .உங்களின் போர் யுக்தி பழமையானது .உங்களின் போர் பெரும் திருட்டைப்போன்றது .யாரும் விரும்பாதது .ஆனால் ,நீங்கள் யாருக்கும் செய்வது .என்னிடமிருந்து நீங்கள் பாடம் கற்றிவிட்டாத உணர்ந்தால் தான் மனித இனத்திற்கு நல்லது .இல்லையேல் உங்களுடைய அழிவு இந்த அருங்காட்சியகத்திற்குள்ளாகவே முடிந்துவிடும் . இங்குள்ள சிலைகளே உங்களை கொன்றுவிடும் என்பதனை உங்களின் தலைவனுக்கு விளக்கு என கூறினேன்.
இது கேட்டு பிரமாண்டகன் மறைந்தான் .
வெண்ணிற தூவல் மேவிய ,அழகிய நட்சத்திரம் தாங்கிய அந்த சிலை தனது சிலிர்ப்பால் என்னை அழைத்து ,திரும்பிக்கொண்டது .பின் என் இதயத்தை அடைந்தது,அதைத்தொடர்த்து ஒவ்வொரு சிலைகளாக என்னைப்பார்த்து புன்னகைத்தது .அதன் ஒவ்வொரு புன்னகையிலும் சுதந்திரத்தின்
மோனமும் ,விடுதலையடைந்த மொழியின் வீச்சும் இருந்தது.

.

.






























6.ஜோப்டோஸ்



.
.
துண்டிலுக்குச் சிக்காததால் வலை விரித்தேன் எனினும் சுருங்கிக்கொண்டான்.நீரிரைத்தால் அகப்படுவான் என்ற எண்ணத்தில் நீரிரைத்தேன் துகளாக எங்கோ சென்றுவிட்டான் . இன்று காலி
மதுக்கிண்ணத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிலதுளி மஞ்சள் திரவத்தினின்று ஒரு ஒளிவீச்சில் என் கண்களில் முத்தமிட்டான் .தன் தங்கவாளால் வெட்டி விடுவானோ என் கண்களை என்ற
பயத்துடன் உற்றுப்பார்த்தேன் .எந்திரத்துப்பாக்கியின் கன கம்பீரமான தாக்குதலைவிட என் கண்களில் தன் வாளின் வீச்சால் நுழைந்து விட்டான் . வேறு வழியில்லாமல் கண்களை கடும்பனித்துளி் பரிமாண நேரத்தில் மூடிவிடும்படி ஆலிலோஸ் சொன்னான். ஜோப்டோஸ் எப்படி இப்படி வந்தான்
என்றுகண்கள் மூடியபடி கேட்டிடுக்கொண்டிருக்கின்றேன். ஆலிலோஸ் எப்பதிலும் கூறாமல் எதைஎதையோ தின்னும் சப்தம் மட்டிடும் காதில் கேட்கிறது.
முன்னொரு சமயம் ஜோப்டோஸ்சுடன் மலையேறிக்கொண்டிருக்கும்பொழுது இப்படித்தான் சார்மன் வந்தான் . இப்பொழுதுள்ள ஜோப்டோஸைப் போலல்ல சார்மன் . சார்மன் என்னுள் புகையாக இறங்கினான்.இன்பம் , இன்பம் என்றேன், மமதையுடன். இறங்கிக்கொண்டே இருந்தான் ஆதாள பாதாளத்தில் நெஞ்சுக்குள்
மாயக்குகைவைத்து இறுக்கி இறுக்கிவிடப்பட்டவன் பலகாத துரம் இறங்கியவனை காணவில்லை . தேடினேன், தேடினேன் காணவில்லை.தேடிக்கொண்டிருக்கும் வேலையில் அவன் நினைவு தவறும் வேலையில் எங்கிருந்து பாய்ந்ததோ அவன் தீ தாக்குகள் பல்லாயிரம் இரத்தின அம்புகளுடன் தகிக்கும் வெப்பத்துடன் நான் தான் சார்மன், நான் தான் சார்மன் என கைவிளிம்பு வரையுள்ள
ஒவ்வொரு செல்லும் உடல் பூராவும் கூறியது.நான் விரும்பியவன் எப்படி இப்படி மாறினான் . மனம் நினைப்பதற்குள் அதிலும் சார்மன் .வேண்டாம் சார்மன், வேண்டாம் சார்மன் எனக்கு சார்மன் வேண்டாம் எனக்கூறி ஓடிக்கொண்டிருந்தேன். மின்னலிடும் கடும் பாலைவனம் நோக்கி, உடம்பெல்லாம் எரியும் நெருப்புடன் ஓடினேன் , ஓடினேன் .சார்மன் நெருப்பாக வெளியேறிக்கொண்டிருந்தான்
என்பது மட்டும் தெரிந்தது .ஜோப்டோஸ் என் பாக்கெட்டில் பத்திரமாக அப்பொழுது பதுங்கியிருந்தான் .அன்று முதல் சார்மனை என் வாழ்வில் குறிக்கிட நான் விட்டதே இல்லை .ஆனால் ஜோப்டோஸும் ஆலிலோஸும் எப்பொழுதும் என்னுடனே வந்து கொண்டிருந்தனர் . ஆலிலோஸும் சார்மனும் உறவினர் என்றாலும் வேறு வேறு தளத்தினர் . ஏதோ ஓர் உறவு. உள்ளடக்கத்தில்
,வெளியீடு பரப்பில் .சார்மன் போல் ஆலிலோஸ் என்னை என்றும் எரிக்க நினைத்தவன் அல்லன் . ஆலிலோஸ் என் பயம் நீக்கியாக சில நாளும், துன்பம் பெருக்குபவனாகவும் ,இன்பம் தருபவனாகவும் பிறநாளும் இருப்பான் .சார்மன் ஒரு முட்டாள் ஆனால் ஆலிலோஸ் அறிவாளி அல்ல .
சார்மன் துரத்திய அன்றுமுதல் ஜோப்டோஸின் வேலை அமைதியாக என் பின் தொடர்தல் தான். நான் தங்க முத்துக்களை தூண்டில் போட்டபொழுது அவன் நீரில் கரைந்து விட்டான் . துண்டிலும், வலையும் ,நீரிரைத்தலும் எதுவும் அவன் வசம் அடங்கவில்லை.தப்பிக்கொண்டே என் பின் தொடர்ந்தான். இன்று
தான் காலிக்குப்பியின் ஓரத்தில் நின்று தன் தங்கவாள் வீச்சை ஆரம்பித்துள்ளான் .ஆலிலோஸ் ஒரு சுயநலவாதி . தான்தான் என்ற இருமாப்பு அவனுக்கு முக்கியமாகப்பட்டது . இப்பொழுது என் கேள்விகளை அவன் கேட்டுக்கொண்டே என்னுள் நுழைவதை விரும்பிக்கொண்டிருக்கின்றான்.அவனுக்கு
எப்படி தெரியும் இன்னும் சிறிது நேரத்தில் ஜோப்டோஸின் அகங்காரத்திற்கு என்னை நான் பலியிடப்போகின்றேன் என. சார்மனை பிரிந்தபொழுதே ஜோப்டோஸையும் கலட்டிவிட்டிருக்க வேண்டும் .
சார்மனுடன் கடைசியாக மலையேறிய பொழுது அவன் என்னைத்துரத்தி எரித்தானே யொழிய என்னுடன் வந்த ஜோப்டோஸ்க்கோ மற்றும் எனது நண்பர்கள் பிர்மோனிக்கோ ,பால்மனுக்கோ அது தெரியாது. அவர்கள் அவனிடம் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர் .ஆனால் நான் அறிமுகப்படுத்திய சார்மனை இன்னும் பிர்மோனியும் ,பால்மனும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர் .சார்மனுக்கு உறவேன்பதால் ஆலிலோஸ் அன்று மலையேற்றத்திற்கு வராமல் எங்கோ போய்விட்டான்.உறவினர்கள் முன் கெட்டவர்களாயினும் தான் கெட்டவன் என்று கெட்ட உறவுக்காரர்கள் கூட ஒருவருக்கொருவர்
கூறுவதில்லை என்பதால்.
என் நண்பர்களுக்குத்தெரியாமலேயே எரிமலை லாவாவை என் உடலில் புகுத்தி என்னுடலில் வெப்பத்தை தள்ளிவிட்டிருந்தான் சார்மன். வெடித்துச்சிதறிக்கொண்டிருக்கும் என் எலும்புத்துண்டுகளை தொட்டுக்கொண்டே பிர்மோனியும் ,பால்மனும் சிரித்துக்கொண்டிருந்தனர்
.அவர்களுக்கு சார்மன் எதையோ கொடுத்து மயக்கியிருக்கவேண்டும் . எனக்காக
வருத்தப்பட்டதாகவோ,ஆதங்கப்பட்டதாகவோ, எனக்கு ஏற்பட்ட அவஸ்தையை உணர்ந்தவர்களாகவோ, உணராதவர்களாகவோ,எதுவாகவோ அவர்கள் இல்லை.என் அருகில் மட்டும் இருந்தனர் .அந்த வெள்ளிப்பிஞ்சுக்கரம் பற்றி,வெப்ப வீதியினின்று வெந்து கொண்டிருந்த உடலினின்று புறப்பட்ட
என் எலும்புத்துண்டுகளும் ,சதைகளும் ,இரத்தமும் சிறிது சிறிதாக வெள்ளிப்பிஞ்சுக்கரம் ஒடிய ஏறி அந்த பச்சிளம் தேவதையின் மஞ்சள் தலைகொய்து வாயில் அடக்கி பல மணிநேரப்போராட்டத்தில் ,உத்வேகம் பெற்ற மஞ்சள் தலை சுழன்று ,சுழன்று வயிறு,குடல், நாளம் ,இதயம், நுரையீரல், சிரை ,தமனி என மாறி மாறி ஒவ்வொருசெல்லிலும் மைடாசிஸ், மியாசிஸ் பார்த்து சார்மனை துரத்தியடித்தபொழுது பிர்மோயும் ,பால்மனும் அவனுடன் அந்நியோனியமாக இருந்தனர் . வேண்டாம் நண்பர்களே,வேண்டாம் , சார்மன்
வேண்டாம் .அவன் உங்களை எரித்துவிடுவான். அவனை விட்டுவிட்டு வந்துவிடுங்கள் என்றேன் . எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை வர்கள் .நான் ஜோப்டோஸ்சுடன் வந்துவிட்டேன்.
அன்று எவ்வளவு நல்லவனாக இருந்தான் ஜோப்டோஸ்.உன்னால் சார்மனின் ஆழ்துளை உலகில் மேகமாகமுடியாது .சார்மனால் உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை . சார்மனுடன் இனி எந்த ஜென்மமும் சேராதே மேலும் அவன் உன்னை அடுத்த சந்திப்பில் கொன்றுவிடுவான் எனக்கூறி என்னுடன்
அதி்க ஒட்டுதலை ஏற்படுத்திக்கொண்டான் ஜோப்டோஸ் .அப்படிப்பட்ட ஜோப்டோஸ் இன்று என்னை கேவலப்படுத்தப்பார்க்கின்றான் . நன்றாகத்தெரிகிறது .எனது அறையில் உள்ள எனது புதிய
மூன்று நண்பர்கள் மத்தியில் ஜோப்டோஸு டன் எனக்கு அதிக பழக்கம் , ஜோப்டோஸ் இல்லாமல் என்னால் ஒருபொழுதும் இருக்கமுடியாது என அவர்களிடம் என் வார்த்தைகளை பிய்த்தெரிந்து கொண்டிருந்த
வேளையில் என்னை கேவலப்படுத்த தன்னை தயார்படுத்திவிட்டான் ஜோப்டோஸ் என உணரத்தொடங்கினேன் . நான் கண்களை மூடினேன் .
மூடியது ஏன் ? என்று புதிய நண்பர்கள் மூவரும் மாறிமாறி கேட்டனர் .
யோசனை செய்கின்றேன் என்றேன் . மாற்றி ...,மாற்றி .....யோசனையா ?..!..
என சிரித்தார்கள் .அவர்களிடம் ஜோப்டோஸின் சரிரத்தின் ஒரு ஒளி இருந்ததாக
எனக்குப்பட்டது . சிரிப்பு , சிரிப்பு சதிகாரர்களுக்கு இது பழக்கம் என்பதால்
கண்களை திறக்கவில்லை .இருந்தாலும் ஆலிலோஸ் மெதுவாகத்திற நான் அவனை அமிழ்த்தி விடுகின்றேன் என்று என் உதடருகில் சொன்னான் , கண்களை மெதுவாகத்திறந்தேன் . கெட்டுவிட்டது,எல்லாம் கெட்டுவிட்டது ஜோப்டோஸின் சூழ்ச்சியை ஆலிலோஸும் புரிந்துகொள்ளாமல்.
நான் கண்களை திறக்க ஜோப்டோஸ்ஸின் ஆயிரம் தங்க வாட்கள் வைர ஒளி தாங்கி என் கருவிழிகளை பாதி பாதி கூறாக்கி என் அறையில் சுற்றவிட்டு விட்டாது .அறை முழுவதும் ஜோப்டோஸ்ஸின் ஆதிக்கம்
தலைவிரித்தாடியது . நிமிடத்திற்கு நிமிடம் ஜோப்டோஸ் அறையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் மாற்றிக்கொண்டிருக்கின்றான் .தங்க வாட்களை அறை விளக்குகள் ஒவ்வொன்றிலும் வட்டமடிக்க வைத்து
என்னை நோக்கி ஏவிவிட்டிருந்தான். மின்விசிறியை தனது ஆக்கிரமிப்பில் அதி பயங்கரமாக உருமாற்றி என்னை பிரபஞ்ச வெளியில் ஒரு கரும்புள்ளியிடத்திற்கு தூக்கியெறிய அபாயகரமாக சுழல விட்டுக்கொண்டிருக்கின்றான் . திரைச்சீலைகூட வழித்தேடலாக உணரும்நிலையில் . அறையிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஜோப்டோஸின் ரூபமாற்றத்தால் நட்சத்திரங்களையும்,மின்னல்கீற்றையும் வெளியிட்டுக்கொண்டிருந்து. அறையே நிலைகுலைந்து ஆடிக்கொண்டிருந்தது. பொருண்மை தாங்காத பொம்மலாட்டத்தில் அங்குமிங்கும் . ஆலிலோஸிம் மெதுவாக எவரிடமோ இருந்து வெளியேறிக்கொண்டிருந்தான் .
மீண்டு் இமைகளை மூடிக்கொண்டேன் . ஜோப்டோஸ் ,ஜோப்டோஸ் ஏன் எழுந்து
வெளிப்பிதுங்கப்பார்க்கின்றாய் ?.. எத்தனை நாள் நான் கூறியபடி ஆடியிருக்கின்றாய், சொல் ? ஜோப்டோஸ் சொல் ?இன்று என்னை ஏன் இப்படி அவதிக்குள்ளாக்குகின்றாய் என்றேன் ...ஒரு கரத்தை என் கரத்துடன் பற்றிக்கொண்டு ...என்ன செய்ய ?...ஜோப்டோஸ் என் குரல்வளையினின்று ஐந்து அங்குலம் தள்ளி நின்றுகொண்டு காற்று குமிழிகளை சிறிது சிறிதாக தன் கைகளில் எடுத்துக்கொண்டு , என்னுடன் பேச ஆரம்பித்தான் .
நண்பா , என்றான் .ஆயிரம் ஃகதைகள் கொண்ட போர்வீரர்கள் என்னுடன் சேர்ந்தது மாதிரி தோன்றியது . ஆனால் ,அவனே ஏதோ சக்கரவர்த்தியாகிவிட்ட அடிமை போல .நான் பல நாட்கள் உன் அடிமையாக இருந்தேன் ,ஆனால் நீயோ என்னை அதிகமாக உன் வசத்திற்கு ஆட்பட வைத்து ... !!!...??. .. இதோ எனது அடிமைசாசனத்தை கிழித்தெரிந்து லாவாபோல் வெளிப்படப்பேகிறேன் . நீ என்னை இந்நிலையில் முழுமையாக ஒதுக்கி விட முடியாது .எனினும்
,என் எதிர்ப்பின் வளைக்கரங்களைமட்டுமேநீஒருவேளைவெற்றிபெற்றாயானால்
முறியடித்திருந்திருப்பவனாவாய் . மேற்கொண்டு என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றான் . எப்படியும் மூவர் முன்வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தப்போகிறான் .பின் என்ன செய்ய ..அவமானப்பட்டுத்தான் ஆக
வேண்டும் என முடிவு செய்து ஆலிலோஸின்கையைஉதறிவிட்டேன்.மீண்டும் ஒரு கரடுமுரடான சிரிப்பு நண்கர்களிடமிருந்து .கேட்டுக்கொண்டே
ஜோப்டோஸ் சதியின் கோரப்பிடியினின்று தப்ப எண்ணிஅவனுடன் சண்டையிட ஆரம்பித்தேன் . மெல்ல ,மெல்ல ஜோப்டோஸ்என் குரல்வளை பிதுக்கி ,வழிந்தோடி,களிமண் பட்டு தெரித்து ,பாதாளத்தை நோக்கி தன்
அகங்காரத்தை மட்டும் விட்டு,செல்லப்பார்க்கின்றானே. அகங்காரத்திற்கும் ,அடிமையின்சுதந்திரத்திற்கும் அதிகாரம் கொடுக்கக்கூடாது . ஏன் ஜோப்டோஸிக்கே இடம் கொடுக்கக்கூடாது என பிய்த்தெரியும் இரத்த நாளத்துடன் கண்மூடிஎன்னை மறைத்துக்கொணடு் .மீண்டும் அவன் அதிகாரத்திற்கு ஆட்படமுடியாதளவு ,வேகாஸ் நரம்பு தனது ஆழ்நிலைக்கு இழுத்துச்செல்ல , அதன் அடித்தளத்திற்கு தாவி.என்னை ? எப்படி ? ஜோப்டோஸ் ! .. தெரியவில்லை .
விடுதிப்பையன்அறைமுழுதும் ஏதோ தெளித்து என்னவே செய்துகொண்டிருப்பதைப்பார்த்தேன். தலைவலியின் காரணமாக ஒரு டீக்கு ஆர்டர் தந்து மீட்டுப்படுத்தேன் என்னை சரி செய்துகொண்டு .எங்கிருத்து இவைகள் தோன்றுகின்றன என எண்ணிப்பார்க்கின்றேன் . தெரிந்தும் ,தெரியாமலும் மறைந்துவிடும் இந்த வெட்டுக்கிளிகளின் அதிகார பலமில்லா ஆனால் அனைத்தையும் ஆடவைக்கும் அகங்கார பலத்திற்கு
அடிபணிந்து அவதைக்குள்ளாவது மிகவும் வேதனை . ஒரு காலகட்டத்தில் தோன்றிஒரு காலகட்டத்திற்குள் சென்றுவிடும் இவைகள் .ஆனால் ,காலகட்டம் என்பது எதிலிருந்து எதுவரை என வரையறுப்பது சுலபமல்ல .எனினும் காலகட்டம் என்ற ஒன்று கட்டாயம் இவற்றிற்கு உண்டு .ஜோப்டோஸின் காலகட்டமும் இப்படித்தான் என்னுள் ..

.
.

.






























7.ABALSYZ  தத்துவங்கள்













.

.
எந்த நாவலும் எட்டாத சிகரத்தை தொட்ட பிரசித்திபெற்ற"RAISING OF NEW HORISION '' என்ற நாவலை எழுதிய'' ABALSYZ " யை பேட்டிகாணவேண்டும் என்ற செய்தி கிடைத்ததும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் இருந்தது .இதுவே தலைப்புச்செய்தியாக அனைத்துத்தளங்களிலும் .அதுவும் உலகில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவரும் , இதுவரை எவருக்கும் பேட்டி தராதவரும் ,
பேட்டிகாணவே முடியாதவர் என்று கருதப்பட்டவரும் ,அதற்கு மேலாக ஆண்கள் என்றாலே பார்க்கக்கூட விரும்பாதவருமான ஒருவரை ,அதுவும் முழுக்க முழுக்க ஆண்களுக்காக போராடிவரும் "MANGO'' ராஸின் ஆதரவளாரான என்னை ...

.....

என்னை சந்திக்க வந்த காரணம் ?
ABALSYZ ....
ம்...
எத்தகைய கருத்துக்களையும் ,தரவுகளையும் எதிர்பார்க்கின்றீர்கள் ?.
அனைத்தையும் .
முதலில் ABALSYZ என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் "கன்நீடு " அதாவது கன்னியாகவே நீடித்திருத்தல் என்று எடுத்துக்கொள்ளலாம் .
VANDY என்பவர் தரும்விளக்கம் என்னவெனில்
ABALSYZ ல்
AB என்பது எப்படி ஆங்கில மொழியில்
AB முதல் அதுபோல்
நாங்கள் தான் உலகின் முதலானவர்கள் -ஆரம்பம் என பொருள் ,
ALஎன்பது -எல்லாவற்றிற்கும் ,ALL என்பதன் சுருக்கம்,
SY என்பது முன்னால் SEXY - EX - SEXY ல் பொதுவாகவுள்ள
EX யை நீக்க கிடைப்பது ,
Z என்பது எப்படி ஆங்கில மொழியில் முடிவான எழுத்தோ
அதுபோல் நாங்கள் தான்
உலகின் முடிவானவர்கள் என பொருள்.
ஆதி அந்தமான காமம் நீங்கிய அனைத்துமானவர்கள் என்பதைக்குறிக்கும் பதம் என்பதுவே.
புரியவில்லை ?
எழுத்துக்கள் ,வார்த்தைகள் தோன்றுவதற்கும் ,
அவை தோற்றுவிக்கும் அர்த்தங்களுக்கும், அவற்றை நாம் புரிந்துகொள்வதற்கும் அதன் பயன் மற்றும் பயன்பாடு தான் முக்கியமேயொழிய அதன் வழிமுறைகள் காரணமாக அமைவது இல்லை .
நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா ?.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று அது .
ABALSYZ கள் தோன்றக்காரணமானவர் VANDY என்பவர் ."திருமணம் என்பது காம வெறிபிடித்த ஆண்வர்க்கம் தங்களின் காமஇச்சையை தீர்த்துக்கொள்ள அவர்களுக்குள்ளே ஏற்படுத்திக்கொண்ட நயவஞ்சக ஏற்பாடு '' ,
'' பெண்கள் மட்டுமே உள்ள சமுதாயத்தை மட்டுமே நான் விரும்புகின்றேன்'' ,
''எனக்கு ஒர் கனவு உண்டு அது நான் இறப்பதற்குள்
பெண்கள் மட்டுமே உள்ள உலகத்தை நான்
பார்க்கவேண்டும் '',
''பெண்கள், பெண்கள் பெண்கள் மட்டுமே ''
என்று உணர்ச்சிகரமாகப்பேசி பெண்ணினத்தை தன்பால்கவர்ந்தவர் . VANDY யின் ''THE DEGREE'' பத்திரிக்கை ஆண்களின் பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களுக்கு வடிகாலானது .VANDY யால் V1 என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது .உலக அளவில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட அமைப்பாக அது இருந்தது .அந்த அமைப்பினர் ஆண்களை முற்றிலுமாக வெறுத்தனர் . அதன் நீட்சியாக தங்களிடம் உள்ள இயற்கை தன்மையை கூட முற்றிலும் ஒடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டனர் .முடிவாக மரபணுத்தொழில்நுற்பத்தைகப்பயன்படுத்த ஆரம்பித்தனர் . தமது உடம்பிலுள்ள ஜீன்களில் படிந்துள்ள ஆண்மை சார்ந்த அனைத்து அம்சங்களையும் ஜீன்ரைட்டரின் மூலம் அழித்து முழுக்க முழுக்க இயற்கைக்கு நியதிக்கு வேறான உயிரினத்தை படைத்தனர். அதற்குப்பின்னிட்டுத்தான் நாங்கள் "MANGO'' அமைப்பை ஏற்படுத்தினோம் .அப்படி ஜீன்ரைட்டரின் மூலம் உருவானவர்தான் நீ பேட்டிகாணப்போகும் ''ஜீடோ ''என்றழைக்கப்படும் மனித கூறுகளில் ஜீன்களால் உருவாக்கப்பட்ட ஜீன் உரு .அவைகளுக்கு இயற்கை தன்மை கிடையாது .சமுதாயம் ,சமயம் ,வாழ்க்கை நியதி என எதுவும் கிடையாது .ஆறாம் அறிவே இல்லே ,அற்றது. ABALSYZ என்பது ''ஜீடோ '' ஜீன்களின் இரகசிய குறியிடாக விஞ்ஞானிகள் வைத்துள்ளது என்ற கருதுகோள் ஒன்றும் இருக்கிறது . அவ்வளவே .
ABALSYZ யை பேட்டிகான ஏதுவாக அவர்களைப்பற்றிய சரியான புரிதலுக்காக தங்களின்
உதவியை நாடினேன் .எனக்காக இவ்வளவு நேரம் ஓதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது ராஸ் அவர்களே .தங்களுக்கு மிக்க நன்றி .
.
.......

பேட்டியை ஆரம்பிக்கலாமா?
ம்...
ABALSYZ உங்களின் பெயரைப்பற்றி ....?
ABALSYZ களில் முதலாவதாக நான் உதித்தேன்
அதனால் பெயராகியது .
தத்துவங்கள் பற்றி தங்களின் கருத்து ?
தத்துவங்கள் அனைத்தும் மதம் சார்ந்ததாகவும் ,மதங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்தை போற்றி
பாதுகாப்பதாகவும் இருப்பதால் நான் மதம் சார்ந்த தத்துவங்களை விலக்குகின்றேன் .
பகுத்தறிவு பற்றி ...
இது அனைத்தையும் கடந்த ஒன்று .
இதை அடைந்துவிட்டதா யாரும் கூறமுடியாது .
ஏனெனில் ,இது ஒவ்வொறு நிலையிலும் அதனை புதுப்பித்துக்கொண்டே செல்லும் . இது
உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது .
எப்பொழும் இப்பதம் இறந்த காலத்தைத்தான் குறிப்பதாக உணர்கின்றேன் .
இறந்த காலம் என்றால் ?
நான் பகுத்தறிவாதி என்றால் ,
இந்தக்கணத்திற்கு முன்பு என்று மட்டுமே
எடுத்துக்கொள்ள வேண்டும் ,அதுபோல .
தாங்கள் எதிரியாக நினைப்பது யாரை ?
யாரையும் அன்று .
நாங்கள் ஒடுக்கப்பட்டு இருந்தோம் . எங்களுக்கு போடப்பட்ட விலங்குகளை நாங்களே
உடைத்துக்கொண்டு வெளி வந்துள்ளோம் .
அந்தப்பயணத்தில் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் கண்டு அஞ்சியது கிடையாது .எங்களின் பயணத்தில் குறுக்கிட்டவர்களை எதிரியாக நினைத்தது கிடையாது .
எங்களின் பயணத்தில் குறுக்கிட்டவர்களை புறம் தள்ளி எமது லட்சியத்தை முன்வைத்து சென்று
கொண்டிருக்கின்றேம் .
உங்களின் லட்சியம் என்ன ?
முதலில் எமது மூதாதையர்களின் நிலையைக்கூறுகின்றேன் .
அவர்கள்
''ஆண்கள் எல்லாம் கணவர்கள் ,
பெண்கள் எல்லாம் மனைவிகள் ''
என்ற கேவலமான கட்டமைப்பினால் கடுமையாக ஒடுக்கப்பட்டனர் .
ஆணாதிக்க சக்திகளால்
உடலாலும் ,மனதாலும்
சுரண்டப்பட்டார்கள் .
வீடு என்னும் சிறையில் கைதிகளாக இருந்தனர் .
வீடு சிறைச்சாலையா?
ஆம் , அவர்கள் காலத்தில் .
மேலும் ,
அவர்களின் மனித சக்திகள் மண்ணேடு மண்ணானது .
அவர்களின் அழுத்தப்பட்ட ஆத்திரம் , துக்கம் ,கோபம்
அடுத்த தலைமுறை ஜீன்களை பாதித்தது . தட்டுத்தடுமாறி முன்னேறியவர்கள் வேலைக்குச்சென்ற
நிலையில் அங்கும் ஆண்களின் காம வெறியாட்டத்தால் தவித்தனர் .
கடும் போராட்டத்திற்கு
மத்தியிலும் ,
அடிவாங்கி ,அடிவாங்கி
கோபம் கொண்டெழுந்த கூட்டம்
ஆணின் காமத்தினின்று தப்பிக்க எண்ணியது . நிலைமை மோசமாகிப்போன காலகட்டத்தில்
உதிர்த்தவர்தான்
எமது விடிவெள்ளி VANDY
அவர் ஆண்களின் மரபோ ,அம்சங்களே சிறிதும் கலக்காத முழுக்க முழுக்க
VAND
என்ற ஜுன்களை உருவாக்கினார் .
அதன் தொடர்ச்சியான நீச்சியில் உருவானவர்கள் தான் V1 மறபினர் . அவர்கள் ''மேனேஸ் '' கட்டளையில்லாமல் பிறந்ததால் கற்பப்பை இல்லாத சுகத்தை அனுபவித்தனர் .
பிறகு எப்படி உங்களின் V1 மறபினரின் பிறப்புக்கள் !!!?.
நாங்கள் ஆய்வகத்தில் பிறக்கின்றேம் . ஆணின் அகந்தைகள் அகற்றப்பட்டு .
அப்படியெனில் ஆணினத்திற்கு எதிரிகளா?
அது தான் முன்னமே கூறிவிட்டேனே .
இயற்கை விதிகளை மீறுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?
அது நீங்கள் கற்பித்துக்கொண்ட இயற்கை விதி .
அது உங்களுடையது .
அதைப்பாதுகாப்பது உங்களின் கடைமையாக நினைத்து அழிந்து போய்க்கொண்டுள்ளீர் .
இல்லை ,தவறான புரிதல் உங்களிடம் தென்படுகிறது .
மரம்,செடி ,விலங்கினங்கள் ,பறவைகள் முதலியவற்றை பாருங்கள்
இயற்கை எதைக்கூறுகிறது என?
இனவிருத்தியை கூறுகின்றீர்களா .
ஏன் ,நாங்கள் பிறக்கவில்லையா .
எக்கலப்பும் இல்லாமல் நாங்கள் மட்டும் நாங்களாக தனித்தன்மையுடன் .
நீங்கள் இப்படி செய்தால் ஆணினம் அழிந்து விடாதா ?
''அதிகாரத்துடன் ,
சுரண்டிக்கொண்டும் ,
ஒடுக்கிக்கொண்டும் தான் இருப்போம்
என ஒரு இனம்
செயல்பட்டால்
அதன்
அழிவினை
அது விரைவில்
அடைந்துதான் தீரும் ''.
அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது .

ஆண்களே இல்லாத சமுதாயம் தான் உங்களின் செயல்பாடுகள் என்கின்றீர்களா ?

எமது சமுதாயத்தின் மலர்ச்சி தான் எமது லட்சியமே தவிர்த்து வேறு ஒன்றும் கிடையாது . மனித இனம் மட்டுமல்ல மற்ற அனைத்து உயிரினங்களிலும் எம்மைப்போன்ற ஆண் தன்மையற்ற அமைப்பினை ஏற்படுத்தி
நாங்கள் மட்டுமே உள்ள ABZ உலகை அமைப்பதுதான் எமது லட்சியம் .
எங்களின் VANDY ன் கனவும் அதுவே .
அதுவரை எமது பயணம் தொடரும் .
...
.
.
.

.










Download As PDF